Monday, September 06, 2010

கிழக்கிந்திய கம்பெனி 6 - இங்கிலாந்தில் கி.இ.கம்பெனி



கிழக்கிந்திய கம்பெனி இந்தியாவை சுரண்டிய கதை 1

கிழக்கிந்திய கம்பெனி 2 - ஆரம்ப காலம்

கிழக்கிந்திய கம்பெனி 3 - தேயிலை அரசியல்

கிழக்கிந்திய கம்பெனி 4 - இந்தியாவின் நெசவு தொழில் - வளர்ச்சியும் வீழ்ச்சியும்

கிழக்கிந்திய கம்பெனி 5 - கொள்ளை போன செல்வங்கள்



இது வரை இந்தியாவில் கிழக்கு இந்திய கம்பெனியின் செயல்பாடுகளை பற்றி பார்த்தோம். இப்பதிவில் இங்கிலாந்தில் கி.இ.கம்பெனியின் செயல்பாடுகளை பற்றி பார்ப்போம்.

கி.இ.கம்பெனி என்பது வியாபாரிகள், வங்கி முதலாளிகள், அதிகார இடைதரகர்கள் மற்றும் ஒரு சில பணகாரர்களின் கூட்டணியால் ஆரம்பிக்க பட்டது. தற்போதுள்ள பன்னாட்டு கம்பெனியினரை போலவே அதுவும் லஞ்சங்களை இங்கிலாந்தில் உள்ள அரசியல்வாதிகளுக்கு வாரி வழங்குவதில் கில்லாடிகள். இந்நிறுவனம் ஆரம்பிக்க பட்ட சில வருடங்களுக்கு பிறகு(1693) அது கணக்கில் காட்டி அரசியல்வாதிகளுக்கு அன்பளிப்பாக(!) கொடுத்த பணம் 100000 பவுண்டை தாண்டியது, இந்த பணத்தின் மதிப்பு அந்த காலத்தில் மிக அதிகமானது.

ஆரம்ப காலத்தில் கம்பெனியின் வருமானம் இந்தியாவிலிருந்து நடை பெற்ற வர்த்தகம் மூலம் தான் கிடைத்தது. இங்கிலாந்து அரசு கிழக்கிந்திய தீவுகளுக்கான வர்த்தகத்துக்கு
கி.இ.கம்பெனிக்கு ஏகபோக உரிமையை கொடுத்து இருந்தனர். இது தான் கம்பெனியின் லாபத்துக்கான துருப்பு சீட்டு. இந்த ஏக போக உரிமையை நிலை நிறுத்தி கொள்ள அரசியல்வாதிகளுக்கு பெருமலவில் லஞ்சம் கொடுக்க வேண்டியிருந்தது. அரசியல்வாதிகளுக்கு லஞ்சம் மட்டுமல்ல. இங்கிலாந்து மத்திய வங்கிக்கு பெருமளவில் கடனும் கொடுத்து வந்தது. இங்கிலாந்து அரசு நடத்தும் போர்களுக்கும் இங்கிலாந்து மத்திய வங்கி பணம் கொடுக்கும், அந்த பணத்தின் ஒரு பகுதி கி.இ.கம்பெனி கொடுத்து வந்தது.

கி.இ.கம்பெனியின் வளர்ச்சியால் அதில் பங்கு தாரர்களாக இருந்த பல பேர் பெரும் பணக்காரர்களாக மாறினர். இது அப்போது பரம்பரை பணக்காரர்களாக இருந்த ஒரு சில செல்வந்தர்களுக்கு பிடிக்க வில்லை. அது மட்டுமன்றி இங்கிலாந்தில் இருந்த நெசவு தொழில் லாபியும் கி.இ.கபெனிக்கு எதிரியாக இருந்தது. இவர்களின் வற்புறுத்தலால் இங்கிலாந்து அரசு கி.இ.கம்பெனியின் ஏக போக உரிமையை உடைக்க 1698 ல் புதிய கம்பெனியை தொடங்கியது. தற்போதைய பன்னாட்டு கம்பெனியினரை போன்றே வலுவான நிதி நிலையில் இருந்த கி.இ.கம்பெனியின் உரிமையாளர்கள் புதிய கம்பெனியின் பங்குகளை வாங்கி தள்ளினர். அந்த கம்பெனிக்கு பெரும் நெருக்கடி கொடுத்தனர். இருந்தாலும் அந்த புதிய கம்பெனி கி.இ.கம்பெனியுடன் போட்டி போட்டு சில காலம் இருந்தது. மீண்டும் பெரிய அளவு மறைமுக வேலைகளில் இறங்கிய கி.இ.கம்பெனியினர், இங்கிலாந்து அரசிடம் 3200000 பவுண்டுகள் கொடுத்து புதிய கம்பெனியை தன்னுடன் இணைத்து கொண்டனர். மேற் சொன்ன பணம் 3 ஆண்டுகளுக்கு கிழக்கிந்திய தீவுகளில் ஏக போக உரிமையுடன் வியாபாரம் செய்ய பொருந்தும். அதற்கப்புறம் ஒவ்வொரு ஆண்டும் பெருந்தொகையை அரசுக்கு கொடுத்து கொண்டே இருக்க வேண்டும்.

தற்போதைய பங்கு வர்த்தகம் போலவே அப்போதும் இருந்தது. கி.இ.கம்பெனியினர் ஒவ்வொரு முறை போரில் வெற்றி பெரும் போதும் இங்கிலாந்தில் அதன் பங்கின் மதிப்பு பெருமளவு உயரும். உதாரனமாக பிரான்சை வென்ற போது அதன் மதிப்பு 263 பவுண்டை தொட்டது. அது கொடுத்த டிவிடெண்ட் மதிப்பும் 12.5 சதவிதத்தை தாண்டியது. வங்காளத்தை வென்றவுடன் அதன் மதிப்பு இன்னும் கூடியது.ஒரு புறம் இந்தியாவில் இந்திய மக்களின் ரத்தத்தை உறிஞ்சி தன் லாபத்தை அதிக படுத்தியது. மறுபுறம் இங்கிலாந்தில் தன் பங்கின் மதிப்பு விடு விடுவென வேகமாக உயர்ந்தது.

கம்பெனியின் லாபம் அதிகமானவுடன் கம்பெனியின் உரிமையாளர்கள் அரசியலில் ஈடுபட்டு 1780ல் சுமார் 10 சதவித இங்கிலாந்து பாரளுமன்ற உறுப்பினர்கள் கம்பெனி சார்ந்தவர்களாக
இருந்தனர்.கி.இ.கம்பெனியின் அதிகார வளர்ச்சி போலவே அதன் எதிரிகளின் வளர்ச்சியும் இருந்து. கி.இ.கம்பெனி லாபியை உடைக்க பல பேர் பல காலம் கடுமையாக போராடினர். 1780களில் கி.இ.கம்பெனியின் உரிமையை பார்லிமெண்ட் அமைக்கும் கமிட்டியிடம் கொண்டு வர முயன்று வெற்றி பெறும் நிலையில் இருந்த போது கி.இ.கம்பெனிக்கு அதிகார வர்க்கத்திடம் இருந்த சக்தி மூலம் ஆட்சியையே கலைத்து விட்டனர்.

ஆனால் கி.இ.கம்பெனியின் மீதான எதிர்ப்பு மேன் மேலும் அதற்கு பின்னர் அதிகமானது.1813ம் ஆண்டு கொண்டு வரபட்ட புதிய சட்டம் மூலம் இந்திய நாட்டை ஆளும் தலைமை பொறுப்பு இங்கிலாந்து மன்னரிடம் கொடுக்கபட்டது. இந்தியாவிற்கு இடையேயான வியாபார ஏக போக உரிமையும் பறிக்க பட்டது. 1833ம் ஆண்டு முதல் அதன் வியாபர உரிமையும் ரத்து செய்யபட்டது, இங்கிலாந்து மன்னரின் பிரதிநிதியாக இந்தியாவை ஆளும் பொறுப்பு மட்டும் கொடுக்க பட்டது. முதல் இந்திய சுதந்திர போருக்கு பின் இங்கிலாந்து அரசின் நேரடி கட்டுபாட்டுக்குள் இந்தியா வந்தது.

சஞ்சீவ் மேத்தா என்ற இங்கிலாந்து வாழ் இந்தியர் தற்போது கி.இ.கம்பெனியை வாங்கி உள்ளார்.

கி.இ.கம்பெனிக்கும் இந்தியாவிற்குமான உறவில் முக்கியமாக பார்க்க வேண்டிய விஷயங்கள் சில .

1. மதவாதிகளுக்கும் அதற்கும் உள்ள உறவு. அந்த காலத்தில் போர்ச்சுகீசியர்கள் போன்ற ஐரோப்பியர்கள் தாங்கள் சென்ற காலனி நாடுகளில் எல்லாம் தங்களுடைய மதத்தை(கிறித்துவம்), முக்கியமாக தங்கள் மதத்தின் பிரிவை பின் பற்றாத வேற்று மதம் மற்றும் தன் மதத்தின் வேற்று பிரிவை சார்ந்த மக்களை கூட்டம் கூட்டமாக எரித்து (inquisition) கொன்ற காலம் அது. ஆனால் கி.இ.கம்பெனியோ தங்கள் ஆதிக்கம் செலுத்திய பகுதிகளில் கிறித்துவ மிஷினரிகளின் செயல்பாட்டுக்கு தடை விதித்திருந்தது. இது உண்மையிலேயே நம்ப முடியாத அதிசயம்.ஏனென்றால் அப்போது மத்தத்திற்கும் அதிகாரத்திற்கும் இடையேயான உறவு மிக நெருக்கமானது. ஆனால் மக்களிடையே தங்கள் மதத்தை புகுத்துவதால் மத ரீதியான பிணக்கு அதிகரிக்கும் என்று மிஷனரிகளை அனுமதிக்கவில்லை. ஆனால் வியாபாரிகள் போர்வையில் மத போதகர்கள் இங்கு வந்திருந்ததும், கி.இ.கம்பெனியில் மத நம்பிக்கை அதிகம் கொண்டிருந்த அதிகாரிகள் அவர்களை அனுமதித்ததும் உண்மை. 1813 ல் இங்கிலாந்து அரசு கட்டயமாக மிஷனரிகளை அனுமதிக்க ஆணை பிறப்பித்தது. அதன் பின் புற்றீசல் போல் வந்த மிஷனரிகளின் வருகையும், அவர்களின் செயல்பாடும் 1857ல் முதல் இந்திய சுதந்திர போர் நடை பெற ஒரு காரணியாக ஆயிற்று.ஆனால் அதற்கு பின் கிறித்தவ மிஷனரிகள் இந்தியாவின் கல்வி மற்றும் மருத்துவ வளர்ச்சிக்கு ஆற்றிய பங்கு அளவிட முடியாது என்பதும் குறிப்பிட தக்கது.

2. கி.இ.கம்பெனியின் கால கட்டத்தில் இங்கிலாந்தின் மேற்கேயும் இது போலவே வியாபரம் நடந்தது. ஆனால் அங்கு வியாபாரம் நடத்தியவர்களின் முக்கிய குறிக்கோள் மக்களை அடிமைகளாக பிடித்து விற்று லாபம் சம்பாதிப்பது. ஆனால் கி.இ.கம்பெனியோ அது போன்ற அடிமை வியாபாரத்தை இந்தியாவில் செய்ய்வில்லை(வேறு சில தீவுகளில் செய்தது உண்மை).

3. கி.இ.கம்பெனி தன் லாபத்துக்காக இங்கிலாந்து நெசவு தொழிலாளிகளின் எதிர்ப்பையும் மீறி இந்திய துணிகளை பெருமளவு ஏற்றுமதி செய்தது. இதனால் இந்திய தொழில் துறையும் ஆரம்ப காலங்களில் பெருமளவு விரிவடைந்தது

கி.இ.கம்பெனியின் செயல்பாட்டிற்கும் தற்போதைய பன்னாட்டு கம்பெனிகளின் செயல்பாட்டிற்கும் இடையே உள்ள ஒற்றுமை என்ன என்று யோசிப்பதை இந்த பதிவை படிக்கும் உங்களிடமே விட்டு விடுகிறேன்.

--

4 comments:

Anonymous said...

Megacorporation-நின் சிறந்த example. வியாபாரிகளை அழிக்க முடியாது. அவர்கள் ultimate survivalists. நீங்கள் Issac Asimov-வின் Foundation Trilogy படித்திருக்கிறீர்களா? Traders குணங்கள் பற்றி இரண்டு நல்ல chapters உள்ளது. The Traders and Merchant Princes. Economic Imperialism as a means for survival சிறப்பாக எடுத்தியம்பி உள்ளார்.

உங்கள் ஆர்வம் வியக்க வைக்கிறது.

சதுக்க பூதம் said...

//Megacorporation-நின் சிறந்த example. வியாபாரிகளை அழிக்க முடியாது. அவர்கள் ultimate survivalists.//
உண்மை. MNCக்களின் செயல்பாடு நியாயமாக இருக்க வைக்க அரசின் கண்காணிப்பு மிக அவசியம். சோவியத் மறைவு மற்றும் ரீகன் - தாட்சர் காலத்திற்கு பிறகு அது குறைந்து வருகிறது

//நீங்கள் Issac Asimov-வின் Foundation Trilogy படித்திருக்கிறீர்களா?//

அவரது புத்தகங்கள் படித்தது இல்லை. தகவலுக்கு நன்றி. நிச்சயம் நீங்கள் சொன்ன புத்தகங்களை படிக்கிறேன்

Indian said...

Hope you read this book?

The Corporation that Changed the World: How the East India Company Shaped the Modern Multinational by Nick Robins

சதுக்க பூதம் said...

வாங்க இந்தியன். அந்த புத்தகம் படித்தேன். தகவலுக்கு நன்றி. இனி இது போன்ற பதிவுகளில் அது சம்பந்தமான புத்தகங்களின் பெயரும் குறிப்பிடுகிறேன். அந்த தலைப்புகளில் விருப்பமுள்ளவர்கள் அந்த புத்தகத்தை படித்து மேலும் தெரிந்து கொள்ளளாம்