Tuesday, December 10, 2013

Genetically Modified சோளமும் கேன்சரும் - ஆய்வு கட்டுரையை திரும்ப பெற்ற பத்திரிக்கை!

மான்சாண்டோ நிறுவனம் ரவுண்ட் அப் என்ற களைகொல்லி மருந்தை பல காலமாக விற்பனை செய்கிறது. இந்த களை கொல்லி மிகவும் சக்தி வாய்ந்தது. பெரும்பாலான களைசெடிகளை இந்த களைகொல்லி அழித்துவிடும். முக்கியமாக பல புல் வகைகளை அழிப்பதால்  விவசாயிகளிடமும் பிரபலமானது. ரேசன் கடைகளில் பெரிய கேன்களில் பிடித்து மண்ணெண்ணெயை விற்பனை செய்வது போல் இந்த களைகொல்லியை விற்பனை செய்யும் காலம் எல்லாம் இருந்தது.சில களைகளுக்கு எதிர்ப்பு தன்மை வந்து விட்டதாகவும், சில உடல் நல தீங்குகள் ஏற்படும் என்றும் பேச்சுகள் அடிபடுகின்றன. இருந்தாலும் தற்போது உபயோகத்தில் உள்ள களை கொல்லிகளில் மிக பிரபலமானவற்றில் ஒன்று இது என்றால் அது மிகையாகாது.

இந்த களைகொல்லியை அடித்தால் வளர்ந்த நிலையில் உள்ள களை செடியுடன் பயிரையும் அழித்துவிடும் தன்மையுள்ளது.எனவே பயிரை விளைவிக்கும் முன் தண்ணீர் விட்டு களையை வளர செய்து இந்த களை கொல்லியை அடித்து களைகளை அழிக்க முடியும். ஆனால் வளர்ந்த நிலையில் உள்ள பயிர் இருக்கும் போது அதனுடன் வளர்ந்த களையை அழிக்க இதை பயன் படுத்த முடியாது.இதற்காக மாண்சான்டோ நிறுவனம் புதிய வகை ஜீன் மாற்றம் செய்ய பட்ட விதைகளை அறிமுகபடுத்தியது. அந்த விதைகள் ரவுண்ட் அப் களைகொல்லிகளை தாங்கி வளரும் தன்மை கொண்டது. எனவே பயிர் வளரும் போதும் இந்த களைகொல்லியை தெளித்தால் பயிர் உயிரோடு இருக்கும் ஆனால் பயிரின் ஊடே வளரும் களை அழிந்து விடும்.

இதனால் உலகளவில் விவசாயிகளிடம் இந்த தொழில்நுட்பம் பிரபலமடைந்து இருந்தது. மான்சான்டோ மற்றுமல்லாது பிற விதை நிறுவனங்களும் தங்களது விதைகளில் ரவுண்ட் அப் எதிர்ப்பு ஜீனை இணைத்து விற்பனை செய்தார்கள். இதனால் மான்சான்டோவை பொருத்த வரையில் பிற விதை நிறுவனங்களிடமிருந்த ராயல்டியாக இந்த தொழில்நுட்பத்தை பயன் படுத்த பணமும், இதனால் ரவுண்ட் அப் களைகொல்லியின் விற்பனை ஏற்றமும் கிடைத்தது. பிற விதை நிறுவனங்கள் அதிக விளைச்சளை தரும் தங்களது விதைகளை உபயோகபடுத்தும் போது களை கட்டுபாட்டுக்கான எளிய வழியாக கூறி தனது நிறுவன விதைகளை விற்றன. விவசாயிகளை பொருத்தவரை விளைச்சளும் களை கட்டுபாட்டிற்கான ஒரு தீர்வாகவும் இது இருந்தது.

உலகை அதிர வைத்த ஆராய்ச்சி

அமெரிக்கா மற்றும் பல நாடுகளில் உற்பத்தியாகும் சோளத்தில் பெரும் பகுதி இந்த தொழில்நுட்பத்தில் வளர்ந்ததே. இந்த வகை சோளம் மற்றும் சோளத்திலிருந்து தயாரிக்க படும் உணவு பொருட்களை சில வருடங்களாக மக்கள் உண்டு வருகின்றனர்.2012ம் ஆண்டு நவம்பர் மாதம்  The Journal of Food and Chemical Toxicology  என்ற ஆராய்ச்சி பத்திரிக்கையில் பிரான்சை சேர்ந்த செராலினி என்ற அறிஞரது ஆராய்ச்சி கட்டுரை அறிவியல் உலகத்தை அதிர வைத்தது.அவரது ஆராய்ச்சியின் படி ரவுண்ட் அப் ஜீன் மாற்றம் செய்ய பட்ட சோளம் எலிகளுக்கு பல்வேறு சுகாதார  கேட்டினை ஏற்படுத்துவதுடன் கேன்சர் கூட ஏற்படுத்தும் தன்மையுடையது. இது 2007ம் ஆண்டு ஜப்பான் நாட்டின் Department of Environmental Health and Toxicology செய்த ஆராய்ச்சிக்கும் 2012ம் ஆண்டு University of Nottingham செய்த ஆராய்ச்சியின் முடிவுக்கும் எதிர்மறையாக இருந்தது.

இந்த ஆராய்ச்சி பற்றி கூறிய செரிலினி, ஜீன் மாற்றம் செய்ய பட்ட சோளத்தை ஒரு வருடத்துக்கு மேலாக எலியை சாப்பிட வைத்தால் தான் இந்த தீங்கு ஏற்படும் என்றும் பெரும்பாலான ஆராய்ச்சிகள் குறைந்த கால அளவிலேயே செய்து முடிக்க படுவதாகவும் அதனால் இந்த தீய விளைவை கண்டு பிடிக்க முடியாது என்றும்  கூறினார்.

இந்த ஆராய்ச்சி முடிவு உலகளவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. பிரான்சு அதிபர் ஐரோப்பிய அளவிலான தடையை NK603 என்ற சோள வகைக்கு ஏற்படுத்த வேண்டும் என்றார்.ரஸ்யா இந்த வகை பயிரை இறக்குமதி செய்ய தடை விதித்தது. கென்யா மரபணு மாற்ற பயிர்களுக்கு தடை விதித்தது.பொதுவாக ஐரோப்பிய கம்பெனிகள் அதிக அளவில் பூச்சு மருந்து வேதி பொருட்களையும், அமெரிக்க கம்பெனிகள் மரபணு மாற்ற விதைகளையும் உற்பத்தி செய்வதால் ஐரோப்பிய நாடுகளிடம் மரபணு மாற்ற விதைகளுக்கு எதிர்ப்பு இருப்பதாக பெரும் பாலானோரால் நம்ப படுகிறது. இந்த ஆராய்ச்சி முடிவு ஐரோப்பாவில் மரபணு மாற்ற பயிர்களுக்கு எதிரான எதிர்ப்பை அதிக படுத்தியது.

ஆராய்ச்சி முடிவை திரும்ப பெற்ற பத்திரிக்கை

கடந்த நவம்பர் மாதம் 29ம் தேதி இந்த ஆராய்ச்சி கட்டுரையை The Journal of Food and Chemical Toxicology  திரும்ப பெற்று  கொண்டது அனைவருக்கும் பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.இந்த ஆராய்ச்சிக்கு பயன் படுத்த பட்ட எலிகளுக்கு கான்சர் பெரும் தன்மை அதிகமாக இயல்பிலேயே இருப்பதாகவும், இந்த ஆராய்ச்சியில் பயன் படுத்த பட்ட உணவை உட்கொண்டதால் தான் கான்சர் ஏற்பட்டது என்று மதிப்பிட சரியான புள்ளியியல் கோட்பாடுகளை பயன் படுத்த படவில்லை என்று காரணம் கூறியது. அதே போல் ஆராய்ச்சியாளர் எவ்வாறு மரபணு மாற்ற பயிர் கான்சரை ஏற்படுத்தும் என்று ஆராய்ச்சி பூர்வமாக விளக்க வில்லை என்றும் கூறியது. இந்த ஆராய்ச்சி கட்டுரையை திரும்ப பெற்றதனால் மரபணு மாற்ற பயிருக்கு எதிரான உடல்நல கேட்டினை ஏற்படுத்தும் ஆராய்ச்சி முடிவுகள்  மிக பெரிய அராய்ச்சி புத்தகங்களில் இல்லாமல் போனது.

இந்த ஆராய்ச்சிக்கு ஆதரவாக பல ஐரோப்பிய ஆராய்ச்சியாளர்களும், மரபணு மாற்ற பயிருக்கு எதிரானவர்களும் உள்ளனர். இந்த ஆராய்ச்சி வெளி வந்த ஆறு மாதம் கழித்து, அந்த ஆராய்ச்சி பத்திரிக்கை Associate Editor for Biotechnology என்ற பதவியை ஏற்படுத்தி அந்த பதவிக்கு மான்சான்டோவின் முன்னாள் பணியாளரான Richard E. Goodman என்பவரை நியமித்தது அனைவரிடமும் ஒரு கேள்விகுறியை ஏற்படுத்தியது.

வளர்ந்து வரும் மக்கள் தொகையும், குறைந்து வரும் விவசாய தொழிலாளர்களும், குறைந்து வரும் விவசாய நில பரப்பும் நவீன வேளாண் தொழில்நுட்பத்தை நோக்கி இட்டு செல்கின்றன. மேலை நாடுகளில் சென்ற நூற்றண்டுகளில்  இருந்தது போல்  அடிமை முறை கொண்ட மலிவான தொழிலாளர்களோ, இந்தியாவில் இருந்தது போல் வர்ணாஸ்ரம முறைபடி சொந்த மக்களையே  அடிமையாக வைத்து மலிவான கூலி தொழிலாளர்களாக உபயோக படுத்தி அதிக தொழிலாளர்களை கொண்ட விவசாயத்தை செய்வது தற்போது வாய்ப்பில்லை. அதே போல் குறைந்த நில பரப்பில் தொழில்நுட்பம் கொண்டு உற்பத்தி திறனை அதிக படுத்தினால் தான் அனைவருக்கும் கட்டுபடியாகும் விலையில் உணவு பொருட்களை உற்பத்தி செய்ய முடியும். மேலை நாடுகளில் இருப்பது போல் இயற்கை விவசாயத்தில் இரு மடங்கு விலையில் உணவு பொருட்களை உற்பத்தி செய்து வசதி வாய்ப்புள்ளவர்களுக்கு மட்டும்  கொடுத்தால் கூட கோடி கணக்கான ஏழை மக்களுக்கு குறைந்த விலையில் உணவு உற்பத்தியை தொழில் நுட்பம் மூலம் உற்பத்தி செய்யத்தான் வேண்டும்.

ஆனால் இது போன்ற சுகாதார ஆபத்து இருக்குமா அல்லது இல்லையா என்பது போன்ற ஆராய்ச்சிகளை ஒரு சில வருடங்கள் பல்வேறு நாடுகளில் கூட்டாக யாருடைய குறுக்கீடும் இல்லாமல் நடு நிலமையுடன் செய்வது அவசியம்.அப்போது தான் மக்களும் பயமின்றி இந்த தொழில்நுட்பத்தை பயன் படுத்துவர். நடு நிலமையிலான பல்வேறு ஆராய்ச்சிகளால் இந்த தொழில்நுட்பத்தின் நம்பகத்தன்மை உறுதி செய்ய பட்டால் இந்த ஆராய்ச்சியின் பயன் அனைத்து பயிர்களுக்கும் அனைத்து மக்களுக்கும் சென்றடையும். அதே சமயம் மிக பெரிய சுகாதார ஆபத்து இருக்குமானால் ஆரம்பத்திலேயே அதற்கு ஒரு மாற்று முறை  நோக்கி ஆராய்ச்சியை கவனம் செலுத்தலாம்.

1940களில் பூச்சு கொல்லியாக அறிமுகபடுத்த பட்ட DDT,  இயற்கை மற்றும் மனித சுகாதாரத்துக்கு ஏற்படுத்தும் சீர்கேட்டை பற்றி ராச்சல் கார்ல்சன் என்ற அறிஞ்சர் 1962ல் மவுன வசந்தம் என்ற புத்தகம் மூலம் வெளி படுத்தினார்.அவருக்கு எதிராகவும் பெரும் அவதூறுகள் வெளியிட பட்டன.1972ல் அவரது கருத்தில்  உண்மை இருப்பதை அறிந்து DDT விவசாய உபயோகத்துக்கு தடை செய்ய பட்டது.அதே நிலை தற்போதைய மரபணு மாற்ற ஆராய்ச்சிக்கும் வந்து விட கூடாது.