Tuesday, April 28, 2009

தொழிலாளர்கள் கையில் அமெரிக்க கார் கம்பெனி?


கிரைசிலர் கார் கம்பெனி சில காலமாகவே அதிக நட்டத்தில் இயங்கி கொண்டுள்ளது. அமெரிக்க அரசின் நிதி உதவி இல்லாமல் அதை இயக்க முடியாது என்ற நிலை இருந்தது. அதற்கு முக்கிய காரணம் கார் விற்பனை சரிவு, மார்கெட்டுக்கு தேவையான காரை உற்பத்தி செய்யாமை,கடன் மற்றும் தொழிலாளர்களின் சம்பளம் மற்றும் வேலை செய்யும் மற்றும் பணி ஓய்வு பெற்ற தொழிலாளர்களின் மருத்துவ காப்பீடு செலவு என்று கூறபட்டது. இந்நிலையில் ஒபாமாவின் உத்திரவு பேரில் தற்போதைய சூழ்நிலைக்கு ஏற்ற வளர்ச்சி திட்டத்தை கம்பெனி தயாரித்தது. அமெரிக்க அரசும் முறையான திட்டங்கள் இல்லாமல் பணத்தை மேன் மேலும் கொடுக்க விருப்பம் இல்லை என்று தெரிவித்து விட்டது. அதன் அடிப்படையில் புதிய திட்டம் வடிவமைக்க படுகிறது.

இத்திட்டத்தின் முன்வரைவு இன்னும் வெளி வர இல்லை என்றாலும் அது பற்றிய செய்திகள் அனைத்து அமெரிக்க பத்திரிக்கைகளும் வெளியிட்டுள்ளது. அதன் படி தொழிற் சங்கத்துக்கு 55% சதவித பங்கு வழங்க படும் என்று தெரிகிறது. இதனால் தொழ்ற்சங்கத்துக்கு கம்பெனியின் முடிவுகளை எடுக்கும் அதிகாரம் கிடைக்கும். ஆனால் இதற்கு அவர்கள் கொடுக்கும் விலையும் அதிகம்.இதன் மூலம் தொழிலாளர்களுக்கு கிடைக்க இருந்த மருத்துவ காப்பீடு மிக அதிக அளவில் குறைய வாய்ப்புள்ளது.அதே சமயம் இம்முடிவை தொழிலாளர்கள் யூனியன் ஒத்து கொள்ளாவிட்டால் அக்கம்பெனி ஒட்டு மொத்தமாக மூட படலாம். அதனால் இழப்பு மிக அதிகம் இருக்கும்.தற்போதைய திட்டத்தின் மூலம் கம்பெனி காப்பாற்ற பட்டால் பிற்கலத்தில் அதனால் கிடைக்கும் லாபம் கொண்டு தொழிலாளிகள் பயன் பெற வாய்ப்புள்ளது.

இத்திட்டதினால் இழப்பு தொழிலளர்களுக்கு மட்டும் இல்லை. அக்கம்பெனிக்கு கடன் கொடுத்த வங்கி மற்றும் அக்கம்பெனியின் தற்போதயைய முதலீட்டளர்கள் அனைவரும் பெரும் இழப்பை சந்திக்க வேண்டும்.

மருத்துவ காப்பீடு செலவு என்பது கார் கம்பெனிகளுக்கு மட்டும் முக்கிய பிரச்சனை இல்லை. அமெரிக்க அரசுக்கே இது ஒரு பெரிய பிரச்சனையாக வளர்ந்து வருகிறது. இன்னும் சில ஆண்டுகளில் இப்பிரச்சனை தற்போதைய நிதி நெருக்கடி போன்று பெரிய நெருக்கடியை ஏற்படுத்த வாய்ப்புகள் அதிகம்.

--

Monday, April 27, 2009

துபாயை காப்பாற்றிய அபுதாபி


கடந்த சில வருடங்கலுக்கு முன்பு வரை வளம் கொழிக்கும் இடமாக வளர்ந்து வந்த துபாய்க்கு தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி அதன் வளர்ச்சிக்கு பெரிய தடை கல்லாக வந்துள்ளது. துபாயின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிப்பது ரியல் எஸ்டேட் மற்றும் சுற்றுல்லா. சமீபத்திய நிதி நெருக்கடியால் இந்த இரண்டு துறையும் மிக பெரிய இழப்பை சந்தித்துள்ளது. மிக அதிக செலவில் ஆரம்பிக்க பட்ட துபாயின் கனவு திட்டங்களான 300 செயற்கை தீவு திட்டம் மற்றும் உலகிலேயே உயரமான கட்டட திட்டம் ஆகியவை பெரும் பிரச்சனையில் தவிக்கிறது.துபாய் அரசு மற்றும் அரசு சார்ந்த கம்பெனிகளின் கடன் மட்டும் $80 பில்லியனை தாண்டி விட்டது. இரண்டு ஆண்டுகளில் அது திருப்பி தர வேண்டிய கடன் தொகை $22 பில்லியன் ஆகும்.

மார்கெட் நல்ல நிலையில் உள்ள போது துபாயில் உள்ள ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் மிகபெரிய கட்டிடங்களை கட்டும் முன்னே அவற்றை வாடிக்கையாளர்களுக்கு விற்று விட்டனர்(சென்னையில் DLF செய்தது போல்).வெளி நாட்டினரை துபாயில் ஒரு சில குறிபிட்ட பகுதியில் வீடு வாங்க அனுமதித்த உடன் ரியல் எஸ்டேட் மிக வேகமாக சூடு பிடிக்க தொடங்கியது. முதல் தவனையாக 10% பணத்தை மட்டும் பெற்று கொண்டனர். அதனால் இடைதரகர்கள் ஒரு வீடு வாங்குவதற்கு பதில் 10 வீடுகளை 10% கொடுத்து வாங்கி தள்ளி விட்டனர். ஏனெனில் இரண்டாவது தவணை வரும் முன் அதன் மதிப்பு மேலும் உயரும்.எனவே அதை விற்று லாபம் காணலாம் என்பது அவர்களின் கணிப்பு.ஆனால் ரியல் எஸ்டேட் துறை வீழ்ச்சியால் கட்டிடம் கட்ட முதல் கிடைக்காததால் கட்டும் வேகமும் வெகுவாக குறைந்து போனது. இதன் விளைவாக 17% வேலை வாய்ப்பு அங்கு குறையும் என வல்லுனர்கள் கணித்துள்ளனர்.

இப்படி பட்ட இக்கட்டான நிலையில் தான் அபுதாபி உதவி கரம் நீட்டி உள்ளது.துபாய் வெளியிடும் கடன் பத்திரங்களில் சுமார் $10 பில்லியன் முதலீடு செய்ய முடிவு செய்துள்ளது. இதன் விளைவாக துபாயும் புதிய உத்வேகத்தோடு முன்னேற்ற பாதை நோக்கி இறங்கி உள்ளது.அபுதாபி தன் முதலீடை இவ்வளவு தாமதமாக செய்ததற்கு காரணம் இரு அரசுகளுக்கு இடையே உறவில் ஏற்பட்ட உரசல் என் சில கிசுகிசுக்கள் கசிய தொடங்கின. ஆனால் இவை பத்திரிக்கைகள் கிளப்பிய கட்டு கதை என துபாய் ஆட்சியாளர் கூறுகிறார்.


எது எப்படியோ, துபாயின் வளர்ச்சியில் தான் அங்கு வேலை பார்க்கும் பல்லாயிர கணக்கான தமிழர்களின் எதிர்காலமும், இந்தியாவின் எதிர்கலமும் உள்ளது. விரைவில் துபாய் மீண்டும் உத்வேகத்தோடு வளர்ச்சி பாதியில் செல்லட்டும்.

--

Saturday, April 18, 2009

நீதி கேட்கும் செருப்புகள்

பெரும் பாலான மனிதனுக்கு அநீதி இழைக்கும் போது அவர்கள் முறையிட நீதி மன்றம் இருக்கிறது. வாயில்லா மிருகங்களுக்கு நீதி தேடி தர புளு கிராஸ் போன்ற அமைப்புகள் இருக்கிறது.ஆனால் எங்களை அவ மரியாதை செய்தால் நாங்கள் எங்கு போய் முறையிடுவது? சத்தம் எங்கிருந்து வருகிறது என்று பார்க்கிறீர்களா? சிறிது குனிந்து பாருங்கள். நீங்கள் காலில் அணிந்து இருக்கும் காலணி பேசுகிறேன்!

காடு, மலை, கல், கரடு,மழை, வெய்யில், சேறு, சகதி என்று எங்கு போனாலும் உங்கள் காலை பாது காக்கிறேன். இதற்கு பலனாக உங்களிடம் நான் எந்த உபகாரமும் எதிர் பார்க்கவில்லை. தயவு செய்து கேடு கெட்ட இந்த அரசியல்வாதிகளின் மேலெரிந்தும், அவர்களுக்கு என்னை மாலையிட்டும் அவ மரியாதை செய்யாதீர்கள். எங்களுக்கு உணர்வு இல்லை என்ற ஒரே காரணத்துக்காக எங்களை இப்படி அவ மரியாதை செய்கிறீர்கள். அதுவும் எந்த உணர்வும் இல்லாத இந்த அரசியல்வாதிகள் மீது எங்களை விட்டெறிந்து.

இனியாது எங்களை இப்படி அவ மரியாதை செய்யாமல் இருக்க உங்களை இரு கால் கூப்பி வேண்டி கொள்கிறேன்


புகைப்படம்:நன்றி தினபூமி

--

Tuesday, April 14, 2009

பாதை மாறும் முதலாளித்துவமும், சந்தை பொருளாதாரமும்



1970 க்கு பிறகு உலகம் முழுதும் மிக வேகமாக பரவ தொடங்கிய தத்துவம் முழுமையான சந்தை பொருளாதாரம்(Free Market) மற்றும் முதலாளித்துவம். அப்போது மிக வேகமாக ஏறிய எண்ணெய் விலை உயர்வால் வளரும் நாடுகளின் அன்னிய கையிருப்பின் நிலை மோசமாக போனது. அன்னிய கையிருப்பின் தேவையை நிவர்த்தி செய்ய வளரும் நாடுகள் மேலை நாடுகள் மற்றும் அது சார்ந்த நிதி அமைப்புகளை நோக்கி கையேந்தி நிற்க தொடங்கியது.அதற்கு வளரும் நாடுகள் மீது விதிக்க பட்ட கட்டுபாடு - முழுமையான சந்தை பொருளாதாரத்தை அமல் படுத்த பட வேண்டும், அரசின் கட்டுபாட்டை முழுமையாக விளக்க வேண்டும் மற்றும் பன்னாட்டு தனியார் நிறுவங்களுக்கு தடங்கள் இல்லாமல் முதலீடு செய்ய அனுமதிக்க வேண்டும்.சோவியத் யூனியன் வீழ்ச்சிக்கு பிறகு இந்த சந்தை பொருளாதாரம் தான் பெரும் பாலான உலக நாடுகளின் ஒரே வாய்ப்பாக மாற தொடங்கியது. சில காலம் இந்த சந்தை பொருளாதாரமும் ஓரளவு அனைவருக்கும் நன்மை பயப்பதாகவே அறிய பட்டது.

ஆனால் சந்தை பொருளாதாரத்தின் அடிப்படை மாற தொடங்கிய பின் தான் பல பிரச்சனைகள் வெடிக்க ஆரம்பித்தது. பொதுவாக சந்தை பொருளாதாரத்தில் தேவை அதிகமாக இருக்கும் போது அதை உற்பத்தி செய்ய பல நிறுவனங்கள் போட்டி போட்டு கொண்டு வரும்.பல நிறுவனங்கள் உற்பத்தி செய்ய போட்டி இருப்பதால், நல்ல தரமான பொருட்கள் குறைந்த விலையில் கிடைக்கும். நிறைய நிறுவனக்கள் தொடங்க படுவதால் வேலை வாய்ப்பும் அதிகரிக்கும். அதிக வேலை வாய்ப்பு பெருகுவதால் மக்களின் வாங்கு திறன் கூடி ஒட்டு மொத்த பொருளாதாரத்தையே வளர்க்கும். ஆனால் உண்மையில் நடப்பது அதுவல்ல.வளரும் நாடுகளுக்கு வரும் முதலிடு அதிகம் உள்ள பெரிய பன்னாட்டு நிறுவனங்கள் விளம்பர யுக்தி மற்றும் பிற வழிகளில் வியாபாரத்தை பெருக்கி உள் நாட்டில் உள்ள சிறு மற்றும் நடுத்தர நிறுவனக்களை ஒட்டு மொத்தமாக அழிக்கிறது. பொதுவாக இவ்வகை சிறு நிறுவனங்கள் அதிக மக்களை வேலைக்கு வைத்திருப்பர். பன்னாட்டு நிறுவனங்கள் இயந்திரமயமான தொழிற் சாலை வைத்திருப்பதால் அவற்றின் வேலைக்கான ஆட்களின் தேவையும் குறைவு. இந்தியாவில் மட்டும் நடக்கும் நிகழ்வு அல்ல இது. வளர்ந்த நாடுகளிலும் இது தான் நடக்கிறது. ஆனால் அங்கு மக்கள் தொகை வளர்ச்சி மிகவும் குறைவாக இருப்பதால் அதன் விளைவு அதிகம் தெரிவதில்லை.
கடந்த சில காலமாக முதலாளித்துவம் தன் முழு வேகத்தை அடைய தொடங்கி உள்ளது. மிக பெரிய பன்னாட்டு நிறுவனங்கள் எல்லாம் ஒன்றுடன் ஒன்று இணைந்து மிக பெரிய ஜெயன்ட்களாக மாற தொடங்கி உள்ளது. அவ்வாறு பெரிதாக வளர்ந்த நிறுவனங்களும் அத்துறையில் உள்ள பிற நிறுவனக்களை வாங்கி தன் துறையில் போட்டி இல்லாத மோனோபொலி என்ற நிலைக்கு முன்னேறுகிறது. முன்பு அரசாங்கம் துறைகளை தன் கட்டு பாட்டில் வைத்திருந்த போது இதே மோனோபொலி தான் இருந்தது. அரசாங்கமாவது ஒரு சில நேரத்தில் மக்களுக்கு பதில் சொல்ல வேண்டும். ஆனால் இந்த தனியார் நிறுவனக்களின் நோக்கம் லாபம் மட்டும் தான். அவர்களுக்கு சமூக அக்கறை எல்லாம் இல்லை. இந்த நிறுவனங்கள் சந்தையில் போட்டி என்பதையும் வெகுவாக குறைத்து சந்தை பொருளாதாரத்தின் நோக்கத்தையே கேள்வி குறியாக்கி உள்ளது.
சந்தை பொருளாதாரத்தின் அடிப்படை, வாழ்க்கை போராட்டம் மற்றும் தகுதி உள்ளவை பிழைத்தல் போன்ற டார்வின் கொள்கை. அதாவது சந்தையின் போக்கை உணர்ந்து அதற்கேற்ற வியாபார நுணுக்கம் பின் பற்றும் திறமையான நிறுவனங்கள் சந்தையில் நிலைத்து நிற்கும். வியாபார நிறுவனக்களின் அசுர வளர்ச்சியால், தனிபட்ட நிறுவனங்கள் பொருளாதாரத்தில் ஏற்படுத்தும் தாக்கம் அதிகமாகிறது. சந்தையின் வளர்ச்சி நன்றாக இருக்கும் போது அந்நிறுவன அதிகாரிகள் பெரும் பணத்தை வருமானமாக குவிக்கின்றனர். ஆனால் சரியான முடிவை சரியான நேரத்தில் எடுக்காமல் அந்நிறுவனக்கள் வீழ்ச்சியை சந்திக்கும் போது நிறுவனங்களின் அழிவை ஏற்று கொள்ளாமல் மக்களின் வரி பணத்தை கொண்டு அந்நிறுவனங்களை காப்பாற்ற அரசை நிர்பந்திக்கின்றது. அரசும் அந்நிறுவங்கள் அழிந்தால் நாட்டின் பொருளாதாரத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் மக்களின் வரி பணத்தை கொண்டு காப்பற்ற வேண்டிய கட்டயத்தில் உள்ளது. அது மட்டும் அல்ல. இந்த பெரிய நிறுவனங்களின் தாக்கம் மிக பெரியது என்பதால் அரசை மிரட்டி பணம் பறிக்கும் நிலையில் உள்ளன. இதற்கு அமெரிக்க மோட்டார் நிறுவங்களும், நிதி நிறுவனக்களும் சிறந்த உதாரணங்கள் ஆகும். சுருங்க கூற வேண்டும் என்றால் லாபம் முதலாளிகளுக்கு, நட்டம் பொதுமக்களுக்கு என்பது விதியானது. அதாவது


Privatizing the Profit
Socializing the Loss.



சந்தை பொருளாதாரத்தின் அடுத்த அடிப்படை போட்டி அதிகம் என்பதால் புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கும் என்பது. ஆனால் உண்மையில் அப்படி நடக்க வில்லை. உதாரணமாக அதிக கண்டுபிடிப்புகள் தேவை படும் மருந்து தொழிலை பார்த்தால் புரியும். மற்ற துறை போல் இங்கும் ஒரு சில நிறுவனங்களின் ஆதிக்கம் தான் அதிகம் உள்ளது. மருந்து கம்பெனிகள் கண்டுபிடிப்புக்கு அதிகம் செலவு செய்யாமல் சந்தையில் உள்ள மருந்துகளையே சிறு மாறுதல் செய்து தனிபட்ட விற்பனை உரிமம் பெற்று விளம்பரம் மற்றும் பண பலத்தின் மூலம் தன் வளர்ச்சியை பெருக்குகின்றனர்.மேலும் அவர்களின் பெரும்பான்மையான கண்டு பிடிப்புகள் அமெரிக்க அரசின் வரி பணத்தில் நடக்கும் ஆராய்ச்சிகள் மூலம் வருபவையே. மருந்து கம்பெனிகளின் ஆராய்ச்சியை பற்றி அறிய அனைவரும் கட்டாயம் படிக்க வேண்டிய புத்தகம் The Truth About the Drug Companies: How They Deceive Us and What to Do About It

அதை விட மிகவும் கவலை பட வேண்டிய செய்தி மேலை நாடுகளின் நிதி நிறுவனக்களின் வளர்ச்சி. இந்த நிதி நிறுவனங்கள் எந்த கண்டு பிடிப்பும் இல்லாமல் வெறுமனே கணிப்புகளை(speculation) மட்டுமே முதலீடாக கொண்டு , எந்த வித பொருளாதார செயல் பாடும் இல்லாமல் ஒருவரிடமிருந்து ஒருவருக்கு பணத்தையும்,ரிஸ்க்கையும் வரிசையாக கைமாற்றி ஒட்டு மொத்த பொருளாதாரத்தின் மதிப்பை செயற்கையாக உயர்த்தி மாபெரும் அழிவிற்கு இட்டு சென்றனர். கடந்த வருடத்தில் உச்ச கட்டத்தில் அமெரிக்காவின் கார்ப்போரேட்டுகலின் லாபத்தில் இது போன்ற நிதி பரிமாற்ற மதிப்பு மட்டும் 41% அடைந்தது. எந்த அளவிற்கு தங்களுக்குள் பணத்தை பறிமாறிகொள்கிறார்களோ அந்த அளவு நிதி நிறுவனங்களின் மதிப்பும் வளர்ச்சியும் இருக்கும். அந்த அளவு அந்நிறுவனக்களில் பணியாற்றும் இடை தரகர்களின் லாபமும் இருக்கும். செயற்கையாக இது போல் மிக பெரிய வளர்ச்சி அடைந்த நிறுவங்கள் உண்மை நிலை தெரிந்த உடன் நட்டமடையும் போது, இதன் அளவு மற்றும் அது பொருளாதாரத்தில் அதன் பாதிப்பு கருதி அதை அரசு காப்பாற்ற வேண்டிய கட்டயத்தில் உள்ளது.

மொத்தத்தில் சந்தை பொருளாதாரம் என்பது அதன் அடிப்படையை இழந்து, லாபம் ஒன்றையே குறிக்கோளாக கொண்ட சிறிய அளவிலான முதலாளிகளின் கையில் சிக்கி திசை மாறி செல்ல தொடங்கி உள்ளது. அரசாங்கத்தால் எந்த அளவு இப்போக்கை கட்டு படுத்த முடியும் என்பது ஒரு கேள்வி குறியே.

--

Friday, April 10, 2009

பாக்கிஸ்தானின் வியாபார தந்திரம்

ஒரு தொழிலில் 100 ரூபாய் முதலீடு செய்து 1000 ரூபாய் சம்பாதித்தால் அது லாபம் என்போம். அதையே 100 ரூபாய் முதலீடு செய்து 1 லட்சம் ரூபாய் சம்பாதித்தால் அது கொள்ளை லாபம். அந்த அளவு கொள்ளை லாபம் கிடைக்கும் தொழில் ஒன்று உண்டா? ஆம் இருக்கிறது. பாக்கிஸ்தான் அந்த வியாபார தந்திரத்தை கண்டுபிடித்து பெரிய அளவில் பயனடைகிறது. என்ன என்று கேட்கிறீர்களா? பாக்கிஸ்தான் தலிபான், லஸ்கர்-இ-தொய்பா என பல தீவிரவாத இயக்கங்களை சில மில்லியன் டாலர் முதலீட்டில் உருவாக்கி, அதன் பலனாக இன்று பல பில்லியன் டாலர்களை அமெர்க்காவிடமிருந்து நிதி உதவியாக பெற்று கொள்ளை லாபம் அடைகிறது. 21ம் நூற்றாண்டில இதுவும் ஒரு லாபமிகு தொழில் தான்.

--

Wednesday, April 01, 2009

எங்கே போனது பணம்? - டாலர் அரசியல்- 4




தற்போதைய நிதி நெருக்கடியால் பண புழக்கம் திடீரென குறைந்ததை அடுத்து அனைவரின் மனதிலும் எழும் கேள்வி- இது வரை உலகில் இருந்த பணம் எல்லாம் எங்கே போனது? அவை எல்லாம் திடீரென மாயமான மர்மம் என்ன?.

இது பற்றி அறிய பணம் எவ்வாறு உற்பத்தி செய்ய படுகிறது என்று அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும். 1970க்கு முன் அரசாங்கத்தால் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ உற்பத்தி செய்ய படும் பணத்திற்க்கு (ஒரு பகுதிக்காவது) தங்கத்தை கையிருப்பாக வைத்திருப்பர். ஆனால் 1970க்கு பிறகு gold convertibility என்பது பெருமளவு மறைந்து போனது. மத்திய அரசு ஒரளவு தங்கம் மற்றும் அன்னிய பணங்களை கையிருப்பாக வைத்திருந்தாலும் அவை அச்சடிக்கப்படும் பணத்துடன் ஒப்பீடு செய்து பார்க்கும் போது அதன் மதிப்பு மிக குறைவே.பிரச்சனை ஏற்படும் போது பணத்திற்கு ஈடாக தங்கம் இருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லாததால் அதிக அளவு பணத்தை அச்சிடுவதன் மூலம் பிரச்சனையை தீர்க்க முயல்கின்றது.

இதனால பணம் என்பது செல்வத்தை சேமிக்கும் ஒரு கலமாக இருந்த நிலை மாற தொடங்கி அரசாங்கங்கள் கொடுக்கும் நம்பிக்கையின் பத்திரமாக மட்டும் இருந்து அதன் மதிப்பும் குறைய தொடங்கி விட்டது. தற்போது பெரும்பலான பணம் வெளியிட படுவது "Money As Debt." என்று கூறபடும் பணத்தை கடனாக கொடுத்து அதன் மூலம் உற்பத்தி பெருக்கத்தை ஏற்படுத்தலாம் என்ற நம்பிக்கையில் தான்.

உலக அளவில் மத்திய வங்கிகளிடம் உள்ள சேமிப்பு செல்வமாக இருக்கும் தங்கத்தின் மதிப்பு $0.84 ட்ரில்லியன்.அவை வெளியிட்டிருக்கும் பணத்தின்(M0) மதிப்பு $3.9 ட்ரில்லியன் . என்னுடைய முந்தய பதிவில் கூறியது போல் வங்கிகளால் கடன் மூலம் பெருக்க பட்ட பணம் $39 ட்ரில்லியன். பணம் எவ்வாறு பெருக்க பட்டுள்ளது என்று கூர்ந்து கவனியுங்கள்.

கடந்த பத்து வருடங்களாக நிழல் வங்கி அமைப்பு (Shadow banking System) என்று அழைக்கபடும் முதலீட்டு வங்கி(investment bank), ஹெட்ஜ் முதலீடு மற்றும் பிற வங்கி சாரா பொருளாதார அமைப்புகளின்(Non banking financial institutions) வளர்ச்சி மிக வேகமாக வளர்ந்து வருகிறது. இவ்வகை அமைப்புகளுக்கு, வங்கிகளுக்கு இருக்கும் கட்டுபாடு போல் எதுவும் இல்லை. இவை கொடுக்கும் கடன் மற்றும் எடுக்கும் Riskக்கிற்க்கு இணையாக ஒரு பகுதியை வைப்பு தொகையாக வைக்க வேண்டியதில்லை. இவர்கள் எடுக்கும் Risk மிக அதிகமாக இருக்கும். வங்கி பிறருக்கு கடனை கொடுக்கும் போது அதற்கான Riskஐ Shadow banking System எடுத்து கொண்டு அந்த Riskக்கிற்கான பணத்தை வங்கியிடம் இருந்து வசூளித்துக் கொள்ளும். இதனால் வங்கிகள் எந்த கவலையும் இல்லாமல் கடன் பெருபவரின் தரத்தை பற்றி கவலை படாமல் பெருமளவு கடன் கொடுக்க ஆரம்பிக்க தொடங்கினர். இது போன்று குழபத்தை ஏற்படுத்தும் பல புது வகையான பொருளாதார பொருட்கள்(Financial products) உருவாக்கபட்டன. இது கடன்களின் மொத்த மதிப்பை $62 ட்ரில்லியன் ஆக்கியது. மேற்கண்ட நிகழ்வுகளால் எளிமையான, வரவுக்கு சம்பந்தம் இல்லாத கடன்களால் நிலம்,பங்கு சந்தை போன்ற முதலீடுகளின் மதிப்பு வளர்ச்சிக்கு(growth) பதில் வீக்கமடைந்து(swelling) $290 ட்ரில்லியன்களானது.

தற்போதைய பொருளாதார வளர்ச்சி பற்றி கூற வேண்டுமானால் உற்பத்தி என்னும் அஸ்திவாரம் மிக குறுகலாக உள்ளது.ஆனால் அதன் மேல் கடனை அடிப்படையாக கொண்டு அரசு மற்றும் வங்கிகள் மூலம் கட்டப்பட்டுள்ள கட்டிடமோ அஸ்திவாரத்திற்கு சம்பந்தமே இல்லாமல் மிக பெரியது. அந்த கட்டிடம் ஆட்டம் காணும் போது அதிக செலவிட்டு மீண்டும் கட்டிடத்தின் அளவை பெரியதாக்க முயற்ச்சி செய்வது போல் உள்ளது.

பிஷ்சரின்(Fisher) எளிமை படுத்த பட்ட கீழ் காணும் சமன்பாடு(equation) பொருளாதாரத்தின் அடிப்படையை விளக்குகிறது

MV=PQ

M=ஒட்டு மொத்த பணத்தின் அளவு
V= பணத்தின் திசைவேகம். அதாவது பணம் எந்த அளவு மிக வேகமாக ஒவ்வொருவரிடமும் கை மாறுகிறது என்பது.
P=ஒட்டு மொத்த முதலீடுகளின் விலை
Q=ஒட்டு மொத்த பொருளாதார உற்பத்தி.


ஒட்டு மொத்த உலக பொருளாதாரமும் அமெரிக்க பொருளாதாரத்தை சார்ந்து இருப்பதால் மேற்கண்ட சமன்பாட்டை அடிப்படையாக வைத்து எவ்வாறு அமெரிக்க பொருளாதாரம் செயல் பட்டுள்ளது என்று பார்ப்போம். முதலில் அமெரிக்காவில் எந்த அளவு பணம் உருவாக்க பட்டுள்ளது என்று பார்ப்போம். கீழே உள்ள் படத்தை பார்த்தால் பணம் உருவாக்க படும் வேகத்தை பார்க்கலாம். முக்கியமாக 1970க்கு பிறகு டாலருக்கான தங்க மாற்று மறுக்க பட்டு, OPEC நாடுகளுடன் பெட்ரோலை டாலருக்கு விற்க ஒப்பந்தம் செய்ய பட்டவுடன் டாலர் உற்பத்தி மிகவும் அதிகமானது. கீழ் கண்ட படத்தில் 2009ம் ஆண்டுக்கான கணக்கு மட்டும் அரசால் வெளியிட பட்ட கணக்கு அல்ல. ஏனென்றால் அரசு M3 வெளியிடுவதை நிறுத்தி விட்டது. எளிதான கடன் அனைவருக்கும் கிடைத்ததால் பணத்தின் திசைவேகம் அதிகமாக இருந்தது.




நன்றி -Wikipedia and shadowstats.com


பணம் அதிகளவு உற்பத்தி செய்ய பட்டு "Money as debt" ஆக வெளியில் வந்தால் அது அதிக அளவு பொருளாதார உற்பத்தியை அதிகரிக்க வேண்டுமே! ஒட்டு மொத்த பொருளாதாரமும் முன்னேற வேண்டுமானால் பணம் அனைவருக்கும் செல்ல வேண்டும். அப்போது தான் அனைவரும் செலவு செய்வார்கள். அது ஒட்டு மொத்த பொருளாதார வளர்ச்சிக்கும் உதவும். ஆனால் உண்மையில் நடந்ததோ வேறு. பணம் சென்றது எல்லாம் ஒரு சிலரின் கைகளுக்கு தான்.

உயர்தட்டு மக்களின் (ஒரு சதவிதம் மட்டுமே) வருட வருமானம் $325,000லிருந்து $1.1 மில்லியனை அடைந்தது. ஆனால் நடுத்தர மக்களின் வருமானமும் கீழ்தட்டு மக்களின் வருமானமும் மிகவும் சொற்ப அளவே உயர்ந்துள்ளது. அதாவது சுமாராக 80% மக்களின் வருமானம் குறிப்பிட தகுந்த அளவு உயரவில்லை. ஆனால் பணம் அச்சிடபட்டு வெளியிடபடும் அளவு மட்டும் மிக அதிகமானது.







நன்றி--Lane Kenworthy


மற்றொரு புறம் பணம் அச்சிட்ட அளவு நாட்டின் ஒட்டு மொத்த உற்பத்தி அதிகரிக்க வில்லை. நாட்டின் உற்பத்தி உயர்ந்த அளவுகூட மக்களின் வருடாந்தர வருமான உயர்வு இல்லை.இதை கீழ் காணும் கிராப்பை பார்த்தால் புரியும்.



நன்றி—Lane Kenworthy


இதே நிலை, அதாவது பண புழக்கம் அதிக அளவு வந்து உற்பத்தி திறன் குறைவாக இருந்தால் மிக பெரிய பணவீக்கம் வரும். அதாவது உற்பத்தி பொருட்களின் விலை பல மடங்கு ஏறும். அதை தடுப்பதற்கு தான் உலகமயமாதல் என்னும் கொள்கை பயன் பட்டது.1970களில் திடீரென உயர்ந்த பெட்ரோல் விலையால் வளரும் நாடுகளின் பொருளாதாரம் அனைத்தும் பாதாளத்தை நோக்கி செல்ல ஆரம்பித்தது. அதன் விளைவாக அந்நாடுகளின் பணத்தின் மதிப்பு குறைக்க பட்டது. இதன் விளைவாக வளரும் நாடுகளில் உள்ள கனிம வளங்கள் மற்றும் மனித வளங்கள் மலிவாக்க பட்டு பொருட்களின் விலையும் குறைக்க பட்டு, அவற்றை இறக்குமதி செய்ய அமெரிக்கா தொடங்கியது.
இதன் விளைவாக உற்பத்தி பொருட்களின் விலை குறைத்து வைக்க பட்டது.

மேலே சொன்ன சமன்பாட்டில்(MV=PQ) உள்ள படி ஒட்டு மொத்த பணத்தின் அளவு(M) அதிக பணம் அச்சிட பட்டதால் மிக அதிகமானது. பணத்தின் திசைவேகமும்(V) அதிகமானது. பணம் அனைத்து பிரிவினருக்கும் சரியாக பரவி இருக்காததால் ஒட்டு மொத்த பொருளாதார உற்பத்தி(Q) அளவும் அந்த அளவு உயரவில்லை. உலகமயமாதலால் சாதாரன பொருட்களின் விலை அந்த அளவு உயராமல் உள்ளது. எனவே கடைசியில் ஒட்டு மொத்த முதலீடுகளின்(P) விலை அளவு உயர்ந்தே ஆக வேண்டிய சூழ்நிலை. அதாவது ரியல் எஸ்டேட், பங்கு வர்த்தகம் போன்றவற்றின் மதிப்பு அதிகரித்தே ஆக வேண்டிய சூழ்னிலை ஏற்பட்டது. பணம் அனைத்தும் ஒரு சிலரையே சென்றடைவதால், இந்த பொருளாதார அமைப்பு மிக பெரிய அழிவுக்கு இட்டு சென்று விட்டது. கடன் வாங்கிய பெரும்பான்மையினரால் கடனை திருப்பி செலுத்த முடியாத நிலை ஏற்படும் போது ஒட்டு மொத்த பொருளாதாரமும் ஆட்டம் காண தொடங்கி விட்டது.

பணத்தை அதிகம் வெளியிடுவதன் மூலம் பங்கு வர்த்தகம் மற்றும் ரியல் எஸ்டேட் போன்ற முதலீடுகளின் விலை வங்கிகளின் மூலம் பல மடங்கு உயர்த்த பட்டு பின் மீண்டும் அது உண்மை நிலையை அடைய முயற்சிக்கும் போது உண்டாகும் இழப்பே தற்போது ஏற்படும் இழப்புகள் எல்லாம். இந்த விலை ஏற்றத்தின் போது நன்கு லாபம் அடைந்த வங்கிகள் இப்போது நட்டம் அடைவது இயற்கையானது தான். ஆனால் இந்த இழப்பை செயற்கையாக தடுக்க எடுக்க படும் முயற்சியின் விளைவை இனி வரும் காலங்களில் காணலாம்.

இந்த பதிவிற்கு தொடர்புடைய மற்ற பதிவுகள்:

டாலர் அரசியல்

டாலர் அரசியலும் இந்திய பொருளாதாரமும்


டாலர் அரசியல் 3- மாறுமா உலக பொருளாதார அதிகார மையங்கள்?

--