Sunday, June 05, 2016

பார்த்தீனியமான தேசிய மொழி - இந்தோனேசியா வரலாறு


 வலுவான தேசத்தை கட்டமைக்க ஒரு குறிபிட்ட தேசிய மொழி அவசியம் என்ற கோட்பாடோடு மொழிவாரி சிறுபான்மையினரின் மொழி ,கலாச்சாரம் மற்றும் அவர்களின் பொருளாதார சீரழிவின் அடித்தளத்தோடு உருவாக்கபட்ட சோவியத் யூனியன் மற்றும் பாக்கிஸ்தான் ஆகிய நாடுகளின் உருவாக்கம் மற்றும் வீழ்ச்சியை சென்ற பதிவுகளில் பார்த்தோம். இந்த பதிவில்  வட மொழி மற்றும் தமிழ் மொழியோடு  தொடர்புடைய சில மொழிகளும் , கலாச்சாரமும் தேசிய மொழி என்ற பெயரால் அழிந்து வரும் வரலாற்றை பார்ப்போம்.

பெரும்பான்மையினர் பேசும் மொழியை தேசிய மொழி என்ற பெயரால் சிறுபான்மையினர் மீது திணிப்பதால்  மட்டும் மொழி மற்றும் கலாச்சார சீரழவு ஏற்படுவதில்லை.  மக்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பின் மீது முழுமையான கட்டுபாடு கொண்ட மத்திய அரசாங்கம் அனைத்து மக்களின் மீதும் நேரிடையாகவும், மறைமுகமாகவும் சிறுபான்மையினர் பேசும் மொழியை தேசிய மொழி என்ற பெயரில்  வலுகட்டாயமாக  திணித்தால் கூட பெரும்பான்மையினரின் மொழி, கலாச்சாரம் மற்றும்  பொருளாதார வீழ்ச்சி ஏற்படுவது என்பது நிதர்சனமான உண்மையாகும். அதற்கு சிறந்த உதாரணம் இந்தோனேசியா நாடு.

தேசிய மொழி பிரச்சனை தொடர்பான பிற பதிவுகள்

உலக தாய்மொழி தினம் - தேசத்தை துண்டாக்கிய தேசிய மொழி

தேசிய மொழியால் வீழ்ந்த வல்லரசு

இந்தியாவில் தேசிய மொழி திணிப்பு வரலாறு

இந்தோனேசியா நாட்டின் வரலாறு

இந்தியாவுக்கும்  இந்தோனேசியாவிற்கும் இடைபட்ட தொலைவு பல்லாயிரம் மைல்கள் இருந்தாலும் பண்டைய காலத்தில் இரு நாடுகளுக்கும் உறவு நெருக்கமாகவே இருந்துள்ளது. இந்தியாவை போலவே நறுமணம் மற்றும் மசாலா பொருட்கள் இந்தோனேசியாவிலும் உற்பத்தி ஆகிறது.கிராம்பு, ஜாதிக்காய், ஜாவா  மிளகு (tailed pepper) போன்ற வாசனை பொருட்கள் தோன்றிய நாடு இந்தோனேசியா. தமிழ் நாட்டை சேர்ந்த ஆயிரத்து ஐந்நூற்றுவர்  என்ற வணிக குழுவினர் பற்றிய குறிப்பு 1000 ஆண்டுகளுக்கு முந்தைய சுமத்ரா தீவின் தமிழ்  கல்வெட்டுகளில் காணப்படுகிறது.இந்து மற்றும் புத்த மதம் சார்ந்த அரசுகள் இந்தோனேசியாவை சுமார் 1000 ஆண்டுகளுக்கு முன் ஆண்டு வந்தன. இந்தோனேசியாவை ஆண்ட அரசுகளில் மிக முக்கியமானது ஸ்ரீ விஜயா அரசாகும். 8ம் நூற்றாண்டிலிருந்து, 12ம் நூற்றாண்டு வரை இந்தோனேசியா மற்றும் சுமத்ரா பகுதியை ஆண்டு வந்தது இந்த பேரரசு. ராஜேந்திர சோழனின் தலை சிறந்த நாவாய் படை மூலம் நடைபெற்ற தாக்குதலால் இந்த பேரரசின் வீழ்ச்சி ஆரம்பம் ஆனது என்பது வரலாறு.

இந்தோனேசிய மொழிகள்

சுமார் 700க்கும் மேற்பட்ட மொழிகளை பேசுவோர்களை கொண்ட இந்தோனேசியா நாடு உலகிலேயே அதிக மொழிகளை பேசுவோர் இடத்தில் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது. (முதல் இடத்தில் அந்த நாட்டிற்கு அருகாமையில் உள்ள பாப்புவா நியுகினியா பிடித்துள்ளது). பெரும்பான்மையான மொழிகள் ஆஸ்ட்ரோனேசியன் குடும்பத்தை சேர்ந்தது. அவற்றில் ஜாவா மொழி, சன்டேனிஸ், மதுரிஸ் போன்ற மொழிகளை தாய்மொழியாக கொண்டவர்கள் அதிகமாக இருக்கிறார்கள்.இது போன்ற பல நூறு மொழிகளை கொண்ட மக்கள் இந்தோனேசியாவில் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக வாழ்ந்துவந்தாலும் மொழி வாரியான அரசுகள் அமையவில்லை. இந்த பகுதியை ஆண்டு வந்த அரசுகளும் சென்ற நூற்றாண்டுக்கு முன் வரை எந்த மொழியையும் திணிக்கவில்லை. மக்களும் வேற்றுமையில் ஒற்றுமையோடு அமைதியாக வாழ்ந்து வந்ததோடு பல்வேறு கலாச்சாரங்கள் தழைத்தோங்கி வந்தது.

இந்தோனேசியாவில் அதிகம் பேருக்கு தாய் மொழியாக கொண்ட ஜாவா மொழிக்கும்  (40%க்கும் மேல்) தமிழுக்கும் தொடர்பு உள்ளது. தமிழகத்தை பல்லவர் ஆண்ட காலத்தில் தமிழையும், வட மொழியையும் எழுத பிராமி எழுத்து முறையிலிருந்து பல்லவ கிரந்த எழுத்துகளை தோற்றுவித்தனர். இந்த பல்லவ கிரந்த எழுத்து தான் வட்டெழுத்து முறைக்கு அடிப்படை எனலாம். இந்தோனேசியாவில் உள்ள ஜாவா மற்றும் பல்வேறு மொழிகளின் எழுத்து வடிவம் இந்த பல்லவ கிரந்த எழுத்துகளை அடிப்படையாக கொண்டது.உலகிலேயே அதிகம் பேர் தாய்மொழியாக கொண்டிருக்கும் வரிசையில் 12ம் இடத்தை பிடித்துள்ளது ஜாவா மொழி. இவ்வாறு அதிகம் பேர் பேசும் தொன்மையான மொழியாகவும், தமிழ் மற்றும் வடமொழியுடன் தொப்புள் கொடி உறவு கொண்டதுமான ஜாவா மொழி அழிவை நோக்கி சென்று கொண்டுள்ளது என்றால் ஆச்சர்யமாக உள்ளது அல்லாவா. கடந்த நூற்றாண்டில் அந்த மொழிக்கு ஏற்பட்டுள்ள நிலையை தொடர்ந்து பார்ப்போம்.

தேசியமொழி உருவான வரலாறு

ஸ்ரீ விஜயா  அரசின் ஆதிக்கம் இந்தோனேசியா மற்றும் மலேசியாவில் அதிகம் இருந்த போது அரசின் கல்வெட்டுக்கள் மலேசிய மொழியில் பெருமளவில் இருந்து. 1000க்கும் மேற்பட்ட மொழிகளை கொண்ட மக்கள் பல்வேறு தீவுகளில் வாழ்ந்து வந்தனர். அவர்கள் தாய்மொழியாகவும், வழக்கு மொழியாகவும் தங்களது தாய்மொழியை உபயோகித்தனர். பல்வேறு மொழி கொண்ட மக்களிடையே வணிக பரிவர்த்தனைக்கு மலேசிய மொழி  உதவியது.
 உலகிலேயே முதல் பன்னாட்டு கம்பெனியான டச்சு கிழக்கிந்தய கம்பெனி 1602ம் ஆண்டு நெதர்லாந்து நாட்டில் தோற்றுவிக்கபட்டது. இந்த கம்பெனி தான் உலகில் முதன் முதலாக பங்கு பத்திரம் வினியோகம் செய்த நிறுவனம். டச்சு அரசாங்கம் இந்த கம்பெனிக்கு இந்தோனேசிய நாட்டுடனான மசாலா மற்றும் வாசனை பொருட்கள் வியாபாரத்திற்கான ஏகோபித்த உரிமையை அளித்தது. ஆங்கிலேய கிழக்கிந்திய நிறுவனத்திற்கு இந்த நிறுவனம் தான் முன்னோடியாக இருந்தது.ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனி போலவே டச்சு கிழக்கிந்திய கம்பெனி,  இந்தோனேசிய  நாட்டை தனது காலனி ஆதிக்கத்திற்கு கொண்டு வந்தது.

பிரிட்டீசார் ஆங்கிலத்தை அனைத்து இந்தியருக்கும் கற்று கொடுத்து உலக அறிவை ஊட்டியது போலல்லாமல் டச்சுகாரர்கள் தங்களது தாய்மொழியை இந்தோனேசியர்கள் அனைவரும் எளிதில் படிக்க வழியில்லாமல் ஆனால் உத்தியோகபூர்வ மொழியாக வைத்திருந்தனர். மலேசிய மொழியே பல்வேறு மொழி பேசும் மக்களிடையே வணிக தொடர்புக்கு பயன்பட்டது.காலனி ஆதிக்கத்தை எதிர்த்து போராட்டம் சென்ற நூற்றாண்டின் ஆரம்பத்தில் வலுத்தது.இரண்டாம் உலகப்போரின் போது சப்பானிய நாட்டின் ஆதிக்கத்தின் கீழ் வந்தது இந்தோனேசியா. ஜப்பான் இரண்டாம் உலகப்போரில் சரணடைந்தவுடன் இந்தோனேசியா தன்னை சுதந்திர நாடாக அறிவித்துகொண்டது.

டச்சு காலனி ஆதிக்கத்தை எதிர்த்து போராடிய போது இந்தோனேசியர்கள் டச்சு மொழி  என்பது காலனி ஆதிக்கத்தின் அடையாளமாக மட்டும் பார்த்தனர்.இரண்டாயிரம் ஆண்டுகளாக தேசியமொழி இல்லாமல் பல்வேறு மொழிகளை கொண்ட கலாச்சாரமாக வேற்றுமையில் ஒற்றுமையோடு வாழ்ந்து வந்தாலும் புதிய தேசியத்தை அமைக்க ஒற்றை தேசிய மொழி அவசியம் என்று கருதினர்.40% மக்களுக்கு  மேல்  பெரும்பான்மையாக  பேசும் மொழியான ஜாவா மொழியை  தேசிய மொழியாக கொண்டால் பெரும்பான்மை மக்களுக்கு கூடுதல் நன்மை கிடைத்து மொழிவாரி சிறுபான்மை மக்கள் இரண்டாம் தர குடிமக்களாக ஆகிவிட கூடும் என்று எண்ணி ஜாவா  மொழியை தேசிய மொழியாக்க முயலவில்லை.காலனி ஆதிக்கத்தின் அடையாளமாக கருதிய டச்சு மொழியையும் தேசியமொழியாக ஆக்க விரும்பவில்லை.அப்போது அவர்கள் பார்வையில் பட்டது தான்  ஸ்ரீ விஜயா ஆட்சி காலத்திலிருந்து  வணிக மொழியாக இருந்த மலேசிய மொழி. மலேசிய மொழியை தரபடுத்தி பாஷா இந்தோனேசியா என்ற பெயரில் தேசிய மொழியாக அறிமுகபடுத்தினர்.

பாஷா இந்தோனேசியா திணிப்பு

மலேசிய மொழியை (பாஷா இந்தோனேசியா) தேசிய மொழி மற்றும் அலுவல் மொழியாக (lingua franca) ஆக்கியதோடு மட்டுமல்லாமல், இந்தோனேசிய மொழியே அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளின் பயிற்றுவிப்பு மொழியாக (lingua academica) பிரகடனபடுத்த பட்டது. அனைத்து தகவல் சாதனங்களும் இந்தோனேசிய மொழி மூலம் மட்டுமே  செய்தி பரிமாற்ற பட்டது. தொன்மையான மற்றும் பெரும்பான்மை மக்கள் தாய்மொழியான ஜாவா மொழியில் ஒரு செய்திதாள் தொடங்க கூட வழியில்லை என்றால் பார்த்து கொள்ளுங்கள். அனைத்து அரசு மற்றும் அரசு சார்ந்த வேலைகளுக்கு இந்தோனேசிய மொழி கட்டாயமாக்கபட்டது. நீதித்துறை மற்றும் அனைத்து அரசு சார்ந்த  துறைகளிலும் இந்தோனேசிய மொழி முழுமையாக திணிக்கபட்டது. இசை மற்றும் கலாச்சார நிகழ்வுகளில் (lingua cultura) இந்தோனேசிய மொழி முழுமையாக திணிக்கபட்டது.தொடக்க பள்ளியில் மட்டும் சிறிதளவே தாய் மொழி சொல்லி கொடுக்க அனுமதி கொடுக்க பட்டாலும், அது மக்களை முழுமையாக சென்றடையவில்லை.

சீமை கருவேலம் மரமும் தேசிய மொழியும்

சீமை கருவேலம் மரம் பயிர்களுக்கு வேலியாகவும் சமையலுக்கு விறகாகவும் பயன்படும் என்ற நம்பிக்கையில், 1950களில் ஆசுத்திரேலியாவில் இருந்து சிறிதளவு விதையாக இந்தியாவுக்குக் கொண்டுவரப்பட்டது.50களில் அரசாங்கத்தின் ஆதரவோடு தென் தமிழ்நாடு முழுவதும் விதைக்க பட்டு வளர்க்கபட்டது இந்த மரம்.சுதந்திரத்திற்கு முன் ஒரு செடி கூட இல்லாத இந்த மரம் இன்று தென் தமிழ்நாடு  முழுதும் பல்கி பெருகி தமிழகத்தில் சுமார் ஈராயிரம் ஆண்டுகளாக தொடர்ந்து  மண்ணின் மைந்தர்களாய் வாழ்ந்து வரும் பயிரினங்கள் அனைத்தின் ஒட்டு மொத்த அழிவிற்கு காரணமாக உள்ளது.அது மட்டுமன்றி விவசாயிகளின் வாழ்வாதரத்தையே கேள்விக்குறியாக்கி உள்ளது.கட்டுபாடு இல்லாமல் திணிக்கபடும் எந்த ஒரு காரணியும் ஏற்படுத்தும் விளைவுக்கு சீமை கருவேலம் மரம் ஒரு உதாரணம். தமிழகத்தில் சீமை கருவேலம் மரம் ஏற்படுத்திய தாக்கத்தை இந்தோனேசியாவில் மலேசிய மொழி ஏற்படுத்தியது.

கடந்த மூன்று தலைமுறைகளாக அரசாங்கத்தின் தேசிய மொழி  திணிப்பால் அனைத்து மக்களும் மலேசிய மொழி (பாஷா இந்தோனேசியா) சரளமாக பேச தொடங்கி உள்ளனர். பள்ளி மற்றும் கல்லூரி படிப்பிற்காக இந்தோனேசிய மொழி அவசியமானது. எனவே தாய் மொழி கற்க வேண்டும் என்ற ஆர்வம் தலைமுறை தலைமுறையாக குறைந்து வருகிறது.700 மொழிகள் பல்கி பெருகி பல்வேறு கலாச்சாரங்கள் தழைத்தோங்கிய இந்தோனேசியாவில் மலேசிய மொழி என்னும் சீமை கருவேலம் மரம் அனைத்தையும் அழிக்க தொடங்கி தான் மட்டும் நன்றாக வேரூன்ற தொடங்கிவிட்டது.

சென்ற நூற்றாண்டின் இறுதி வரை சொந்தா நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்காகவும், அரசாங்கத்தின் மொழி திணிப்பாலும் தாய் மொழிக்கு முக்கியத்துவம் கொடுப்பதை குறைத்து வந்த இந்தோனேசிய மக்களை  இந்த நூற்றாண்டில் தற்போதைய உலகமயமாதல் அழுத்தமும் தொற்றி கொண்டது.தற்போதைய உலகமயமாதல் உலகில் ஆங்கிலம் என்பது இன்றியமையாதது ஆகிறது. எனவே நகர் புறங்களில் இருக்கும் மக்கள் தங்களது குழந்தைகளை உலக பொருளாதாரத்தோடு சேர்க்க ஆங்கில வழி கல்வியும், அரசின் அழுத்தத்தாலும் உள் நாட்டு வேலைவாய்ப்புக்கும் இந்தோனேசிய மொழியும் கற்று கொடுக்க தொடங்கிவிட்டனர். அதன் விளைவு, இந்த தலைமுறை மக்கள் அனைவரும் தங்கள் தாய் மொழியை படிக்கவோ, வீட்டில் பேசுவதையோ முழுமையாக நிறுத்தி வருகின்றனர்.

இந்தோனேசிய முன்னாள் பிரதமர் யுதோயோனோ மக்களின் தாய்மொழி அழிந்து வருவதாகவும் அதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறுகிறார்.அரசு வேலை வாய்ப்பு மற்றும் மற்ற தகவல் தொழில் நுட்பங்கள் இந்தோனேசிய மொழியிலேயே இருப்பதால் பெற்றோர்களும் தங்களது குழந்தைகளிடம் இந்தோனேசிய மொழி மற்றும் ஆங்கில மொழியிலேயே பேச தொடங்கிவிட்டனர். இந்தோனேசிய மொழிகள் பற்றிய ஆராய்ச்சி செய்து வரும் கார்னல் பல்கலைகழக மொழியியல் பேராசிரியர் கோகன் அவர்கள் இந்தோனேசிய மொழி கொள்கையால், இன்னும் 50 வருடங்களில் இந்தோனேசியாவில் பேசப்படும் மொழிகளின் எண்ணிக்கை 700லிருந்து 50 ஆக குறையும் என்கிறார்.  பள்ளியில் படிக்காததாலும், வீட்டில் பேசபடாததாலும் பெறுமளவு மக்களின் தாய்மொழியாக உள்ள ஜாவா மொழி கூட கூடிய விரைவில் அழிய கூடிய வாய்ப்பு உள்ளதாக கூறுகிறார்.இதையெல்லாம் உறுதி செய்வது போல் ஜாவா பகுதி அரசாங்கம் ஜாவா மொழியை முழுமையாக அழிந்து விடாமல் காக்க வாரத்தில் ஒரு நாளாவாது கட்டாயம் வீட்டில் பேச வேண்டும் என்று சட்டம் இயற்றி உள்ளது என்றால் பார்த்து கொள்ளுங்களேன்.

தேசிய மொழியும் பொருளாதாரமும்

உலகில் உள்ள அனைத்து அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நூல்களை தன்னகத்தே கொண்டுள்ள ஆங்கிலம் போன்ற உலக பொது மொழியையோ, சிந்தனையை  தூண்ட கூடிய தங்கள் தாய் மொழியிலோ பள்ளி மற்றும் கல்லூரி பாடங்களை படித்து வளர வழி இல்லாத இந்தோனேசியாவின் நிலையை அந்த நாட்டின் பொருளாதாரமும் மக்கள் நிலையும் படம் பிடித்து காட்டுகிறது.  இயற்கை வளம் மிகுந்த இந்தோனேசிய நாடு 1970களிலேயே 7% பொருளாதார வளர்ச்சியை கொண்டிருந்தது. பொருளாதாரம் வளர்ந்த வளர்ந்த அளவுக்கு மக்களின் வாழ்க்கை தரம் வளரவில்லை.ஆங்கிலம் மற்றும் தாய்மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்காத மொழிகொள்கையால் இந்தோனேசிய பொருளாதாரம் முழுவதுமாக பெட்ரோல் மற்றும் சுரங்கத்தொழில் (இயற்கைவளத்தை எடுத்து விற்பது) மற்றும் உற்பத்தி தொழிற் சார்ந்ததாகவே இருக்கிறது.  சிந்தனை சார்ந்த அறிவுசார் தொழிற்களோ, அறிவியல் ஆராய்ச்சி கண்டுபிடிப்புகளோ இல்லாமல் உள்ளது.நாட்டின் செல்வங்களும் மிக குறைவானவர்கள் கைக்கே போய் கொண்டிருக்கிறது.

இந்தோனேசிய மக்கள் தொகையில் ஒரு சதவீதம் மட்டுமே கொண்ட சீன இனத்தவர், ஒட்டு மொத்த இந்தோனேசிய பில்லியனர்கள் எண்ணிக்கையில் 50% மேல் உள்ளனர்.இந்தோனேசிய சீனர்கள் பொருளாதார ரீதியில் பெரும் பலம் வாய்ந்தவர்களாக தற்போது உள்ளனர்.சீன இனத்தவர் தான் மலேசிய மொழியை தேசிய மொழியாக அறிவித்ததில் அதிக பலன் அடைந்தவரக்ள். டச்சு காலனி ஆதிக்கத்தில் வியாபாரிகளாக பல தீவுகளுக்கு சென்றபோது அவர்கள் அதிகம் பேசிய மொழி சைனீஸ் மலேசிய மொழி என்று அழைக்கபடுகிறது. ஒரு சில சீன வார்த்தையை கொண்டதை தவிர பெரும்பான்மையாகவே அது மலேசிய மொழியையே உள்ளடக்கியது. அதை பஜார் மலேசிய மொழி என்றும் அழைக்கபடுகிறது. இந்தோனேசியர்கள் மலேசிய மொழியை தேசிய மொழியாக்கிய போது, அதுவரை வழக்காடிய மொழியே பள்ளி, கல்லூரிகளில் படிக்கவும், இந்தோனேசியா அரசாங்க மொழியும் ஆனதால் மற்ற மொழியை தாய்மொழியாக கொண்டவர்களை விட சீனர்களுக்கு தேசிய மொழி கொள்கை சாதகமானது.

கிழக்கு டிமுர் (East Timur) மீது மொழி திணிப்பு

இந்தோனேசியாவின் அண்டை நாடாக விளங்குவது கிழக்கு திமூர். இந்த நாடு போர்ச்சுகீசிய நாட்டின் காலனியாதிக்கத்தில் 1974ம் ஆண்டு வரை இருந்து.  1975ம் ஆண்டு இந்த நாட்டை ஆக்ரமித்தது இந்தோனேசியா. 1975 முதல் 1999 வரை இந்த நாட்டை தன் பிடியில் வைத்திருந்தது இந்தோனேசியா.இந்த குறுகிய காலத்தில் சுமார் 2 லட்சம் மக்களை கொன்று குவித்தனர் .  கிழக்கு திமூரின் மக்களின் தாய்மொழி டிட்டம் (Tetum) என்ற மொழி. அங்கு போர்ச்சுகீசிய மொழியும் அதிகம் பேசபட்டது. இந்தோனேசியா கிழக்கு திமூரை கைபற்றியவுடன், அந்நாட்டின் தாய் மொழி மற்றும் போர்ச்சுகீசை தடை செய்து தனது தேசிய மொழியான இந்தோனேசிய மொழியை திணித்தது. அனைத்து பள்ளிகளிலும் இந்தோனேசிய மொழி மற்றும் இந்தோனேசிய மொழிவழி கல்வி மட்டுமே சொல்லி கொடுக்கபட்டது. அந்த நாட்டுடன் சம்பந்தமே இல்லாத இந்தோனேசிய மொழியை கிழக்கு திமூரின் தேசிய மொழியாக திணித்தது. கிழக்கு திமூர் இந்தோனேசியாவிடமிருந்து விடுதலை ஆகியவுடன் மீண்டும் டீட்டம் மற்றும் போர்ச்சுகீசிய மொழியை தேசிய மொழியாக அறிவித்தது.இந்தோனேசியா, கிழக்கு திமூரை ஆக்ரமித்தது தனது மொழியை திணிப்பது என்பதற்காக இல்லையென்றாலும், இது போன்ற ஆக்ரமிப்பாளர்கள் , தாங்கள் அதிகாரத்தை கைக்கு கொண்டுவர முக்கிய ஆயுதமாக பயன்படுத்துவது அந்நாட்டின் மொழி மற்றும் அதன் கலாச்சாரத்தை அழித்து தனது மொழியை தேசிய மொழியாக திணிப்பது என்பது உலக வரலாற்றில் பல இடங்களில் பார்த்திருக்கிறோம்.

மொழியின் அழிவு

விக்கிபீடியாவில் கூறியிருப்பது படி ஒரு மொழியின் மரணம் என்பது
“The most common process leading to language death is one in which a community of speakers of one language becomes bilingual in another language, and gradually shifts allegiance to the second language until they cease to use their original,heritage language. This is a process of assimilation which may be voluntary or may be forced upon a population. Speakers of some languages, particularly regional or minority languages, may decide to abandon them based on economic or utilitarian grounds, in favour of languages regarded as having greater utility or prestige. This process is gradual and can occur from either bottom-to-top or top-to-bottom.”

தொடர்ந்து வரும் பதிவுகளில் ஐரோப்பிய நாடுகளில் மொழி திணிப்பால் அழிந்த மொழிகளின் வரலாறு பற்றி பார்ப்போம்.



(சான்பிராசிஸ்கோ வளைகுடா பகுதி தமிழ் மன்றம் வெளியிடும் விழுதுகள் காலாண்டில் வெளிவந்த் கட்டுரையின் விரிவான பதிப்பு)


Reference


http://cip.cornell.edu/DPubS?service=Repository&version=1.0&verb=Disseminate&handle=seap.indo/1106972020&view=body&content-type=pdf_1#

Language and Power: Exploring Political Cultures in Indonesia
By Benedict R. O'G Anderson

http://www.news.cornell.edu/stories/2014/02/linguist-illuminates-endangered-dialects-indonesia
https://en.wikipedia.org/wiki/Chinese_Indonesians

Heidhues, Mary Somers (1999), "Indonesia", in Pan, Lynn, The Encyclopedia of the Chinese Overseas, Cambridge, M.A.: Harvard University Press, pp. 151–168, ISBN 978-0-674-25210-3.

http://www.nytimes.com/2007/07/23/world/asia/23iht-timor.2.6783407.html?_r=0

https://mises.org/library/why-do-languages-die

https://en.wikipedia.org/wiki/Indonesian_language