Tuesday, October 21, 2008

கூலி தொழிலாளர்களின் குழந்தைகளுக்காக ஒரு உயர்தர மழலையர் பள்ளி



நீங்கள் மேலே உள்ள படத்தில் பார்க்கும் மழலையர் பள்ளி சென்னையிலோ அல்லது பிற நகரத்திலோ செயல்படவில்லை. இது அமைந்திருக்கும் இடம் மதுராந்தகத்தை அடுத்த சூணாம்பேடு என்னும் கிராமம். இதில் படிக்கும் மழலையர் கூலி தொழிலாளர்களின் குழந்தைகள்.

இந்த அதிசயத்தை நிகழ்த்துவது தேசிய வேளாண் நிறுவனம்(NAF) என்னும் அரசு சாரா நிறுவனம். இந்த நிறுவனத்தை தொடங்கியவர் திரு.சி.சுப்ரமணியம். பசுமை புரட்சியை செயல்முறை படுத்தி நாட்டில் பலகோடி பட்டினி சாவை தடுத்த சி.எஸ் அவர்களால் விவசாய மற்றும் கிராமபுற வளர்ச்சிக்காக தோற்றுவிக்கபட்ட நிறுவனம் இது. அவர் இறந்த பின்பும் அவரது கனவை நனவாக்க அயராது பாடுபடுகிறது இந்த நிறுவனம். விவசாய வளர்ச்சிக்கு இந்த நிறுவனம் ஆற்றும் பணிகளை பிறிதொரு பதிவில் இடுகிறேன்.

இந்த மழலையர் பள்ளியில் படிப்பவர்கள் அனைவரும் விவசாய தின கூலி தொழிலாளர்கள் மற்றும் வறுமை கோட்டுக்கு கிழே உள்ள மக்களின் குழந்தைகள். இவர்களுக்கு தரமான தொடக்க கல்வி வழங்கபடுகிறது. இவர்கள் பாடும் Rhymes கேட்டால், பல ஆயிரம் கொடுத்து நகரத்தில் படிக்கும் குழந்தைகளுக்கு இணையாக உள்ளது. இந்த குழந்தைகளுக்கு இளமையிலேயே நல்ல பழக்க வழக்கங்கள் கற்று கொடுக்க படுகிறது. இந்த பள்ளியின் முக்கிய நோக்கங்களில் ஒன்று, ஏழை குழந்தைகளுக்கு ஊட்டசத்துமிக்க உணவு கொடுப்பது. காலை சிற்றுண்டி,Snacks, மதிய உணவு, பால் போன்றவை அறிவியல் பூர்வமான தேவையை கணக்கில் கொண்டு,தேவையான சத்து தேவையான அளவு உள்ளவாறு சரியான் நேரத்தில் கொடுக்க படுகிறது. இதனால் குழந்தைகள் Malnutrition அடைவது தடுக்கபடுகிறது.

நகர்புற நடுத்தர மற்றும் உயர் நடுத்தற பிரிவு குழந்தைகளுக்கு கிடைக்கும் கல்வி, உணவு மற்றும் நல்ல பழக்க வழக்கங்கள் கிராமத்தில் உள்ள ஏழை கூலி தொழிலாளர்களின் குழந்தைகளுக்கும் அளிக்க படுகிறது

இட ஒதுக்கீட்டின் பயன் உண்மையிலேயே தேவையான மக்களுக்கு கிடைக்கவேண்டும் என்றால் இது போன்ற அதிசயங்கள் அனைத்து கிராமத்திலும் நடந்தால் மட்டுமே முடியும்.

இந்த சேவையை இந்நிறுவனம் முழுவதும் இலவசமாக செய்து கொடுக்கவில்லை. இலவசமாக எதை கொடுத்தாலும் அதனது முக்கியத்துவம் மக்களுக்கு தெரியாமல் முழுமையாக பயன் பெற மாட்டர்கள் என்பதால் மிக சிறிய தொகையை கட்டணமாக வசூலிக்கிறார்கள். இதை நடத்த தேவைபடும் பெரும்பான்மையான செலவை தொண்டு நிறுவனங்கள் மூலம் பெருகிறார்கள். நீங்களும் இது போன்ற காரியத்துக்கு உதவ நினைத்தால், ஒன்று அல்லது சில குழந்தைகளுக்கு தேவை படும் செலவை பொறுப்பேர்க்களாம்.


இதை பற்றி மேலும் அறிய இங்கே சுட்டவும்