Sunday, March 09, 2014

நாணயம் இல்லாத நாணயம்

கடை தெருவில் காய்கறி வாங்கும் போது  பொருளின் மதிப்பிற்கு மேல் ஐந்து ரூபாயோ அல்லது பத்து ரூபாயோ அதிகம் வைத்து விற்றால் அதற்காக அரை மணி நேரம் வாதாடும் நாம், வாழ்நாள் முழுதும் உபயோக படுத்தும் பணத்தின் மதிப்பு நம் கண்ணுக்கு தெரியாமல் யாரால் எவ்வாறு பல மடங்கு குறைக்க படுகிறது என்றோ? நம் உழைப்பு நாளுக்கு நாள் எவ்வாறு மலிவாக்க படுகிறது என்பது பற்றியோ சிந்திப்பதில்லை.நம்மில் சிலர் அரசு பணத்தை வெளியிடும் போது, அதற்கு ஈடாக தங்கத்தை வைத்து கொண்டு வெளியிடுவதாக நினைக்கலாம். அதாவது  பொருளாதாரம் சார்ந்து பார்த்தால் அதை வலிமையான பணம் என்று கூறுவர். ஆனால் உண்மையில் பெரும்பான்மையான பணம் வெளியிடுவது கடனின் அடிப்படையில் தான் என்றால் உங்களுக்கு ஆச்சர்யமாக இருக்கும். நேர்மையற்ற அரசாங்கத்தின் கையில் இந்த கடன் அடிப்படையிலான பணம்  என்னும் ஆயுதம் கிடைத்தால் என்ன  நடக்கும் என்பதை தான் இந்தியா கடந்த சில வருடங்களாக பார்த்து கொண்டுள்ளது..பணவீக்கம் என்ற பெயரில் இந்த தலைமுறையினரின் வாழ்க்கை தரத்தை சீரழிக்கவும், வரைமுறையற்ற கடன் என்ற பெயரில் வருங்கால  சந்ததியினரை அடிமை சமூகமாகவும் மாற்றவும் கூடிய சாத்திய கூறுகளை நாம் இப்போது காண்கிறோம்.

வரவு எட்டணா! செலவு பத்தணா!

ஒவ்வொரு வீடு மற்றும் அலுவலங்களில் உள்ளது போல் தான் நாட்டிற்கும் வரவு மற்றும் செலவு உண்டு. நாட்டிற்கு வரவாக வரி , பொது சொத்துகளிலிருந்து (இயற்கை வளம் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள்) வருமானம் என பல  வகைகளில் வருமானம் வருகிறது. அரசு ஊழியர்கள் சம்பளம், அடிப்படை கட்டுமான வளர்ச்சி, வளர்ச்சி திட்டங்கள்மானியங்கள், ராணுவ தளவாடங்கள் இறக்குமதி, இலவச திட்டங்கள் என பல வகையிலான செலவீனங்கள் உள்ளன.வரவு மற்றும் செலவை திட்டமிட ஒவ்வொரு அரசாங்கமும் நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்கின்றனர். வரவை விட செலவு அதிகமாகும் போது கடன் வாங்க வேண்டியுள்ளது. நம்முடைய வீட்டு பட்ஜெட் என்றால் நாம் வாங்கும் கடனை நாம் திரும்ப செலுத்தியாக வேண்டும் என்று ஒரு முறைக்கு பல முறை யோசித்து செலவு செய்வோம்.ஆனால் அரசில் இருப்பவர்களுக்கோ, எவ்வளவு கடன் வாங்கினாலும் ஆட்சியாளர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்பட போகாததால் பொறுப்பற்ற முறையில் கடன் வாங்கி குவிக்கிறார்கள்.


கடந்த ஐந்து ஆண்டுகளில் அரசின் வரவு செலவு கணக்கு பற்றி பார்ப்போம். பொதுவாக கடன் வாங்க "விரலுக்கு ஏற்ற வீக்கம் வேண்டும்" என்று சொல்வார்கள். அது போல நாட்டின் பொருளாதார வளத்திற்கு ஏற்றவாறு   கடன் வாங்க வேண்டும். எனவே அரசின் நிதி பற்றாகுறை அந்த நாட்டின் ஒட்டு மொத்த உற்பத்தியின் மதிப்பில் (GDP) எத்தனை சதம் உள்ளது என்று பார்த்தால் அது வாங்கிய கடன் எவ்வளவு என்று புரிய வரும்.. கடந்த ஆறு ஐந்து வருடங்களில் அரசின் பற்றாக்குறை நாட்டின் ஒட்டு மொத்த வளர்ச்சியில் சுமார் ஆறு சதவித அளவில் உள்ளது..நாட்டின் பொருளாதார வளர்ச்சியை நம்பி பற்றாக்குறையை அதிகரித்து கொண்டே செல்லும் அரசாங்கம், நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறைந்தால் அதற்கு ஏற்றவாறு செலவீனங்களை குறைப்பது இல்லை. அது மிக பெரிய கடன் சுமைக்கு இட்டு செல்கிறது.. அது மட்டுமன்றி நாட்டின் பொருளாதாரமும் வரி வருவாயும் அதிகரிக்கும் போது, அந்த அதிக வருமானத்தை கொண்டு  கடனை அடைக்காமல், புதிய கடனின் அளவை மட்டுமே அதிகரித்து கொண்டே செல்கின்றனர்.

இந்த கடனின் அளவை அறிந்து கொள்ள மற்றொரு அளவீட்டை பார்ப்போம்.கடந்த ஐந்து ஆண்டுகளில் வருமானத்தை விட எத்தனை சதவீதம் அதிகம் செலவு செய்திருக்கிறார்கள் என்று மேலே உள்ள வரை படம் விளக்குகிறது. அதாவது 2010ம் ஆண்டு வருமனம் 100 ரூபாய் என்றால் செலவு 173 ரூபாய் செய்துள்ளது அரசு. 2008 ம் ஆண்டு வாக்கில் மேற்கத்தைய நாடுகளில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சி இல்லாமலேயே இந்த செலவீனங்கள் என்றால் நாடு எங்கு செல்கிறது என்று நினைத்து பாருங்கள்.

அன்னிய செலாவணி சமசீரற்ற நிலை

அரசாங்கத்தின் வரவு செலவு மற்றும் பற்றாக்குறையை பார்த்தோம். அடுத்து ஒட்டு மொத்த நாட்டின் நிலையை பார்ப்போம். ஒவ்வொரு நாடும் தனக்கு தேவையான பொருளை இறக்குமதியும், பிற நாடுகளுக்கு தேவையான பொருளை ஏற்றுமதியும் செய்கிறது. இந்த வரவு செலவிலும் ஒரு சம நிலை வேண்டும். ஆனால் இந்தியாவை பொருத்தவரை அங்கும் ஒரு சமமற்ற நிலை நிலவுகிறது.
  கீழே உள்ள வரை படம் , இந்தியாவின் ஏற்றுமதி - இறக்குமதி பற்றாக்குறையை மொத்த் உற்பத்தி திறனுடன் ஒப்பிட்டு காட்டுகிறது.
இதற்கு பெட்ரோல் விலையேற்றம், மக்களுக்கு இந்திய ரூபாயின் மீதான நம்பிக்கை இழப்பு (தங்க இறக்குமதி), ஏற்றுமதி வளர்ச்சி குறைவு போன்றவை முக்கிய காரணம்.இந்த பற்றாக்குறை பணத்தை பெரும்பான்மையாக டாலரில் ஈடு செய்ய வேண்டும் என்பது குறிப்பிடதக்கது.

அரசாங்கத்தின் பொருளாதார அணுகுண்டு

அரசங்கம் தன் பட்ஜெட் பற்றாகுறையை தீர்க்க கடன் வாங்குகிறது. சந்தையில் பல்வேறு வகையான பத்திரங்கள் மற்றும் வேறு பல பொருளாதார சாதனங்கள் கொண்டு கடன் வாங்குகிறது. பரஸ்பர நிதி நிறுவனங்கள், காப்பீட்டு நிறுவனங்கள், வங்கிகள்  மற்றும் பல முதலீட்டு நிறுவனங்கள் இந்த கடனை வாங்குகின்றன. இந்த கடன் பத்திரங்கள் சந்தையில் பிற பொருளாதார சாதனங்கள் போல் விற்க படும். இந்த கடன் பத்திரத்திற்கு அரசு வட்டி செலுத்த வேண்டும்.

 பல லட்சம் கோடி கடனை அரசாங்கம் பொது சந்தையில் வாங்கும் போது அங்கு முதலீடு செய்பவர்களின் மொத்த பணமும் அரசாங்கத்துக்கு போக வாய்ப்பு உள்ளது. அது மட்டுமன்றி முதலீட்டிற்கு தயாராக  உள்ள பணத்தின் அளவு மிக குறைவாகவும், முதலீட்டை ஈர்க்கும் கடனின்  அளவு மிக அதிகமாகவும் ஆகும் போது தேவை - அளிப்பு (Demand - Supply) இடையே ஒரு சமசீரற்ற தன்மை ஏற்பட வாய்ப்புள்ளது. அதன் விளைவாக அரசங்கம் வாங்கும் கடனுக்கு வட்டி அதிக அளவு செலுத்த வேண்டி இருக்கும். ஒவ்வொரு வருடமும் அரசு தனது கடனுக்கான வட்டிக்கு அதிகம் செலவு செய்ய வேண்டி வந்தால், வரும் காலத்தில் பட்ஜெட்டின் போது அரசுக்கு செலவிட கிடைக்கும் பணத்தின் அளவு பெருமளவு குறையும்.அது மட்டுமின்றி அரசாங்கமே தன்னுடைய கடனுக்காக சந்தையில் இருக்கும் பெரும்பாலான பணத்தை எடுத்துவிட்டால், தனது தேவைக்கு கடன் வாங்கும் பிற தனியார் துறை நிறுவனங்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாவார்கள். அவர்களின் வட்டி விகிதம் கட்டுபடியாகாத அளவிலோ அல்லது கடனே கிடைக்காமல் போகவோ வாய்ப்புள்ளது. எனவே அரசு தனது கடனுக்கான ஆதாரத்திற்கு வேறு ஆதாரத்தை பார்க்க வேண்டியுள்ளது.

அங்குதான் பிரச்சனையின் பரிமாணம் மிக பெரிய அளவில் அதிகரிக்கிறது. நமக்கு கடன் வாங்க மற்றும் பிற பொருளாதார பரிவர்த்தனைகள் செய்ய வங்கியாளர்கள் இருப்பது போல் அரசங்கத்துக்கும், நாட்டிற்கும்   ஒரு வங்கி உள்ளது. அது தான் இந்திய ரிசர்வ் வங்கி. அது நாட்டின் பண புழக்கம், பண வீக்கம், வட்டிவிகிதம், வங்கித்துறை மற்றும் நாணய மாற்று விகிதம் போன்றவற்றை கட்டுபடுத்துகிறது. இந்த நிறுவனத்துக்கு உள்ள மிக பெரிய அதிகாரம், பணத்தை தானே அச்சடிக்கலாம்.இது போல அரசாங்கம் கட்டுக்கடங்கா கடன் பிரச்ச்னையை ஏற்படுத்தும் போது மத்திய ரிசர்வ் வங்கி தன் செயல்பாட்டை தொடங்க ஆரம்பிக்கும். திறந்த சந்தை பரிவர்த்தனை (Open Market Operation) மூலம் சந்தையில் உள்ள அரசாங்க கடன் பத்திரங்களை வாங்க ஆரம்பிக்கும். இதற்கு ஆங்கிலத்தில் Quanitative Easing என்று சொல்வார்கள். அரசாங்கத்தின் கடனை காப்பீட்டு நிறுவனங்கள் வாங்கும் போது மக்கள் காப்பீடு செய்வதற்கு மாதா மாதாம் கொடுக்கும் பணத்திலிருந்து வாங்குவார்கள். மற்ற பரஸ்பர நிதி நிறுவனங்கள் தனது முதலீட்டாளர்களின் பணத்தை கொண்டு வாங்கும். மிக பெரிய கடனை வாங்கும் அளவு பணம் மத்திய ரிசர்வ் வங்கிக்கு எப்படி வரும் என்று யோசிக்கிறீர்களா?கடனை வாங்க  பணத்தை பெற ரிசர்வ் வங்கி  கடின படவில்லை. தாங்களே அச்சிட்டு கொள்ளலாம். அது தற்போதைய கம்ப்யூட்டர் யுகத்தில் அச்சிட பேப்பருக்கு கூட செலவு செய்ய வேண்டியதில்லை. கணிணி மென் பொருளில் ஒரு சில என்ட்ரிக்கள் போட்டால் மட்டும் போதும்! பணம் தயாராகி விடும்.


கடந்த ஐந்தாண்டுகளில் ரிசர்வ் வங்கி இது போல் உற்பத்தி செய்த பணத்தை பார்ப்போம். மேலே உள்ள வரை படத்தை பார்த்தால் அரசின் கடனில் எந்த அளவு பணத்தை புதிதாக அச்சிடுவதன் மூலம்  பெற்றுள்ளது என்று தெரியும். சராசரியாக அரசு தனது செலவில் சுமார்  25 சதவீதத்தை புதிதாக அச்சடிப்பதன் மூலம் பெற்றுள்ளது. பணத்தை  உருவாக்குவது எவ்வளவு எளிதாக இருக்கிறதே. ரிசர்வ் வங்கி பேசாமல் பணத்தை அதிக அளவு அச்சடித்து அனைவருக்கும் மாதா மாதம் கொடுத்தால் வறுமையே இருக்காதே என்று நினைக்க தோன்றும். உண்மையில் பார்த்தால் தற்போது பணமும் சந்தையில் ஒரு வித விலைபொருள் தான். எப்போது எல்லாம் பெரிய அளவில் புதிய பணம் சந்தையில் புழங்க விட படுகிறதோ அப்பொழுதெல்லாம் சந்தையில் உள்ள பணத்தின் மதிப்பு குறைய வாய்ப்புள்ளது.இது பணத்தின் மதிப்பை குறைத்து பணவீக்கத்தின் அளவை அதிகரிக்கும். இதனால் ஏற்படும் விளைவுகளை பற்றி பார்ப்போம்.

எங்கே போகும் பாதை?
பெரிய அளவிலான பற்றாக்குறை பட்ஜெட்டினால் பல தீமைகள் உள்ளன.

1.  ஒவ்வொரு ஆண்டும் அரசின் கடன் அதிகரித்து கொண்டே வரும் போது அந்த கடனுக்கு வட்டியாக தர வேண்டிய பணத்தின் மதிப்பும் அதிகரித்து கொண்டே வரும். வரும் ஆண்டுகளில் புதிய பட்ஜெட் போடும் போது அரசு தனது வருவாயில் பெரும் பகுதியை வட்டிக்கே செலவிட வேண்டி வரும். அதன் விளைவாக அடிப்படை கட்டுமானத்திற்கான வளர்ச்சி, வறுமை ஒழிப்பு, அடிப்படை தேவைகளுக்கான மானியம் போன்றவற்றிற்கு செலவிட பட கூடிய பணத்தின் மதிப்பு குறைந்து நாட்டின் வளர்ச்சியும், மக்களின் வாழ்க்கை தரமும் பாதிக்க பட வாய்ப்புள்ளது. அதாவது நமது சந்ததியினர் நமது கடனை சுமக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.

2. ஏற்றுமதி - இறக்குமதியில் பற்றாக்குறை ஏற்படும் போது அதை டாலர் மற்றும் பிற அன்னிய செலாவணிகள் கொண்டு தான் சரிகட்ட முடியும். இந்த சமநிலை மிக மோசாமாக போகும் போதும், அதே நேரத்தில் நாட்டின் வளர்ச்சி வீதத்தில் தளர்ச்சி ஏற்படும் போது நாட்டின் நாணயத்தின் மேலிருக்கும் நம்பிக்கை குறைகிறது. அது ரூபாயின் மதிப்பில் வீழ்ச்சியை ஏற்படுத்த வல்லது. ரிசர்வ் வங்கி அந்த தாக்கத்தை குறுகிய காலத்துக்கு தடுக்க முடியும் என்றாலும் நீண்ட காலத்தில் அது மிக மோசமான தாக்கத்தை ஏற்படுத்த வல்லது
அந்த பற்றாக்குறையை சரி செய்ய வெளிநாட்டு மூலதனங்களை ஈர்க்க வேண்டியது அவசியாமாகிறது. அப்போது போட படும் கடுமையான நிபந்தனைகளால் உள் நாட்டு தொழில் பாதிக்க வாய்ப்புள்ளது. அரசும் காலத்தின் கட்டாயமாக அதை ஏற்று கொள்ள வேண்டி வரலாம்.
 
3. மேலை நாடுகளை போலில்லாமல் இந்தியாவிற்கு  வறுமை ஒழிப்பு, மிகுந்த மானிய சுமை போன்ற பல சவால்கள் உள்ளன. ஆனால் அதே போல் வருமானத்திற்கான வழிகளும் பல உள்ளன. நிலக்கரி, பெட்ரொல் போன்றல் இயற்கை வளங்கள் மற்றும் தொலைதொடர்பு  ஸ்பெக்ட்ரம் போன்றவற்றை நியாயமான முறையில் ஏலத்தில் விட்டாலே அதிக வருவாய் ஈட்டமுடியும். ஆனால் ஊழல் அரசியல்வாதிகள் மற்றும் நாட்டை கட்டு படுத்தும் மிக பெரிய நிறுவனங்களின் ஏக போக உரிமையால் பல்லாயிரம் கோடி பணத்தை அரசு இழக்கிறது. அது மட்டுமன்றி நியாயமற்ற வரி விலக்கு மற்றும் பிற ஊழல்களால் ஏற்படும் வருவாய் இழப்பு கணக்கிலடங்கா. ஓட்டுக்காக அரசியல் கட்சிகள் நடை முறைபடுத்தும் மலிவான தேவையற்ற இலவச திட்டங்கள் இந்த பற்றாக்குறையை மேலும் அதிகமாக்குகின்றன.ஆனால் ஊழலையும், லஞ்சத்தையும் கட்டு படுத்தாமல் அரசு பட்ஜெட் பற்றாகுறையை காரணம் காட்டி வளர்ச்சி திட்டங்களையும், அடிப்படை மானியங்களையும், கல்வி மற்றும் சுகாரத்துக்கு செலவிடும் பணத்தை குறைத்து நாட்டின் ஒட்டு மொத்த வளர்ச்சியை பாதிக்க செய்வது தொடர்கதை ஆக வருகிறது.

4.  அரசு புதிதாக உற்பத்தி செய்யும் பணம் ஒழுங்காக நாட்டின் உற்பத்தி  பெருக்கத்திற்கு உதவினால் அது நாட்டின் வளர்ச்சிக்கு உதவும். அரசு செலவிடும் பணத்தில் பெரும்பான்மையான பகுதி உற்பத்தியை பெருக்கும் வகையில் செலவிட படுவதில்லை. அதன் விளைவு சந்தையில் குறைவான பொருளும் அதிக அளவு பணமும் இருக்கிறது. அது நாட்டில் பணவீக்கத்தை அதிக படுத்துகிறது. அதனால் பணத்தின் மதிப்பு குறைகிறது. கடந்த சில வருடங்களாக நாட்டில் உள்ள பணபுழக்கத்தையும், நாட்டின் ஒட்டு மொத்த உற்பத்தியையும் கீழே உள்ள வரைபடம் காட்டுகிறது.


ஆதாரம்- Equitymaster.com
ஒட்டு மொத்த பொருளாதார வளர்ச்சி அடிப்படையற்ற இந்த வீக்கத்தினால் மக்களின் வாழ்க்கை தரம் குறைகிறது. ஓய்வு கால தேவைக்காக சிறுக சிறுக சேமித்து காப்பீடு மற்றும் பிற வகையில் முதலீடு செய்யும் மக்கள் தங்கள் ஓய்வு காலத்தில் தாம் சேமித்த பணத்தின் மதிப்பு குறைந்து அடிப்படை தேவைக்கு செலவிடுவதே கடினம் என்ற நிலை அடைவர்.

நாட்டிற்கு  பொருளாதார ரீதியாக மாபெரும் வீழ்ச்சியையும், இன்றைய மற்றும் நாளைய சமுதாய மக்களின் வாழ்க்கை தரத்தை சீரழிக்கும் இந்த பற்றாக்குறை பிரச்சனை இன்றுவரை முக்கிய பிரச்ச்னையாக எந்த ஒரு  பிரதான அரசியல் கட்சியும் எடுத்து செல்லாதது கவலை அளிக்க கூடியதாக உள்ளது.

சிறகு இதழில் வெளிவந்த கட்டுரை.

நாணயம் இல்லாத நாணயம்