Wednesday, November 28, 2012

எழில் மிகு ஹவாய் - 5 எரிமலை எப்படி வெடிக்கும்?


பருவ நிலை மாற்றத்தால் பல தீவுகள் தண்ணீரில் மூழ்க போவது  அனைவரும் அறிந்ததே. ஆனால் ஒரு தீவு தற்போது தனது பரப்பளவில் விரிந்து வருகிறது என்ற செய்தியை கேட்டால் ஆச்சரியமாக இருக்கிறதா? ஆம். ஹவாய் பெருந்தீவு தனது பரப்பளவில் விரிந்து வருகிறது. அதற்கு காரணம் அங்கு உள்ள எரிமலை  வெடித்து வெளியாகும் குழம்பு கடலில் கலந்து நிலபரப்பை அதிகரிக்கிறது. உலகில் உள்ள ஒரு சில செயல் திறன் உள்ள எரிமலைகளில் ஹவாய் பெருந்தீவில் உள்ள எரிமலையும் முக்கியமானது.

எரிமலை பற்றிய செய்திகளை பாடத்திலும், ஊடகங்கள் மூலமும் சிறு வயதிலேயே கேள்வி பட்டிருப்பதால் எரிமலையை காணும் ஆசை எப்போதும் மனதில் இருந்து கொண்டே இருப்பதில் வியப்பில்லை.  உலகிலேயே மிக பெரிய எரிமலையான மோன லோவா எரிமலையும், .உலகில் உள்ள மிக பெரிய செயல் திறன் உள்ள எரிமலைகளாகிய மோன லோவா மற்றும் கிளோவியா எரிமலைகளும் ஹவாய் தீவின் பெருந்தீவில் உள்ளது. இந்துக்கள் இயற்கை சக்திகளை பஞ்ச பூதமாக வழி படுவதை போல ஹவாய்  பழங்குடியினரும் இயற்கை சக்திகளை வழி பட்டனர். அவர்களின் எரிமலைக்கான (நெருப்பு) கடவுளின் பெயர் பீலே.கிளோவியா எரிமலை தான் கடவுளின் உடலாக கருதபடுகிறது.ஹவாய் பழங்குடி இனத்தவரின் மதத்திற்கும் இந்து மதத்திற்கும் பல ஒற்றுமை உள்ளது. அது பற்றி பிரிதொரு பதிவில் விரிவாக எழுதுகிறேன்.

உலகிலேயே மிக பெரிய மலையான மோனலோவா மலை சுமார் 19000 கன மைல்கள் கொள்ளளவு கொண்டது. கடல்  மட்டத்திற்கு கீழே உள்ள அதன் அடி பகுதியிலிருந்து  அதன் உயரத்தை கணக்கிட்டால் அது சுமார் 56000 அடிகள்(17000 மீ) ஆகும். அதாவது எவரெஸ்ட் சிகரத்தை விட சுமார் 27000 அடிகள் உயரமானது.

ஹவாய் தீவில் உள்ள இந்த எரிமலைகளை கண்டு களிக்க பல்வேறு வழிமுறைகள் உள்ளன. அமெரிக்க அரசாங்கம் கிளோவியா  எரிமலை பகுதியில் எரிமலை தேசிய பூங்காவை அமைத்து உள்ளது. அங்கு பார்வையாளர்கள் அரங்கமும் அதனுள் எரிமலை அருங்காட்சியகமும் உள்ளது.எரிமலை பற்றிய அறிவியல் பூர்வமான செய்திகளை இங்கு காணலாம். பார்வையாளர்கள் அரங்கத்திற்கு வெளியில் இருந்து பார்த்தால் தற்போது ஆயத்த நிலையில் உள்ள ஒரு எரிமலையை பார்க்களாம். எரிமலையிலிருந்து வெளியாகும் கந்தக வாயுவை  அருகில் இருந்து பார்க்களாம்.

எரிமலை தேசிய பூங்கா பார்வையாளர் அரங்கிலிருந்து எரிமலை 


எரிமலை சார்ந்த பகுதிகளில் சுமார் 36 மைல் சுற்று வட்ட பாதையில் மோட்டார் வாகனத்தில் பயணித்த படியே கண்டுகளிக்களாம். அதனால் இந்த எரிமலையை Drive-in எரிமலை என்று கூட சொல்லலாம். அந்த பாதையில் ஆங்காங்கே நிலத்திலிருந்து வெளியாகும்  கந்தக வாயுவையும், எரிமலையிலிருந்து வெளியேறிய குழம்பு  நில பரப்பில் குவிந்து கிடப்பதையும் பார்க்களாம். பல வருடங்களுக்கு முன்னர் எரிமலை வெடித்த போது எரிமலை குழம்பு சீறி பாய்ந்த எரிமலை லாவா குழாய்கள்(lava tube) தற்போது குளிர்ந்து குடைய பட்ட குகைகள் போல உள்ளது. ஒரு காலத்தில் எரிமலை குழம்பு பாய்ந்த அந்த எரிமலை குழாய் வழியில் நாம் இப்போது நடந்து சென்று  பார்க்கவும் வாய்ப்பு உள்ளது.
லாவா குழாய்கள்

அது மட்டுமின்றி டிரக்கிங் செய்ய விருப்பம் உடையவர்களுக்கும், கேம்பிங் செய்ய விருப்பம் உடையவர்களுக்கும் அதற்கான வாய்ப்பு உள்ளது.

நிலம் மூலம் எரிமலையை பார்த்தால் ஓரளவிற்கு தான் பார்க்க முடியும்.
புகை படங்களிலும். வீடியோக்களிலும் காண்பது போன்ற சீறி பாயும் எரிமலையை காணலாம் என்ற நினைப்போடு எரிமலையை  காண சென்றால் ஏமாற்றம் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். எப்போதாவது ஒரு சில சமயங்களில் தான் எரிமலையிலிருந்து லாவா போக்கு அதிகம் இருக்கும். பெரும்பாலான சமயங்களில் எரிமலை குழம்பு சிறிய அளவே இருக்கும்.அவ்வாறு குறைவான எரிமலை குழம்பு இருக்கும் நேரத்தில் எரிமலையை ஓரளவு நன்கு பார்க்க வேண்டுமானால் ஹெலிகாப்டர் பயணத்தின் மூலம் தான் பார்க்க முடியும்.எரிமலையின் முழுமையான பார்வை கிடைக்க ஒரே வழி  எரிமலைக்கு நேர் மேலே வானத்திலிருந்து  பார்ப்பது தான். ஹெலிகாப்டர் பயண செலவு அதிகமாக இருந்தாலும் வாழ்நாளில் எப்போதாவது ஒரு முறை கிடைக்கும் இந்த வாய்ப்பிற்காக செலவழிப்பதில் தவறில்லை என்று முடிவெடுக்க தோன்றியது.எரிமலை உள்ள ஹீலோ பகுதியில் பெரும்பான்மையான நேரங்களில் மேக மூட்டத்துடன் காணபடும். மேக மூட்டம் உள்ள நேரத்தில் ஹெலிகாப்டரிலிருந்து பார்த்தால் கூட எரிமலை தெளிவாக தெரியாது. அதிர்ஷ்டவசமாக நாங்கள் சென்ற நேரத்தில் மேக மூட்டம் இல்லாமல் இருந்ததால் எரிமலையை நன்றாக தரிசிக்க வாய்ப்பு கிடைத்தது.

ஹீலோ விமான நிலையம் மற்றும் கோனா விமான நிலையத்திலிருந்து  ஹெலிகாப்டர் மூலம் சுமார் 1- 2 மணி நேரத்திற்கு எரிமலை பகுதிகளை சுற்றி பார்க்கவும், எரிமலையின் நேர் மேலேயிலிருந்து பார்த்து ரசிக்கவும் வழி வகை உள்ளது.ஹவாய் பெருந்தீவின் எரிமலையையும், அழகிய கடற்கறை பகுதிகளையும்,நீர் வீழ்ச்சிகள் நிறைந்த அடர்ந்த காட்டு பகுதிகளையும் பறவையை போல் வானத்தின் மேலிருந்து பார்த்து ரசிப்பது வாழ்நாளின் மறக்க முடியாத அனுபவம் என்றால் மிகையாகாது.

Bird's Eye View
எரிமலை குழம்பு படர்ந்த இடம்




விரியும் தீவு - அமெரிக்காவின் தென் முனை

பழைய எரிமலை( crater)

மலை அருவி




ஹவாயின் கடற்கரை அழகையும் , எரிமலை பற்றியும் பார்த்து விட்டோம். இனி வரும் பதிவில்  ஹவாயின் பசுமை அழகை பற்றி பார்ப்போம்.


முந்தய பகுதி

எழில் மிகு ஹவாய் - 4 Snorkeling  Parasailing

அடுத்த பகுதி

எழில் மிகு ஹவாய் 6 - பசுமை அழகு
 

Monday, November 26, 2012

எழில் மிகு ஹவாய் - 4 Snorkeling & Parasailing

ஹவாய் தீவுகளுக்கு மக்களை ஈர்ப்பதில் முக்கிய பங்கை வகிப்பது அங்கு Snorkeling செய்ய கிடைக்கும் வாய்ப்பு. ஸ்னார்கெலிங் என்பது முகத்தில் ஒரு நீச்சல்  முகமூடி அணிந்து சுமார் 30 சென்டிமீட்டர் நீளமுள்ள டியூபை வாயில் மாட்டி கொண்டு தண்ணீரில் நீந்தியவாறே கடலுக்கடியில் இருக்கும் பவழபாறைகளையும், வண்ண மய மீன்களையும் இதர கடல் வாழ் உயிரிணங்களையும் கண்டு களித்தபடியே கடலில் நீந்தி செல்வது தான்.வாயில் வைத்துள்ள டியூப் மூலம் சில நிமிடங்கள்  கடலின் நீருக்கடியில் இருந்து மூச்சு விட முடியும்.

ஸ்னார்கெலிங்ல் இரு வகை உள்ளது. ஒன்று கடற்கரை ஓரத்தில் ஆழம் குறைந்த பகுதியில் ஸ்னார்க்கலிங்(Shallow water Snorkel) செய்து கடல் வாழ் உயிரிணங்களை பார்ப்பது ,மற்றொன்று  ஓரளவு கடலின் உள்ளே மிதமான ஆழம் உள்ள பகுதியில்(deep water snorkel) ஸ்னார்க்கலிங் செய்து கடல்  வாழ் உயிரிணங்களை பார்ப்பது.

ஹவாய் பெருந்தீவின் பெரும்பான்மையான கடற்கரைகள் Shallow Water Snorkeling செய்ய ஏற்றவை. அதற்கு தேவையான உபகரணங்கள் கடற்கரை ஓரங்களிலேயே வாடகைக்கு கிடைக்கும்.

பல தனியார் நிறுவனங்கள் deep water snorkeling tourஅழைத்து செல்கின்றனர்.ஹவாய் பெருந்தீவில் பெரிய  நீராவி படகுகள் மூலம் கடலில் சிறிது தூரம் பயணம் செய்து ஸ்னார்க்கலிங் செய்ய ஏற்ற பகுதிக்கு கூட்டி செல்வார்கள். அந்த படகிலேயே ஸ்னார்க்கலிங் செய்ய தேவையான உபகரணங்களும், உயிர் காப்பு உடைகளும் கொடுப்பார்கள். பிறகு ஸ்ணார்க்கலிங் செய்ய தேவையான அறிவுரைகளை கூறுவார்கள். அதன் பிறகு ஒன்னரை மணி நேரம் கடலில் ஸ்னார்க்கலிங்  செய்து மகிழலாம். நன்கு நீச்சல் பயிற்சி பெற்றவர்கள் படகின் மேற்பகுதியிலிருந்து கடலில் குதிக்கலாம். நீச்சல் சிறிதும் தெரியாதவர்கள்( என்னை போன்றவர்கள்!) கூட உயிர்காப்பு உடை அணிந்து கடலில் சிறிது நேரம் மிதந்து பார்க்கலாம்.அது மட்டுமன்றி கண்ணாடி பதிக்கபட்ட மிதக்கும் பலகையும் உள்ளது. அந்த பலகையில் மிதத்தவாறே கண்ணாடி வழியே கடல் வாழ் உயிரிணத்தை காணலாம்.

பசுபிக் பெருங்கடலில் நீந்திய படியே கடல் வாழ் உயிரிணங்களை கண்டு களிப்பது உண்மையிலேயே மறக்க முடியாத அனுபவமாகும்.இந்த ஆழ்கடல் ஸ்ணார்க்கலிங் செல்வதில் மற்றொரு லாபம் பசுபிக் பெருங்கடலுக்குள் சுமார் 1 மணி நேரம் கடற்பயணம் செய்ய வாய்ப்பு கிடைக்கிறது. இந்த பயணத்தின் போது கூட்டம் கூட்டமாக  டால்பின்களையும் அதிர்ஷ்டம் இருந்தால் திமிங்களத்தையும் காணக்கூடிய வாய்ப்பு உள்ளது.நாங்கள் செல்லும் போது டால்பின் கூட்டத்தை காணும் வாய்ப்பு கிடைத்தது.


Parasailing



படகில் கட்டபட்ட பாராசூட்டில் இருந்து பறப்பது பாராசைலிங் எனபடுவது ஆகும்.கோனா கடற்கரை பகுதியில் இருந்து கடலுக்குள் படகு மூலம் அழைத்து செல்வார்கள். பிறகு படகில் கட்ட பட்ட பாராசூட்டில்  நம்மை கட்டி கொள்ள வேண்டும்.பிறகு சிறிது சிறிதாக பாராசூட்டின் கயிறை பட்டம் போல் மேலே விடுவர். அதிக பட்சமாக 1200 அடிவரை வானத்தின் உயரத்தில் பறக்க விடுவர். வானத்திலிருந்து பறவை போல் பறந்து பெருந்தீவின் கடற்கரையையும் மலைகளையும் கண்டுகளிக்கும் சுகமே தனிதான்.

முந்தய பகுதி
எழில் மிகு ஹவாய் 3 - ஆழ் கடலில் பவழபாறைகளும் வண்ண மீன்களும்

அடுத்த பதிவு
எழில் மிகு ஹவாய் - 5 எரிமலை எப்படி வெடிக்கும்?
--