Sunday, January 15, 2017

சல்லிகட்டிற்கு ஆதரவாக சிலிக்கன்வேலியில் போராட்டம்

சல்லிகட்டிற்கு தார்மீக ஆதரவு தெரிவித்து இந்தியா மட்டுமல்லாமல் உலகெங்கிலும் உள்ள தமிழர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சான்பிராசிஸ்கோ விரிகுடா பகுதி  தமிழ் மன்றம் சல்லிகட்டிற்கு ஆதராவன போராட்டத்திற்கு பொங்கல் நாளன்று சிலிக்கன்வேலியில் பிரிமாண்ட் நகரில் ஏற்பாடு செய்திருந்தது..தமிழரின் வீர விளையாட்டான சல்லிக்கட்டின் மீதான தடையை நீக்கக் கோரி ஒருமித்த கருத்து கொண்ட, சல்லிக்கட்டிக்கு ஆதரவு அளிக்கும் அனைத்து தமிழ் நெஞ்சங்களும்  குடும்பத்துடன் பங்கேற்று அமைதியான முறையில் ஆதரவை தெரிவிக்க ஒன்று கூடினர்.




மிக குறுகிய காலத்தில் எற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் பெருமளவில் மக்கள் கலந்து கொண்டனர். சிறுவர்கள், பெரியோர் என இருநூறுக்கும் மேற்பட்டோர் இந்த ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டனர். அனைவரும்  சல்லிகட்டிற்கு ஆதராவான பதாகைகள் பிடித்தும், சல்லிகட்டிற்கு ஆதரவான கோஷங்கள் எழுப்பிய படியும் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர். இந்த போராட்டத்தின் போது சல்லிகட்டின் பாரம்பரியத்தையும், அது சங்க காலத்திலிருந்து எவ்வாறு தொடரபட்டு வருகிறது என்ற வரலாற்றையும், நாட்டு மாட்டினத்தை காக்க சல்லிகட்டின் அவசியத்தை பற்றியும் அனைவருக்கும் எடுத்துரைக்கபட்டது. போராட்ட பகுதியில் சென்றுகொண்டிருந்த அமெரிக்க மக்களும் சல்லிகட்டு பற்றி பதாகை மூலமும், நேரிலும் கேட்டறிந்து தங்களது ஆதரவையும் தெரிவித்தனர். ஒரு போராட்டம் நடக்கும் போது, அங்கே காரில் செல்பவர்கள் தங்களது காரின் ஹார்ன் ஒலியை எழுப்பி ஆதாரவு கொடுப்பது அமெரிக்க கலாச்சாரம். போராட்டம் நடந்த இடத்தில் தொடர்ந்து ஹார்ன் ஒலி கேட்டவண்ணம் இருந்தது. . குளிர் மற்றும் வீட்டு பொங்கல் திருவிழா கொண்டாட்டம் அனைத்தையும் தாண்டி  பெருமளவில் மக்கள் கலந்து கொண்டது உலகில்  தமிழர்கள் எங்கு இருந்தாலும் உணர்வு பூர்வமாக தமிழர் மரபு காக்க  ஒன்றினைவர் என்பதை பரைசாற்றுகிறது.

No comments: