Wednesday, July 23, 2014

நெல் மற்றும் கோதுமையில் Genetically Modified பயிர்களை சோதனைக்கு பயிரிட மோடி அனுமதி

மரபணு மாற்றம் செய்ய பட்ட பயிர்கள் நல்லதா? கெட்டதா?? என்ற விவாதம் பல ஆண்டுகளாக நடந்து வருகிறது. அமெரிக்கா போன்ற நாடுகளில் அனைத்து பயிர்களிலும் மரபணு மாற்றம் செய்ய பட்ட பயிர்கள் பயிரிட படுகின்றன. ஆனால் ஐரோப்பிய யூனியனில் உள்ள முக்கிய  நாடுகளான பிரான்சு மற்றும் ஜெர்மனி போன்ற நாடுகள் மனிதன் உணவுக்கு பயன் படுத்தும் பயிர்களில் மரபணு மாற்றம் செய்ய பட்ட பயிர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதற்கு மனிதனின் உடல் நலத்துக்கு தீங்கு ஏறப்டுத்த வழிவகை உள்ளது என்று தனது எதிர்ப்பை தெரிவிக்கின்றனர்.

இந்தியாவை பொருத்தவரையில் மரபணு மாற்றம் செய்ய பட்ட பயிர் வகைகள் உணவு பொருள் அல்லாத பருத்தி போன்ற பயிர்களில் அதிக அளவில் உபயோகிக்க படுகிறது.


நரேந்திர மோடி தலைமையிலான அரசு தற்போது நெல் மற்றும் கோதுமை போன்ற அத்தியாவசிய உணவு பயிர்களில் மரபணு மாற்றம் செய்ய பட்ட பயிர்களை விளைநிலங்களில் விளைச்சல் சோதனைக்காக பயிரிட அனுமதித்துள்ளது.இது ஊடகங்களில் கூட மிக பெரிய செய்தியாக வரவில்லை.

சென்ற காங்கிரஸ் அரசு மரபணு மாற்றம் செய்ய பட்ட கத்திரியை வெளியிட  முடிவு  போது அனைத்து ஊடகங்களிலும் அது பற்றி மிக பெரிய செய்தியாக வெளியிட பட்டு, பல்வேறு இயக்கத்தை சேர்ந்தவர்கள் இந்தியாவை அன்னியர்களுக்கு அடிமை படுத்துவதாக கூறி மிக பெரிய போராட்டம் நடத்தி அந்த முயற்சியை தடுத்து நிறுத்தினர்.அதனால் முந்தைய காங்கிரஸ் அரசு மரபணு மாற்றம் செய்ய பட்ட பயிர்களை பயிரிட அதற்கான கமிட்டி ஒரு வருடம் முன்பே அனுமதி அளித்தும் ,  அதை செயல்படுத்த சுணக்கம் காட்டியது.


ஆனால் தற்போது நரேந்திர மோடி தலைமையிலான அரசு முக்கிய உணவு தானிய பயிர்களான நெல் மற்றும் கோதுமையில் மரபணு மாற்றம் செய்ய பட்ட பயிரக்ளுக்கான சோதனை பயிரிடலை விளைநிலங்களில் பயிரிட முடிவு செய்த போது அந்த எதிர்ப்பு குரல்கள் எல்லாம் எங்கு போயின என்று தெரியவில்லை.பாஜக சாதனைகளை பட்டியலிடும் பசு கழிவு சாத்திரம் பேசும் இந்துத்துவவாதிகள் இந்த செய்தியை "சொல்ல மறந்த செய்திகள்" வரிசையில் வைத்து விட்டார்கள்.

நான் முன்பு கூறியது போல் தனிபட்ட முறையில் விவசாயத்தில் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதை அறிவியல் மூலமாக நிருபிக்க படாத காரணங்களை கொண்டு எதிர்ப்பதை நான் விரும்பவில்லை. இது போன்ற தொழிற்நுட்பங்களை நடு நிலையான உணவு மற்றும் பயிர் பாதுகாப்பு ஆராய்ச்சி செய்து அதில் வெற்றி பெற்றால் கட்டாயம் ஏற்று கொள்ள வேண்டும்.

என்னுடைய வியப்பு எல்லாம் பத்திரிக்கை மற்றும் மரபணு மாற்ற எதிர்ப்பு இயக்கங்களின் எவ்வாறு மிதமாக மாறியது என்பது தான்.

Sunday, July 20, 2014

சான்பிராசிஸ்கோவில் முத்தமிழ் விழா

வளைகுடா பகுதி தமிழ் மன்றம் சார்பில் முத்தமிழ் விழா ஜூலை 19ம் தேதி சான் ரோமான் நகரில் மிக விமர்சையாக நடைபெற்றது. மன்றத்தலைவர் திரு சோலை அழகப்பன் வரவேற்புரையுடன் தொடங்கியது. சான்பிராசிஸ்கோ இந்திய தூதரக அதிகாரி திரு பாஸ்கர் அவர்கள் விழாவின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.அசோக் சுப்ரமணியம்
ஒருங்கிணைப்பில் வளைகுடா பகுதி குழந்தைகளின் இனிய குரலிலும் இசையிலும் கவிஞன் கண்ட கனவு என்ற தலைப்பில் பாரதியாரின் பாடல்கள் பாடபட்டன.


வளைகுடா பகுதியில் முதல் முறையாக உள்ளூர் மக்களை கொண்டு நீயா? நானா மாதிரியில்  விவாத மேடை நடைபெற்றது. திரு அறிவொலி தலமையில் "உண்ண உண்ண திகட்டாதது! உடல் ஆரோக்கியத்துக்கு உகந்தது சைவமா? அசைவமா?? என்ற தலைப்பில் மிக சுவையான விவாதம் நடந்தது. விவாதத்துடன் ஆரோக்கியத்துக்கு உகந்த உணவு பொருட்கள் பற்றிய குறிப்பும் பகிரபட்டது.




நிகழ்ச்சியின் முத்தாய்ப்பாக இந்தியாவிலிருந்து வந்திருந்த தோல்பாவை கூத்து கலைஞர் திரு அம்மாபேட்டை கணேசன் மற்றும் ஹரிகிருஷ்ணண் ஆகியோரின்  தோல்பாவை கூத்து நடைபெற்றது. தமிழகத்தின் தொன்மையான கலை வடிவங்களில் ஒன்று தோல்பாவை கூத்து. இதற்கான பொம்மைகள் மிருகங்களின் தோலைக் கொண்டு வடிவமைக்கப் படுகின்றன.பின்புலத்தில் இருந்து ஒளி பாய்ச்சப்பட்டு அதன் பிரதிபலிப்பு முன்னே உள்ள வெள்ளை திரையில் விழுமாறு செய்யப்படுகிறது. பொம்மைகளை இயக்கும் கலைஞர்களின் குரலும் , குரல் மூலமாய் வெளிப்படும் பாவனைகளும் எள்ளல் மிகுந்த நகைச்சுவையும் வாழ்நாள் முழுதும் மறக்க முடியாத அனுபவத்தை தருகின்றன.குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை .ராமாயணத்தில் வாலி வதம் படலத்தை தோல்பாவைகளை கொண்டு செய்து காட்டியதை  அரிய வாய்ப்பாக கருதி  பார்த்து ரசித்தனர். வளைகுடா பகுதி தமிழ் மன்றத்தினர் இது போன்ற தமிழர்களின் தொல்கலைகளை வளைகுடா மக்களுக்கு தொடர்ந்து செய்து காட்ட முயற்சி செய்யபடும் என உறுதி அளித்தனர்.


வட அமெரிக்க தமிழ் சங்க பேரவையின் அடுத்த ஆண்டு விழா வளைகுடா பகுதியில் நடைபெறும் என அறிவிக்க பட்டது.

Sunday, July 13, 2014

பறையும் பரதமும் ஒன்று கூடிய FeTNA 2014 தமிழர் விழா

வட அமெரிக்காவிலுள்ள தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்பான வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் 27 ஆவது தமிழ் விழா ஜூலை 4 மற்றும் 5 ஆம் நாட்களில் மிசௌரி மாகாணத்தின் செயின்ட் லூயிஸ் மாநகரத்தில், இராபர்ட் கால்டுவெல் இருநூற்றாண்டு விழாவாகவும்,  பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை. ப. சுந்தரேசனார் அவர்களின் நூற்றாண்டு விழாவாகவும் "தமிழர் அடையாளம் காப்போம் ; ஒன்றிணைந்து உயர்வோம் " என்ற மைய நோக்குடன் நடைபெற்றது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையிலும் சாஸ்திரிய தமிழிசை முதல் மக்கள் இசை  விரும்பிகள் வரையிலும், பாரம்பர்ய கலையிலைருந்து நவீன கலை விரும்பிகள் வரையிலும் அனைவரின் விருப்பத்தையும் முழுமையாக பூர்த்தி செய்யும் வகையில் இந்த நிகழ்ச்சி இருந்தது.இரண்டு நாட்கள் பல்வேறு அரங்குகளில் இணையாக நடைபெற்ற பல நிகழ்ச்சிகளை   வட  அமெரிக்காவின் பல்வேறு பகுதியிலிருந்தும் வந்திருந்த 1500க்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் மாறி மாறி ஒவ்வொரு அரங்கத்திலும்   ஆர்வ பெருக்குடன் கண்டு களித்தனர்.
இரு நாளும் நிகழ்ச்சிகள் திருக்குறள் மறை ஓதுதலுடன் தொடங்கியது.மக்களுக்கு வாழ்க்கையில் மறைந்திருக்கும் உண்மகளை தினம் தினம் சொல்லுவதுதான் ஓதுதல். எனவே இந்த மறை ஓதுதலை தினமும் வாழ்க்கையில் அனைவரும் கடைபிடிக்க வேண்டியது அவசியம் ஆகும்.


இவ்விழாவில் முதல்முறையாகக் குறும்படப் போட்டிகளும் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. ஹாலிவுட் இயக்குநர் திரு. சுவாமிகந்தன் மற்றும் மிசிகன் பல்கலைக்கழக பேராசிரியர் முனைவர் .சொர்ணவேல் ஈஸ்வரன் ஆகியோர் சிறந்த படங்களைத் தேர்ந்தெடுத்துப் பரிசுகளும்  அளித்தனர்.
இவ்விழாவில் நடைபெற்ற முத்தாய்ப்பான நிகழ்ச்சிகள் பற்றி பல்வேறு தலைப்புகளில் காண்போம்.

தமிழ் ஆர்வலர்களுக்கான நிகழ்ச்சி.

தமிழகத்திலிருந்து கவிஞர் மற்றும் உணர்வாளரான திரு . குட்டி ரேவதி அவர்கள் வந்திருந்து பண்டிதர் அயோத்திதாசர் அவர்களைப் பற்றியும், எழுத்தாளர் திரு. தியோடர் பாஸ்கரன் அவர்கள் "திரைப்படங்களில் தமிழிலக்கியம்" என்ற தலைப்பிலும் உரையாற்றினர். தியோடர் பாஸ்கர்  உரையாற்றிய போது தமிழிலக்கியம் சென்ற அளவிற்கு தமிழ் சினிமா சென்றடையவில்லை என்றும் ஏழை படும் பாடு மற்றும் யாருக்காக அழுதார் முதலிய படங்கள் இலக்கியத்திலிருந்து வந்த மிக முக்கியமான திரைபடங்கள் என்றார். நூற்றாண்டு நாயகர்களான குடந்தை சுந்தரேசனார்  பற்றி திரு ராமமூர்த்தி அவர்களும் ராபர்ட் கால்டுவெல் பற்றி ஆல்பர்ட் செல்லதுரை அவர்களும் பேசினார்.



கவிஞர் குட்டி ரேவதி அவர்கள் தலைமியில் "கிளம்பிற்றுக்காண் தமிழர்  படை " என்ற தலைப்பில் நடைபெற்ற கவியரங்கத்தில் இலக்கியம் வழி,இணையம் வழி,மேடை வழி, மேசை வழி,கலை கொண்டு,பண்பாடு போற்றி, அரசியல் வழி, அறிவியல் வழி என பல தலைப்புகளில் கவிதை  வாசித்தனர்.  நிறைவாக பேசிய கவிஞர் குட்டி ரேவதி, இன்றைய இளம் கவிஞர்களுக்கு முன் மாதிரியானவர் கவிஞர் பிரமீள் என்று புதிதாக வளரும் கவிஞர்களுக்கு பாதை காட்டினார்.அது மட்டுமின்றி இன்றைய தமிழ் சமுதாயத்தில் தமிழர் உணர்வுகள் செயல் வடிவம் பெற தமிழ்  உணர்வாளர்களை கொண்டு ஊடக கல்வி கூடம் அமைக்க வேண்டியதன் அவசியத்தையும் இன்றைய தமிழகத்தில் ஒடுக்க பட்ட பெண்களுக்காக எழுத வேண்டியதன் அவசியத்தையும் எடுத்துரைத்தார்.



மருத்துவர் எழிலன் தலைமையில் அமெரிக்க தமிழர் கலந்து கொண்ட தமிழரின் வளர்ச்சிக்கு அடிப்படை உணர்வா?அறிவா? என்ற தலைப்பில் கருத்துக்களம் சிறப்பாக நடைபெற்றது. மருத்துவர் எழிலனின் துடிப்பான பேச்சும், சமயோசிதமான உரையாடல்களும் பார்வையாளர்களை  கவர்ந்தது.முனைவர் இராமகி அவர்கள் தமிழர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைவதை பற்றியும் தமிழின் தொன்மை பற்றியும் , தமிழ் எழுத்துருவை மாற்ற முயர்ச்சிப்பவர்களின் சதி பற்றியும் விரிவாக எடுத்துரைத்தார்.



அமெரிக்க தமிழரான வைதேகி ஹெர்பர்ட் அவர்கள் சங்கத்தமிழில் மீது கொண்ட ஆர்வம் காரணமாக தமிழகம் வந்து பழம் தமிழை  பதம் பிரித்து படிக்க கற்று கொண்டு ஒரு பல்கலைகழகத்தில் பல பேர் கொண்டு செய்ய வேண்டிய வேலையை 20 ஆண்டுகளாக கடுமையாக உழைத்து  அதையே தவமாக கொண்டு அனைத்து சங்க தமிழ் நூட்களையும் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார். அனைத்து மக்களும் சங்கதமிழ் படித்து இன்புற வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்தார்.அவருடைய பேச்சிலிருந்து ஒரு சுவையான தகவல். நாம் கடைகளில் வாங்கும் தூர்தால்  என்பது துகர் -> சிவப்பு->துவரம் பருப்பு என்ற தமிழ் சொல்லிலிருந்து வந்ததாம்.
6-vaidehi.JPG

இவ்விழாவில் நடைபெற்ற முத்தாய்ப்பான நிகழ்ச்சிகளில் ஒன்று இலக்கிய வினாடிவினா எனலாம்.  3 மாதத்துக்கு முன்பே பாடதிட்டம் வகுக்க பட்டு பத்துப்பாட்டு, சிலப்பதிகாரம்,திருக்குறள்,இலக்கணம் என பல்வேறு இலக்கண இலக்கியங்களிலிருந்து கேள்விகள் கேட்க பட்டன.சிறுவர்கள்  முதல் பெரியவர்கள் வரை ஆர்வமாக இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.சிறுவர்களுக்கான தமிழ்த்தேனீ போட்டி திருக்குறள், பேச்சு போட்டி, பாடல்களிலிருந்து கேள்வி, ஒருவார்த்தை (தனி நடிப்பு மூலம் வார்த்தை கண்டுபிடிப்பு) போன்ற பல வகைகளில் நடைபெற்றது.



தமிழ் உணர்வாளர்களுக்கான நிகழ்ச்சி

உலக தமிழ் மன்றம் சார்பில் தமிழக இளைஞர்களுக்கு நாம் செய்ய வேண்டியன என்ன என்பது பற்றியும் ஈழமக்களுக்கு நாம் செய்யவேண்டியது பற்றியும் விவாதம் நடைபெற்றது. இதில் பல அமெரிக்க தமிழ் ஆர்வலர்கள் பங்கு பெற்றனர். மருத்துவர் எழிலன் அவர்கள் எவ்வாறு  அறிவியல், பரிணாமம், வானியல், பகுத்தறிவு கருத்துகளை கிராமபுறங்களுக்கு எடுத்து செல்வது பற்றியும் பேசினார்.   திரு எக்ஸ்னோரா நிர்மல் அவர்கள் ஈழ தமிழர் இன படுகொலையை தமிழர் இன படுகொலை என்று சர்வதேச அரங்கில் எடுத்து செல்லாமல் இலங்கை முஸ்லீம்கள்,  இலங்கை கிறித்துவர்கள் மற்றும் இலங்கை இந்துக்கள் இன படுகொலை என்று சர்வதேச அரங்கில் எடுத்து செல்ல வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.சென்னையை சுத்தபடுத்த எக்ஸ்னோரா என்ற அமைப்பின் மூலம் அவர் எடுத்து வரும் சீரிய பணியை பற்றி நாம் அறிந்திருப்போம். அனால் அவர் ஈழ தமிழர்களின் நீதிகிடைக்க நடத்தும் போராட்டம் மிகவும் பாராட்டுக்குறியது.


தமிழ் கல்வியின் அவசியத்தையும் கோவில்களில் தமிழ்  வழி வழிபாட்டு முறை கொண்டுவருவதன் அவசியம் பற்றியும் அனைவரும் கர்ப்பகிரகம் செல்ல வழி விடுவது பற்றியும் பேரூர் மருதாசல அடிகளார் உரை ஆற்றினார். அதற்காக அவர் எடுத்து வரும் முயற்சி பற்றியும் எடுத்து கூறினார்.



அமெரிக்க தமிழர் அரசியல் தமிழர் செயற்குழு கூட்டம் (USTPAC - US Tamil Potical Action committee) தமிழ் உணர்வாலர்களால் அதிகம் எதிர்பார்க்க பட்ட கூட்டம் ஆகும். இந்த அமைப்பின் தலைவர் திரு காருண்யன் அருளானந்தன் அவர்கள் ஈழ இனபடுகொலைக்கு  பிறகு அமெரிக்க அரசு மற்றும் அரசியல்வாதிகளை நெருங்க முடியாத நிலையில் இந்த அமைப்பை தொடங்கிய விதம் பற்றி கூறினார். இன்று உலகிலேயே வல்லரசாக இருக்கும் அமெரிக்காவில் திறந்த நிலை அரசியல் சூழல் நிலவுவதால் ஈழ மக்களின் நீதி கிடைக்க லாபியிங் மற்றும்  பல்வேறு முறை கொண்டு அமெரிக்க அரசியல்வதிகள் மற்றும் அரசை நெருங்கி வருவதில் ஏற்பட்டு வரும் முன்னேற்றம் பற்றி கூறினார். சர்வதேச  மனித உரிமை மாநாட்டில் இலங்கைக்கு எதிராக  அமெரிக்க தீர்மானம் கொண்டுவருவதில் இந்த அமைப்பு முக்கிய  பங்காற்றியுள்ளது.தற்போது பொது விசாரனை கொண்டுவர இந்த அமைப்பு செய்துவரும் முயற்சி பற்றியும் கூறினார்.  சர்வதேச போர் குற்றங்களுக்கான படிப்பிற்கான அமெரிக்க பேராசிரியர் ஒருவர்  பேசும் போது இலங்கைக்கு எதிராக போர்குற்றம் பற்றி சர்வதேச விசாரணை கொண்டுவர  வாய்ப்புகள் அதிகம் உள்ளன என்றும் எடுத்துரைத்தார்.




உலக தமிழ் அமைப்பின் செயல்பாடு
உலகத் தமிழ் அமைப்பின் முன்னாள் தலைவர் திரு. செல்வன் பச்சமுத்து அவர்கள் அமைப்பின் செயல்பாடுகள் குறித்து உரையாற்றினார். அவர் பேசுகையில், உலகத் தமிழ் அமைப்பு 20 ஆண்டுகளுக்கு முன்னாள் துவங்கிய அமைப்பின் நோக்கம் உலகலாவியத் தமிழர்களின் தன்னுரிமையை நிலைநாட்ட உதவுவது. குறிப்பாக ஈழத்தமிழர்களின் துயரத்தை உலகிற்கு உணர்த்தி அவர்களுக்கு நீதியும், உரிமையையும் வாங்கி கொடுப்பது இந்த அமைப்பின் முக்கியக் குறிக்கோள். சென்னையிலும், புது தில்லியிலும் கருத்தரங்கங்கள் நடத்தவுள்ளது குறித்தும் திரு. செல்வன் பேசினார்.
உலகத் தமிழ் அமைப்பின் உள்ளரங்கக் கூட்டத்தில் முனைவர் சேரன் அவர்கள் பேசும்போது பின்வருமாறு கூறினார், இந்த அமைப்பு அமெரிக்காவிலும் இந்தியாவிலும், தமிழுக்கும், தமிழ் மக்களுக்கும் பணியாற்றிவருகிறது. இந்தியாவிலிருந்து தொல். திருமாவளவன், டி. இராஜா போன்றோர்களை அழைத்துவந்து அவர்களுடன் தமிழினச் சிக்கல் குறித்த விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழத்தில் செயல்பட்டுவரும் பல தமிழ் அமைப்புகளுடன் இணைந்து தமிழினத்திற்கு பெரும்பணியாற்றி வருகிறது.
இக்கூட்டத்தில், கவிஞர் குட்டி ரேவதி அவர்கள் தமிழகத்தின் நிலையை அழகாக எடுத்துக் கூறினார். நமக்கு ஒரு ஊடகமில்லை என்பதை போக்க நாம் முயல வேண்டும் என்று கூறியது அனைவரையும் கவர்ந்தது. தொடர்ந்து மருத்துவர் எழிலன் அவர்கள் செய்ய வேண்டிய செயல்கள் குறித்து பேசினார். திரு. நிர்மல் அவர்களும் தனது கருத்துகளை எடுத்துரைத்தார்.

தமிழ் இசை மற்றும் மக்கள் (பாரம்பர்ய) கலை ரசிகர்களுக்கான நிகழ்ச்சி

மக்கள் கலை மற்றும் தமிழ் இசை ஆர்வலர்களுக்கான நிகழ்ச்சி இரண்டு நாட்களிலும் நிறையவே இருந்தன. அந்த நிகழ்ச்சிகளின் தரமும் அளவிற்கறியதாய் இருந்தன.மக்கள் அத்தகைய நிகழ்ச்சிகளை வெகுவாக ரசித்தனர்.

பாரம்பர்ய கலைகளில் ஒன்றாகவும் கிராம மக்கள் ரசித்து பார்க்கும் கலையாகிய தோல்பாவை கூத்து கலையை தமிழகத்திலிருந்து வந்த அம்மாபேட்டை திரு.கணேசன் மற்றும் மற்றும் ஹரிகிருஷ்ணன் அவர்களும் அனுமன் தூது படலம் கதை கொண்டு நடத்தி காட்டினர். தமிழகத்தின் தொன்மையான கலை வடிவங்களில் ஒன்று தோல்பாவை கூத்து. இதற்கான பொம்மை மிருகங்களின் தோலைக் கொண்டு வடிவமைக்கப் படுகின்றன.பின்புலத்தில் இருந்து ஒளி பாய்ச்சப்பட்டு அதன் பிரதிபலிப்பு முன்னே உள்ள வெள்ளை திரையில் விழுமாறு செய்யப்படுகிறது. இக்கலைக்கு  ஓவியம், கட்டுமானம், பாவையை இயக்கும் திறன் கொண்டோர், தமிழ் பாடல்கள் எழுதுவோர் என பல கலைஞர்களின் பங்களிப்பும் தேவை படுகிறது.நலிவடைந்த பாரம்பர்ய கலையை காக்கவும், இந்த கலைகளை அடுத்த தலைமுறைக்கு எடுத்து செல்லவும் , நலிந்து வரும் இந்த கலையை தொழிலாக கொண்ட கலைஞர்களுக்கு வாழ்வாதாரம் அளிக்கவும் திரு.ஹரிகிருஷ்ணன்  அவர்கள் பல முயற்சிகளை எடுத்து வருகிறார். தருமபுரி அருகே இயற்கை சூழலில் குழந்தைகளுக்கு பள்ளி படிப்போடு இந்த பாரம்பர்ய கலைகளை சொல்லி கொடுக்கவும் ஒரு பள்ளி கட்டி வருகிறார். அவருடைய சீரிய பணிக்கு உதவ அவரை 9894605371 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.






இந்த ஆண்டு விழாவின் மற்றொரு சிறப்பு ‘தீரன் சின்னமலை’ நாட்டிய நாடகம் செயிண்ட் லூயிசு நகரில் வாழும் தமிழர்களால் அரங்கேற்றப்பட்டது.  குரு நாகை பாலகுமார் அவர்கள். திருபுவனம் ஆத்மநாதன் அய்யா அவர்களின் இசையில், கவிமுகில் கோபாலகிருஷ்ணன் அவர்களின் பாடல்களில் இந்த நாட்டிய நாடகம் சிறப்பாக அரங்கேற்றபட்டது. இளம் தலைமுறையினர்  மனதில் தீரன் சின்னமலை வரலாறு ஆழமாக பதிந்தது. அதில் நடித்த பாத்திரங்களின் நடிப்பும் நடனமும் மிகவும் அருமையாக இருந்தது.




கிராமங்களில் இன்றும் பிரபலமாக உள்ள கலை தெருக்கூத்து. இது பழம் தமிழ் இலக்கியங்களிலேயே தெருகூத்து பற்றிய குறிப்புகள் உள்ளன. மின்னிசோட்டா தமிழ்சங்கம் வடிவமைத்து இயக்கிய சிலம்பின் கதை என்ற தெருக்கூத்து நான் சிறு வயதில் கிராமத்தில் பார்த்த தெருகூத்து நிகழ்வை ஞாபகபடுத்தியது. அதில் இருந்த பாடல் வரிகளும், கலைஞர்கள் குரல் மற்றும் நடிப்பின் தரமும் சொல்லால் வெளிபடுத்த முடியாது. அதை பார்த்த மக்களுக்கு முழு சிலப்பதிகாரத்தை படித்த திருப்தி ஏற்பட்டது என்றால் மிகையாகாது.




மக்கள் கலைகளான சிலம்பம்,பறை , சுருள் கத்தி வீச்சு, வர்மம் போன்றவற்றையும் அரங்கில் செய்து  காட்டினர்.பறை பற்றி விரிவாக பின்னால் பார்ப்போம்.இந்த நிகழ்வில் தமிழிசைக்கும் மிகுந்த முக்கியத்துவம் தரபட்டது.திரு ராஜமணி ராஜப்பிரியர் அவர்களின் தமிழிசை நிகழ்வு அனைவரையும் ஈர்த்தது. தமிழை மட்டும் தான் பாடுவேன் என்ற உயரிய குறிக்கோளில் வாழும் பெரியர் வர். அது மட்டுமன்றி சங்க இலக்கிய தமிழிசை போன்ற நிகழ்ச்சிகளும் நடந்தது.இளம்சிறார்களின் ‘தமிழிசைப் போட்டி’ நிகழ்ச்சியில் புறநானூற்றுப்பாடலில் துவங்கி, இக்காலப் பாடல்வரை இசைத்தனர்.முனைவர் வேலு சரவணன் அவர்கள் நடத்திய குழந்தைகளுக்கான எலிப்பதி தெரு நாடகம் குழந்தைகள் மட்டுமின்றி பெரியவர்களையும் கவர்ந்தது.






கர்நாடக சங்கீதம் மற்றும் பரதநாட்டியம்
இவ்விழாவில் சங்கத்தமிழ், சமய வழி மற்றும் பிற பாடல்களை கர்நாடக இசையில் பாடும் நிகழ்ச்சிகள் பலவும் இருந்தன. பல மாநிலங்களிருந்து வந்திருந்த தமிழர்கள் பல்வேறு பரத நாட்டிய நடனங்களையும் நடத்தி காட்டினர். விழாவின் முதல் நாளன்று  குரு நாகை பாலகுமார் அவர்கள் ஆடிய பரத நாட்டிய நிகழ்ச்சி அனைவரையும் ரசித்து பார்க்க வைத்தது. அவர்  விழாவின் மைய நோக்கான "தமிழை அடையாளம் காப்போம்! ஒருங்கிணைந்து உயர்வோம்" என்ற கருவின் அடிப்படையில் கொண்ட பாடலுக்கு அனைத்து பாவனைகளுடன் அழகாக நடனமாடினார்.கனடா தமிழ் மக்களின் பரத நாட்டிய நிகழ்ச்சியும் மிகவும் நேர்த்தியாக இருந்தது.







அமெரிக்காவில் சாதனை படைத்த தமிழர்களுக்கு விருது வழங்கும் கொண்டாட்டம் - “Tamil American Pioneer Gala”
பேரவை விழாவிலேயே முதன் முறையாக சாதனைத் தமிழர்களுக்கு விருது வழங்கும் நிகழ்வு கோலாகலமாக நடந்தது. இந்த நிகழ்வை இரு அமெரிக்காவில் பிறந்து வாழ்ந்து வரும் இரு இளம் பெண்கள் ஒருங்கிணைத்திருந்து நம்பிக்கையைக் கொடுத்தது. “Tamil American Pioneer” என்கிற பெயரில் இவ்விருது பேரவை சார்பில் ஏழு தமிழர்களுக்கு வழங்கப் பட்டது. அனைவரும் விருது வாங்கிய பின் விரிவாக தமது அனுபவங்களையும், இளைஞர்களுக்கு நல்ல ஆலோசனைகளையும் வழங்கினர். விருது வாங்கியவர்கள் பட்டியல்:

Dr. Arogyaswami Paulraj,Professor (Emeritus),Stanford University
Dr. Raj Chetty, William Henry Bloomberg Professor of Economics, Harvard University
Dr. Chitra Dorai, IBM Distinguished Engineer and Master Inventor, IBM Corp.
Dr. Arun Mohan, Chief Medical Officer, Apollo MD Hospital Medicine
Dr. K. Sujata, President & CEO, Chicago Foundation for Women
Mr. Arun Subramanian, Esq., Partner at Susman Godfrey, LLP
Mr. Jay Vijayan, Chief Information Officer, Tesla Motors Inc.

இந்த விழாவின் இறுதியில் அடுத்த ஆண்டு சான்பிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதியில் நடைபெறவுள்ள 28-வது பேரவை தமிழ் மாநாட்டில் இந்த நிகழ்வு தொடரும் என்று 2015 விழா ஒருங்கிணைப்பாளர் திரு. தில்லை க. குமரன் அவர்கள் உறுதியளித்தார். அடையாளமாக நிகழ்ச்சியை நடத்திய செல்வி. கிருத்திகா மற்றும் செல்வி. சௌந்திராவும் நிகழ்ச்சியின் நிரலை திரு. தில்லை க. குமரன் அவர்களுக்கு அளித்தனர்.

தமிழ் சாதனையாளர்கள் மற்றும் தமிழ் பிரபலங்கள்
வட அமெரிக்க தமிழ்சங்க பேரவையின் இந்த நிகழ்ச்சியில் பல்வேறு தமிழ் சாதனையாளர்களையும் கௌரவித்தனர். சமூக முன்னேற்றத்துக்காக தன் கண்டுபிடிப்புகளை தியாகம் செய்த திரு முருகானந்தம் அவர்கள் இவ்விழாவுக்கு வந்திருந்து சிறப்பித்தார். அவர்  பெண்களுக்கான சானிடரி நாப்கினை குறைந்த விலையில் தயாரிக்க அவருக்கு தூண்டுதலாக இருந்த நிகழ்வையும், எப்படிபட்ட தடைகளையெல்லாம் கடந்து சென்று தனது கண்டு பிடிப்பை சந்தைக்கு கொண்டு சென்றார் என்றும் விளக்கினார். தற்போது பல்வேறு  பெண்கள் சுய உதவி குழுக்கள் மூலம் உற்பத்தி செய்ய பட்டு  700க்கும் அதிகமான பிராண்டுகளில் விற்பனையாகிறது என்றும் தெரிவித்தார்.




சிகரம் தொட்ட தமிழர் திரு ஆரோக்கியசாமி பால்ராஜ் அவர்கள் தற்போது ஸ்டான்போர்டு பல்கலைகழகத்தில் பணியாற்றுகிறார். அவருடைய MIMO தொழில்நுட்பம்  மற்றும் பெரும்பாலான ஸ்மார்ட் போன்களில் உபயோகமாகிறது.அவர் இந்தியாவில் இருந்த போது  Center for Artificial Intelligence Research, Center for Develipment of Advanced Computing (CDAC), Central Research lab  போன்ற பல்வேறு ஆராய்ச்சி நிலையங்களை நிறுவி உள்ளார். அமெரிக்காவில் பல்வேறு நிறுவனங்களையும் தொடங்கி உள்ளார். அவர் மார்கோனி விருது மற்றும் பெல் விருது போன்றவற்றையும் வாங்கி உள்ளார். அவர் தமிழ் விஞ்ஞானிகளில் குறிப்பிட தகுந்தவர்களாக சந்திரசேகர்,சி.வி.ராமன்,ராமானுஜன்,M.S.சுவாமிநாதன்,நம்பி சேசாத்ரி, P.V.வைத்யநாதன்(CalTech), ராமசந்திரன்(UC-LA) போன்றோரை குறிபிட்டார்.Tesla நிறுவனத்தின் CIO ஆக உள்ள திரு ஜெ விஜயன் அவர்களும், சித்ரா துரை அவர்களும் பேசினர்




நம்பிக்கையூட்டும் நாளைய தலைமுறை என்ற தலைப்பில் இளம் அமெரிக்க தமிழ் சாதனையாளர்கள் அடையாளபடுத்தபட்டனர். பறை, சிலம்பம் போன்ற பாரம்பர்ய கலைகளில் வல்லுநர்களாகவும்,தமிழ் கல்வி, நவீன இசை, சங்க இலக்கியத்தில் ஆர்வம், நாட்டியம் போன்றவற்றில் வல்லுநர்களாகவும் உள்ள இளம் தலைமுறையினர் தங்களது கருத்துகளை பகிர்ந்து கொண்டனர்.ஹாலிவுட் இயக்குநர் சுவாமிகந்தன் அவரகளும் முனைவர் சுவர்ணவேல் அவரகளும் குறும்பட போட்டிக்கான வெற்றியாளர் தேர்வி செய்ததுடன் தமிழர்களை ஹாலிவுட் படத்துறைக்கு வருவதற்கு வரவேற்றனர்.

உலக அரங்கில் சித்த மருத்துவம் பற்றியும் சித்த மருத்துவத்தின் சிறப்புகள் பற்றியும் முனைவர் செல்வ சண்முகம் அவர்கள் பேசினார்.
தமிழ் திரைதுறையிலிருந்து வந்திருந்த நடிகர் நெப்போலியன் மற்றும் ந்-டிகை திரிஷா ஆகியோர் தங்களது திரை அனுபவங்களை பகிர்ந்து கொண்டதோடு மக்களின் கேள்விக்கும் பதிலளித்தனர்.சோனியா, சோனியா மற்றும் பிரபு நடத்திய கணேஷ் கிருபா குழுவினரின் மெல்லிசை நிகழ்ச்சி நடைபெற்றது.




முத்தாய்ப்பான நிகழ்ச்சி
ஓக்லகாமா பல்கலைகழகத்தில் பேராசிரியராக இருக்கும் சோவிஅவர்கள் பறை இசை பயிர்ச்சி பட்டறை நடத்தினார். உலகிலேயே பிறப்பிலிருந்து சாவு வரை (திருமணம், பூப்பெய்தல் ) அனைத்து விழாக்களிலும் இசைக்க படும் ஒரே இசை கருவி பறை மட்டும் தான் என்றார்.





வட அமெரிக்க தமிழ்சங்க பேரவையின் வரலாற்றில் முதல் முறையாக திரை கடல் ஓடியும் திரவியம் தேடு என்ற வாக்கிற்கிணங்க நீக்கமற நிறைந்திருக்கும் நம் தமிழர்கள் அனைவரும் இங்கே ஒன்று கூடி அமெரிக்காவில் இருக்கும் 40க்கும் மேலான தமிழ் சங்கங்களின் சங்கமத்தை/அணிவகுப்பினை, தமிழர் கலைகளான பரதநாட்டியம், சிலம்பம், பறை,கரகம்,பொய்க்கால் குதிரை, தெருக்கூத்து , காவடியாட்டம் என மிகுந்த ஆரவாரத்துடன் நடத்தி காட்டினர்.





அணிவகுப்பின் முடிவில் அரங்கின் அனைத்து பகுதியிலிருந்தும் அமெரிக்க பறை இசை கலைஞர்கள் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என அனைவரும்   பறை முழக்கத்துடன் அடியபடியே மேடைக்கு வந்து  பறை இசையுடன்  சேர்ந்து ஆடிய நடனம் ஒட்டு மொத்த மக்களையும் எழுந்து நின்று கை தட்ட வைத்து நடனமாட செய்தது.வெற்றியின் இசையாக அரங்கை அதிரவைத்த பறை ஒலி தமிழ்நாட்டில் மக்களின் மனதில் அடிமையின் இசையாக பறையை கொண்டிருக்கும் நினைப்பையும் சாதிய அடக்குமுறைகளையும் தீயில் மாய்க்கும் அக்கினி குண்டமாக பரவாட்டும் என்ற நம்பிக்கை அங்கு வந்த 1500க்கும் மேற்பட்ட தமிழர்களின் மனதிலும் ஏற்பட்டது.




ஆயிரத்துக்கும் மேற்பட்ட இலக்கிய அறிவுஜீவிகளிலிருந்து சாதாரண மக்கள் கூடும் கூட்டத்தில் பாரம்பர்ய கலையிலிருந்து சாஸ்திரிய கலை வரையும், பாரம்பரிய இசையிலிருந்து கர்நாடக இசை வரை ஒருமித்து முழங்கி தமிழ் மற்றும் தமிழரின் நலனுக்கான மாபெரும் தமிழ் திருவிழாகிய FeTNA போன்ற ஒரு நிகழ்ச்சியை தமிழ் நாட்டில் கூட காணமுடியாது என்று நினைக்கிறேன்.

அடுத்த விழா சான்பிராசிஸ்கோ வளைகுடா பகுதியில் நடைபெறும் என்று அடுத்த விழாவுக்கான விழா ஒருங்கிணைப்பாளர் திரு தில்லை குமரன் அவர்கள் அறிவித்தார்.

சிறகு இதழில் வெளி வந்த பதிவு