Friday, May 29, 2009

மன்மோகன் சிங் இனிமேல் இதை மட்டும் செய்ய வேண்டாம்

20,000 மக்களை சில நாளில் கொன்று குவித்த இலங்கை அரசாங்கத்துக்கு வக்காலத்து வாங்கி ஐக்கிய நாடுகள் சபையில் வாதிட்டு தன் மன சாட்சியை கழற்றி வைக்க முடிவெடுத்தது மிகவும் கண்டிக்க தக்க செயல். இத்தனை நாட்களாக பணத்துக்காக எதையும் செய்வார்கள் என்று மேல் நாட்டு அரசாங்கத்தையும், மேல் நாட்டு கம்பெனிகளையும் பற்றி ஆப்ரிக்க ஆசிய நாடுகளை உதாரணம் காட்டி பல காலம் பேசினோம். தற்போது அதைவிட மோசமான செயலை இந்தியா,சீனா போன்ற சோசியலிச நாடுகள் செய்து வருகிறது. மேலை நாடுகள் இவ்வாறு தவறு செய்யும் போதாவது அங்குள்ள மீடியா மற்றும் சிறு பிரிவினர் அந்த செய்தியை அந்நாடுகளில் உள்ள மக்களுக்கு கொண்டு செல்வர். ஆனால் இந்திய பெரும்பான்மை மீடியாக்கள் இந்த செய்தியை கையாண்ட விதம் அனைத்து இந்தியரையுமே தலை குனிய செய்கிறது.

இந்த மனித பேரவலத்தின் மூலம் இந்திய கம்பெனிகளுக்கு பல கோடி பெருமான காண்டிராக்ட்கள் இலங்கையில் கிடைக்கலாம். அதனால் பல கோடி பெரும்பாலான பணம் ஆட்சியாலர்களுக்கும், கட்சிக்கும்,பின்னனியில் இருந்த அரசு அதிகாரிகளுக்கும் லஞ்சமாக கிடைக்கலாம்.



இந்தியரின் பல கோடி பணத்தை லஞ்சமாக பெற்ற குவாட்ரோச்சி போன்ற ஆயுத இடை தரகர்கள் மீது நடவடிக்கை எடுக்க முயலும் போது அவர்களுக்கு ஏற்படும் மன உளைச்சளை கண்டு மனம் உருகும் ஜீவ காருண்ய சீலரான மன்மோகனுக்கு பல்லாயிரம் மக்கள் கொல்ல படும் போதும் அதற்கு அவர் நேரிடையாக மற்றும் மறைமுகமாக உதவும் போது மட்டும் மன உளைச்சல் வராதது யாருக்கும் புரியாத புதிர்.

இதற்கு தனி மனித வன்மம்,ராஜ தந்திரம், பேராசை என எந்த பெயர் வேண்டுமானாலும் வைத்து கொள்ளலாம். இனி தயவு செய்து காந்தி படத்துக்கு மட்டுமாவது அஞ்சலி செலுத்தாமல் இருக்கட்டும். காந்தியின் அற வழி கொள்கையை ஒட்டு மொத்தமாக புறக்கணித்து விட்டு அவர் படத்துக்கும் அவர் சமாதிக்கும் மட்டும் உலகை ஏமாற்ற அஞ்சலி செலுத்தாமல் இருந்தால் நன்றாக இருக்கும்.

--

Monday, May 25, 2009

டாலரிலிருந்து யூரோவுக்கு மாறும் ரஸ்யா

டாலரின் மதிப்பை உலக பொருளாதார சந்தையில் உயர்த்தி பிடிப்பதில் முக்கிய பங்கு வகிப்பது உலகில் பெரும்பாலான நாடுகளின் சேமிப்பு நாணயமாக இருப்பது என்பது அனைவரும் அறிந்த ஒன்று.

உலக நாடுகளின் சேமிப்பு செல்வங்களில் 64% டாலரே உள்ளது.சமீபத்தில் வெளியிட பட்ட யூரோ நாணயமும் தன் பங்கை அதிகரித்து 26% என்ற அளவில் முன்னேறி உள்ளது. சமீபத்திய நிதி நெருக்கடி காரணமாக அமெரிக்க அரசு தன் கடன்களை வேகமாக அதிகரித்து வருவதால் உலக சேமிப்பு நாணயத்தில் டாலரின் பங்கு குறையும் என ஒரு சில பொருளாதார நிபுணர்களால் கணிக்க பட்டு வந்தது.நிதி நெருக்கடியால் டாலரின் புழக்கம் சர்வதேச சந்தையில் சிறிதளவு குறைந்துள்ளது. ஆனால் பெரும்பாலான நிதி பரிவர்த்தனைகள்(முக்கியமாக பெட்ரோல்) டாலரிலேயே நடைபெருகிறது. அதே சமயம் அமெரிக்க அரசின் டிரசரி பாண்டுகள் மிகவும் பாதுகாப்பான முதலீடாக கருத படுவதால் இந்தியா மற்றும் சீனா போன்ற நாடுகள் டாலர் சொத்துக்களை கடந்த சில மாதங்களாக அதிக அளவில் வாங்கி குவிக்க தொடங்கியுள்ளன.

சீனா முதன் முறையாக அமெரிக்க அரசின் செயல்பாட்டால் தங்களது முதலீட்டுக்கு பாதிப்பு ஏற்படும் என்று சில மாதங்களுக்கு முன் அறிவித்தது.ஆனால் அது சேர்த்து வைத்துள்ள டாலர் சொத்துக்களின் மதிப்பை காப்பாற்ற மேன்மேலும் டாலர் சொத்துக்ளை வாங்க வேண்டிய கட்டயத்தில் டாலர் வலையில் வீழ்ந்துள்ளது. அந்த வலையிலிருந்து மீண்டு வர சில முயற்ச்சிகளை எடுக்க தொடங்கி உள்ளது.

இது உலக அரங்கில் ஒரு மாற்றத்தின் தொடக்கமாக கருத பட்டது. தற்போது மற்றொரு மிக பெரிய நாடு இம்மாற்றத்திற்கான முயற்சியில் ஈடு பட தொடங்கி உள்ளது. அதுதான் ரஸ்யா. கடந்த ஆண்டு வரை தன் சேமிப்பு செல்வத்தில் பெரும் பகுதி டாலர் சார்ந்த சொத்துக்களையே வைத்திருந்தது. ஆனால் தற்போது அது டாலர் சொத்துக்களை பெருமளவு யூரோ சார்ந்த சொத்துக்களாக மாற்ற தொடங்கி உள்ளது.ரஸ்யாவின் 47.5 சதவித சேமிப்பு செல்வங்கள் யூரோ சார்ந்ததாக உள்ளது. ஆனால் டாலர் சார்ந்த செல்வங்களோ 41.5% தான் உள்ளது.

டாலருக்கு மாற்றாக மற்றொரு நாணயம் வளர்வது என்பது உடனடியாக நடக்க கூடிய செயல் அல்ல. கிரிகெட் தர வரிசையில் முதலிடம் மாறுவது போல் இது எளிதாக நடக்க கூடியது அள்ள. ஏனென்றால் பல நாடுகளின் சேம்ப்பின் மதிப்பு இதன் மூலம் குறைய கூடும். ஆனால் இந்த மாற்றத்தின் ஆரம்பம் தொடங்கிவிட்டதாகவே தோன்றுகிறது

--

Tuesday, May 05, 2009

ஏழை நாடுகளுக்கு outsource ஆகும் விவசாயம்


அவுட் சோர்ஸிங் என்பது உற்பத்தி, சேவை என அனைத்து துறைகளிலும் கொடி கட்டி பறக்கும் காலமிது. விவசாயம் மட்டும் இதற்கு விதி விளக்கா என்ன? விவசாயமும் தற்போது ஆப்ரிக்க மற்றும் ஆசிய நாடுகளுக்கு அவுட் சோர்ஸ் ஆக தொடங்கி உள்ளது. மற்ற துறைகளில் அவுட் சோர்ஸிங் என்றால் வளரும் நாடுகளுக்கு புதிய வேலை வாய்ப்பு, அன்னிய முதலீடு என்று ஒரு சில பயன்கள் கிடைக்கும். ஆனால் விவசாயத்தை அவுட் சோர்ஸ் செய்ய படுவதால் ஏழை நடுகள் மிக பெரிய பட்டினி சாவிற்கு அழைத்து செல்ல பட இருக்கின்றனர்.

சோமாலயா, சூடான் போன்ற நாடுகள் பற்றி கேள்வி பட்டாலே நம் அனைவரின் கண் முன்னாலும் நிற்பது அந்நாட்டு மக்கள் பட்டினியில் வதை படுவது பற்றி நாம் பார்த்த புகை படங்களாக தான் இருக்கும். அவ்வாறு பஞ்சத்தில் வாழும் நாடுகள் உணவு பொருட்களை சீனா மற்றும் அரபு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய போகிறார்கள் என்றால் ஆச்சிரியமாக இருக்கிறதா? அது தான் உண்மை!

உலக மக்கள் தொகை இன்று இருப்பதைவிட 2050ல் ஐந்து பில்லியன் உயரக்கூடும்.ஆனால் விவசாய நிலமோ அதற்கேற்ப்ப உயர சாத்தியம் இல்லை. தற்போது பெட்ரோலிய பொருட்களுக்கு ஏற்பட்டுள்ள தட்டுபாடு நாளை உணவு பொருளுக்கும் வர கூடிய சாத்திய கூறு அதிகம் உள்ளது. இன்று அரபு நாடுகளிடம் பெட்ரோடாலர் பணம் அதிகம் குவிந்துள்ளது. சீனா, கொரியா மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளிடம் ஏற்றுமதி மூலம் அதிக அன்னிய செலாவனி குவிந்துள்ளது. இந்த இரண்டு வகை நாடுகளும் வருங்காலத்தில் தனது மக்களின் உணவு பொருட்களுக்கான தேவைக்கு வெளி நாடுகளை சார்ந்திருக்கும் கட்டாயத்தில் உள்ளது. இது ஒருபுறம் இருக்க மறுபுறமோ முதலீடுகளுக்கு வழி இல்லாமல், நல்ல இயற்கை வளங்கள், ஊழல் எதேச்சதிகார ஆட்சியாளர்களை கொண்டு, அவ்வப்போது பஞ்சத்தில் வாடும் ஏழை ஆப்ரிக்க நாடுகளும், ஒரு சில ஆசிய நாடுகளும் உள்ளன.

இவ்வகை நாடுகளிடம் அன்னிய முதலீட்டு கையிருப்பும் மிக குறைவு. அதன் விளைவு

1.உணவு பற்றாக்குறையை எதிர் நோக்கும் அரபு மற்றும் ஆசிய நாடுகள் ஏழை ஆப்ரிக்க மற்றும் ஆசிய நாடுகளில் பணத்தை முதலீடு செய்கின்றனர். மிக அதிக அளவில் நிலங்களை வாங்கி குவித்து அல்லது நீண்ட கால குத்தகைக்கு எடுத்து, சிறு மற்றும் குறு ஏழை விவசாயிகளின் நிலத்தை பிடுங்கி தங்கள் நாடுகளுக்கு தேவையான உணவை நவீன விவசாயம் செய்து தங்கள் நாட்டுக்கு இறக்குமதி செய்து கொள்ள திட்டமிட்டுள்ளனர்.

2.தற்போது ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியால் நிதி துறையில் பெரும் லாபம் குறைவதாலும், உணவு பொருளின் விலை ஏற்றத்தாலும் தனியார் முதலீட்டு நிறுவனங்களும், மிக பெரிய பன்னாட்டு கார்போரேசன்களும் ஏழை நாடுகளின் விவசாயத்தில் அதிக முதலீடு செய்து பெரும் லாபம் பார்க்க முனைகின்றனர்.
இதனால் பெரும்பாலான ஏழை விவசாயிகள் தங்கள் நிலத்தை இழந்து வறுமையின் பிடிக்கு கொண்டு செல்ல வாய்ப்பு உள்ளது

விவசாயிகளிடமிருந்து நிலத்தை பிடுங்குவது வரலாற்றில் புதிது அல்ல. அமெரிக்கா செவ்விந்திய மக்களிடமும், ஆப்ரிக்க, ஆஸ்திரேலிய பழங்குடி மக்களிடம் ஐரோப்பியர்கள் நிலத்தை பிடுங்கியது வரலாற்று செய்தி. ஆனால் இன்று ஏழை நாடுகளிடம் மீண்டும் நிலத்தை பிடுங்கும் அவல நில உலகெங்கும் நடக்க ஆரம்பித்துள்ளது. ஆனால் பத்திரிக்கைகளில் பெரிய அளவு இந்த செய்தி வெளியாவது இல்லை.

சமீபத்தில் தென் கொரிய நிறுவனம் மடகாஸ்கர் நாட்டின் பாதி விவசாய நிலங்களை குத்தகைக்கு எடுத்து தென் கொரிய நாட்டுக்கு தேவையான உணவு பொருட்களை உற்பத்தி செய்ய ஒப்பந்தம் இட்டது. அந்நாட்டு மக்கள் புரட்சிக்கு பின் இத்திட்டம் கை விட பட்டது. இது போன்ற செயல்களில் முக்கியமாக இறங்கியிருக்கும் நாடுகள் சினா,கொரியா,ஜப்பான்,அரபு நாடுகள் மற்றும் சில மேலை நாடுகள். இந்தியாவை சேர்ந்த கம்பெனிகளும் இது போன்ற செயலில் ஈடுபட்டுள்ளனர். இந்திய கம்பெனிகள் மடகாஸ்கரில் நெல்,கோதுமை மற்றும் பயறு வகைகள், மலேசியா ,இந்தோனேசியா போன்ற நாடுகளில் எண்ணெய் வித்து மற்றும் பயிறு வகைகள் போன்றவற்றை உற்பத்தி செய்வதில் அர்வம் காட்டுகிறார்கள்.

இவ்வகை வியாபரத்தில் சீனாவின் பங்கு மிகவும் குறிப்பிட தக்க அளவில் வளர்ந்து வருகிறது. சீனாவின் மக்கள் தொகை வளர்ச்சியாலும்,தொழிற்மயமாதலும் விவசாய நிலம் குறைந்து வருகிறது. சீனா தன் வருங்கால விவசாய தேவையை பூர்த்தி செய்ய ஆப்ரிக்க(காங்கோ,சாம்பியா,சூடான்,சோமாலியா என பல நாடுகள்),தென் அமெரிக்க,ரஷ்யா,பாக்கிஸ்தான் என பல நாடுகளில் பெருமளவு நிலத்தை வாங்கி குவித்து வருகிறது. இனி வரும் காலங்களில் சீனா சுமார் ஒரு மில்லியன் சீன விவசாயிகளை ஆப்ரிக்க நாடுகளில் விவசாயத்துக்காக குடி அமர்த்த போவதாக செய்திகள் வந்து கொண்டுள்ளது.

அது போல் அரபு நாடுகள் தங்கள் நாடுகளில் விவசாயம் செய்ய அதிக செலவு ஆவதாலும் ,தண்ணீர் பற்றாக்குறையாலும் தங்கள் வருங்கால உணவு தேவையை சரி செய்ய பாக்கிஸ்தான்,கம்போடியா,பிலிபைன்ஸ் போன்ற ஆசிய நாடுகளிலும், தென் அமரிக்க நாடுகள் மற்றும் ஆப்ரிக்க நாடுகளில் பெருமளவில் நிலங்களை வாங்கி குவிக்கிறது. இதற்கு சமீபத்திய உதாரணம் கம்போடியா நாட்டில் குவைத், குவத்தார் போன்ற நாடுகள் சுமார் 125,000 ஏக்கர் நிலங்களை குத்தகைக்கு வாங்கி உள்ளது.

தற்போதய நிதி நெருக்கடியால் மற்ற துறைகளில் லாபம் குறைவதாலும், விவசாய பொருட்களின் விலை ஏற்றத்தாலும் பெரும்பாலான மேலை நாட்டு முதலீட்டு நிறுவனங்களும் இது போல் பெரிய அளவு ஏழை நாடுகளில் விவசாய நிலங்களில் முதலீடு செய்ய தொடங்கி உள்ளனர்

இதனால் ஏழை நாடுகளுக்கு ஏற்படும் நன்மைகளாக கூற படுபவை

1.ஏழை நாடுகளிடம் விவசாயத்தில் முதலீடு செய்ய அதிக பணம் இல்லாததால் புதிய தொழில் நுட்பம் பயன்படுத்தி தேவையான் இடு பொருட்களை இட்டு அதிக உற்பத்தியை பெருக்க வாய்ப்பு இல்லாமல் உள்ளது. இவ்வகை முதலீடுகளால் நவீன தொழில் நுட்பத்தை பயன் படுத்தி அதிக அளவு உற்பத்தியை ஏற்படுத்த் முடியும்.

2. பல நாடுகளில் அதிக அளவு விவசாயம் செய்யும் நிலங்கள் இருந்தாலும் முதலீடு இல்லாததால் அவற்றை அந்நாட்டு மக்கள் விவசாயம் செய்வதில்லை. இது போன்ற வெளி நாட்டு முதலீடு மூலம் அந்த நிலங்களில் விவசாயம் செய்து உற்பத்தி பெருக்கம் செய்யலாம்

3. வெளி நாட்டினர் முதலீடு செய்யும் போது அவர்கள் நல்ல சாலை, சேமிப்பு கிடங்கு, துறைமுகம் போன்ற உள் கட்டமைப்பு வசதிகளை பெருக்குவர். அதை பயன் படுத்தி ஒட்டு மொத்த நாடே வளர்ச்சி அடையும்.

4.பெரும்பாலான நாடுகள் ஏழை நாடுகளிடம் நிலத்தை குத்தகைக்கு எடுக்கும் போது அந்நாடுகளில் நல்ல மருத்துவமனை கட்டி தருவது, கல்வி நிறுவனங்கள் அமைப்பது போன்ற வளர்ச்சி பணியில் அதிக கவனம் செலுத்த உறுதி அளித்துள்ளனர்.

5.ஏழை நாடுகளில் இது அதிக வேலை வாய்ப்பை உருவாக்கும

இந்த நில பிடுங்கல் ஏழை நாட்டு மக்களுக்கு தீமையை ஏற்படுத்தும் காரணங்கள்

1. நிலத்தை விற்கும் ஏழை நாடுகள் இது போன்ற ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் போது அவர்களுடைய நன்மையை ஒப்பந்தத்தில் சேர்க்கும் அளவு பேசுவதற்கு ஏற்ற உயர்ந்த நிலையில் (bargaining power) இல்லை.அதாவது அவர்களது பொருளாதார நிலை மிகவும் மோசமாக உள்ளது. அந்நிய செலாவணி மற்றும் முதலீட்டை கவர எதற்கும் அவர்கள் ஒத்து கொள்ளும் நிலையில் உள்ளனர். மேலும் இது போன்ற நாடுகளின் உயர்மட்டத்தில் ஊழல் அதிக அளவு இருப்பதால் விவசாயிகளின் நன்மைக்கான சரத்துகளை ஒப்பந்தத்தில் சேர்ப்பது கேள்வி குறியே.

2. லாப நோக்கில் பெரிய அளவில் இந்த ஒப்பந்தம் செய்ய படுவதால், சிறு மற்றும் குறு விவசாயிகளின் நிலங்கள் பிடுங்க பட்டு பெரிய அளவில் இயந்திரங்கள் கொண்டு விவசாயம் செய்ய தொடங்கபடும்.

3. சிறு மற்றும் குறு விவசாயிகள் நிலம் இழந்து விடுவர். அதே நேரம் இயந்திரமயமான விவசாயம் செய்ய போவதால் நிலம் இழந்த அனைவருக்கும் வேலை கிடைப்பது கடினம்.

4. ஏற்கனவே இந்த நாடுகளில் அவ்வப்போது பஞ்சமும் பட்டினியும் காணப்படுகிறது. இனி பெரும்பாலான உணவு பொருட்களை விளைவித்து வெளி நாட்டுக்கு ஏற்றுமதி செய்வதால் இது போன்ற பஞ்சத்தின் பாதிப்பு மேலும் அதிகறிக்க கூடும்.

5. ஒப்பந்தத்தால் பயிரிட படும் பயிர்கள் பெரும்பாலான நாடுகளில் அந்த நாட்டினரால் விரும்பி உண்ணபடுவது இல்லை. அதனால் இந்த பயிரினால் உள் நாட்டு மக்களுக்கு எந்த உபயோகமும் இருக்காது.

6, அந்நாடுகளில் பாரம்பரிய வகையில் செய்ய படும் விவாசயமும், பாரம்பரிய பயிர் வகைகளின் பன்முகமும் (crop diversity) அழிக்க படும்.
7. நவீன விவசாயத்தால் சுற்று புற சூழ்நிலை பாதிப்படைவதுடன், காடுகள் போன்ற இயற்கை வளங்கள் அதிக அளவு அழிக்க பட வாய்ப்புள்ளது

8. வேளாண் இடு பொருட்களான விதை, உரம், பூச்சி மருந்து போன்றவறை அதிக அளவு இறக்குமதி செய்ய வேண்டிய சூழ்நிலையை உருவாக்கும்.

ஏழை நாடுகளுக்கு முதலீடு அதிகம் கிடைத்தாலும் அதனால் பயனடைய போவது அங்கு பெரும்பான்மையாக இருக்கும் ஏழை விவசாயிகளாக இருப்பது சந்தேகமே .

தற்போது உள்ள சூழ்நிலையில் இந்திய சிறு மற்றும் குறு விவசாயிகள் சற்று ஜாக்கிரதையாக இருப்பது நல்லது தான். அரசு அந்நிய செலவானி கிடைக்கும் என்பதால் நம்ப ஊர் நிலங்களையும் பெ ரிய பன்னாட்டு கம்பெனிகளுக்கு விற்றாலும் ஆச்சிரிய படுவதற்கில்லை.

Control oil and you control nations; control food and you control the people,”--Henry Kissinger in 1970.


--