Showing posts with label கிழக்கு இந்திய கம்பெனி. Show all posts
Showing posts with label கிழக்கு இந்திய கம்பெனி. Show all posts

Monday, September 06, 2010

கிழக்கிந்திய கம்பெனி 6 - இங்கிலாந்தில் கி.இ.கம்பெனி



கிழக்கிந்திய கம்பெனி இந்தியாவை சுரண்டிய கதை 1

கிழக்கிந்திய கம்பெனி 2 - ஆரம்ப காலம்

கிழக்கிந்திய கம்பெனி 3 - தேயிலை அரசியல்

கிழக்கிந்திய கம்பெனி 4 - இந்தியாவின் நெசவு தொழில் - வளர்ச்சியும் வீழ்ச்சியும்

கிழக்கிந்திய கம்பெனி 5 - கொள்ளை போன செல்வங்கள்



இது வரை இந்தியாவில் கிழக்கு இந்திய கம்பெனியின் செயல்பாடுகளை பற்றி பார்த்தோம். இப்பதிவில் இங்கிலாந்தில் கி.இ.கம்பெனியின் செயல்பாடுகளை பற்றி பார்ப்போம்.

கி.இ.கம்பெனி என்பது வியாபாரிகள், வங்கி முதலாளிகள், அதிகார இடைதரகர்கள் மற்றும் ஒரு சில பணகாரர்களின் கூட்டணியால் ஆரம்பிக்க பட்டது. தற்போதுள்ள பன்னாட்டு கம்பெனியினரை போலவே அதுவும் லஞ்சங்களை இங்கிலாந்தில் உள்ள அரசியல்வாதிகளுக்கு வாரி வழங்குவதில் கில்லாடிகள். இந்நிறுவனம் ஆரம்பிக்க பட்ட சில வருடங்களுக்கு பிறகு(1693) அது கணக்கில் காட்டி அரசியல்வாதிகளுக்கு அன்பளிப்பாக(!) கொடுத்த பணம் 100000 பவுண்டை தாண்டியது, இந்த பணத்தின் மதிப்பு அந்த காலத்தில் மிக அதிகமானது.

ஆரம்ப காலத்தில் கம்பெனியின் வருமானம் இந்தியாவிலிருந்து நடை பெற்ற வர்த்தகம் மூலம் தான் கிடைத்தது. இங்கிலாந்து அரசு கிழக்கிந்திய தீவுகளுக்கான வர்த்தகத்துக்கு
கி.இ.கம்பெனிக்கு ஏகபோக உரிமையை கொடுத்து இருந்தனர். இது தான் கம்பெனியின் லாபத்துக்கான துருப்பு சீட்டு. இந்த ஏக போக உரிமையை நிலை நிறுத்தி கொள்ள அரசியல்வாதிகளுக்கு பெருமலவில் லஞ்சம் கொடுக்க வேண்டியிருந்தது. அரசியல்வாதிகளுக்கு லஞ்சம் மட்டுமல்ல. இங்கிலாந்து மத்திய வங்கிக்கு பெருமளவில் கடனும் கொடுத்து வந்தது. இங்கிலாந்து அரசு நடத்தும் போர்களுக்கும் இங்கிலாந்து மத்திய வங்கி பணம் கொடுக்கும், அந்த பணத்தின் ஒரு பகுதி கி.இ.கம்பெனி கொடுத்து வந்தது.

கி.இ.கம்பெனியின் வளர்ச்சியால் அதில் பங்கு தாரர்களாக இருந்த பல பேர் பெரும் பணக்காரர்களாக மாறினர். இது அப்போது பரம்பரை பணக்காரர்களாக இருந்த ஒரு சில செல்வந்தர்களுக்கு பிடிக்க வில்லை. அது மட்டுமன்றி இங்கிலாந்தில் இருந்த நெசவு தொழில் லாபியும் கி.இ.கபெனிக்கு எதிரியாக இருந்தது. இவர்களின் வற்புறுத்தலால் இங்கிலாந்து அரசு கி.இ.கம்பெனியின் ஏக போக உரிமையை உடைக்க 1698 ல் புதிய கம்பெனியை தொடங்கியது. தற்போதைய பன்னாட்டு கம்பெனியினரை போன்றே வலுவான நிதி நிலையில் இருந்த கி.இ.கம்பெனியின் உரிமையாளர்கள் புதிய கம்பெனியின் பங்குகளை வாங்கி தள்ளினர். அந்த கம்பெனிக்கு பெரும் நெருக்கடி கொடுத்தனர். இருந்தாலும் அந்த புதிய கம்பெனி கி.இ.கம்பெனியுடன் போட்டி போட்டு சில காலம் இருந்தது. மீண்டும் பெரிய அளவு மறைமுக வேலைகளில் இறங்கிய கி.இ.கம்பெனியினர், இங்கிலாந்து அரசிடம் 3200000 பவுண்டுகள் கொடுத்து புதிய கம்பெனியை தன்னுடன் இணைத்து கொண்டனர். மேற் சொன்ன பணம் 3 ஆண்டுகளுக்கு கிழக்கிந்திய தீவுகளில் ஏக போக உரிமையுடன் வியாபாரம் செய்ய பொருந்தும். அதற்கப்புறம் ஒவ்வொரு ஆண்டும் பெருந்தொகையை அரசுக்கு கொடுத்து கொண்டே இருக்க வேண்டும்.

தற்போதைய பங்கு வர்த்தகம் போலவே அப்போதும் இருந்தது. கி.இ.கம்பெனியினர் ஒவ்வொரு முறை போரில் வெற்றி பெரும் போதும் இங்கிலாந்தில் அதன் பங்கின் மதிப்பு பெருமளவு உயரும். உதாரனமாக பிரான்சை வென்ற போது அதன் மதிப்பு 263 பவுண்டை தொட்டது. அது கொடுத்த டிவிடெண்ட் மதிப்பும் 12.5 சதவிதத்தை தாண்டியது. வங்காளத்தை வென்றவுடன் அதன் மதிப்பு இன்னும் கூடியது.ஒரு புறம் இந்தியாவில் இந்திய மக்களின் ரத்தத்தை உறிஞ்சி தன் லாபத்தை அதிக படுத்தியது. மறுபுறம் இங்கிலாந்தில் தன் பங்கின் மதிப்பு விடு விடுவென வேகமாக உயர்ந்தது.

கம்பெனியின் லாபம் அதிகமானவுடன் கம்பெனியின் உரிமையாளர்கள் அரசியலில் ஈடுபட்டு 1780ல் சுமார் 10 சதவித இங்கிலாந்து பாரளுமன்ற உறுப்பினர்கள் கம்பெனி சார்ந்தவர்களாக
இருந்தனர்.கி.இ.கம்பெனியின் அதிகார வளர்ச்சி போலவே அதன் எதிரிகளின் வளர்ச்சியும் இருந்து. கி.இ.கம்பெனி லாபியை உடைக்க பல பேர் பல காலம் கடுமையாக போராடினர். 1780களில் கி.இ.கம்பெனியின் உரிமையை பார்லிமெண்ட் அமைக்கும் கமிட்டியிடம் கொண்டு வர முயன்று வெற்றி பெறும் நிலையில் இருந்த போது கி.இ.கம்பெனிக்கு அதிகார வர்க்கத்திடம் இருந்த சக்தி மூலம் ஆட்சியையே கலைத்து விட்டனர்.

ஆனால் கி.இ.கம்பெனியின் மீதான எதிர்ப்பு மேன் மேலும் அதற்கு பின்னர் அதிகமானது.1813ம் ஆண்டு கொண்டு வரபட்ட புதிய சட்டம் மூலம் இந்திய நாட்டை ஆளும் தலைமை பொறுப்பு இங்கிலாந்து மன்னரிடம் கொடுக்கபட்டது. இந்தியாவிற்கு இடையேயான வியாபார ஏக போக உரிமையும் பறிக்க பட்டது. 1833ம் ஆண்டு முதல் அதன் வியாபர உரிமையும் ரத்து செய்யபட்டது, இங்கிலாந்து மன்னரின் பிரதிநிதியாக இந்தியாவை ஆளும் பொறுப்பு மட்டும் கொடுக்க பட்டது. முதல் இந்திய சுதந்திர போருக்கு பின் இங்கிலாந்து அரசின் நேரடி கட்டுபாட்டுக்குள் இந்தியா வந்தது.

சஞ்சீவ் மேத்தா என்ற இங்கிலாந்து வாழ் இந்தியர் தற்போது கி.இ.கம்பெனியை வாங்கி உள்ளார்.

கி.இ.கம்பெனிக்கும் இந்தியாவிற்குமான உறவில் முக்கியமாக பார்க்க வேண்டிய விஷயங்கள் சில .

1. மதவாதிகளுக்கும் அதற்கும் உள்ள உறவு. அந்த காலத்தில் போர்ச்சுகீசியர்கள் போன்ற ஐரோப்பியர்கள் தாங்கள் சென்ற காலனி நாடுகளில் எல்லாம் தங்களுடைய மதத்தை(கிறித்துவம்), முக்கியமாக தங்கள் மதத்தின் பிரிவை பின் பற்றாத வேற்று மதம் மற்றும் தன் மதத்தின் வேற்று பிரிவை சார்ந்த மக்களை கூட்டம் கூட்டமாக எரித்து (inquisition) கொன்ற காலம் அது. ஆனால் கி.இ.கம்பெனியோ தங்கள் ஆதிக்கம் செலுத்திய பகுதிகளில் கிறித்துவ மிஷினரிகளின் செயல்பாட்டுக்கு தடை விதித்திருந்தது. இது உண்மையிலேயே நம்ப முடியாத அதிசயம்.ஏனென்றால் அப்போது மத்தத்திற்கும் அதிகாரத்திற்கும் இடையேயான உறவு மிக நெருக்கமானது. ஆனால் மக்களிடையே தங்கள் மதத்தை புகுத்துவதால் மத ரீதியான பிணக்கு அதிகரிக்கும் என்று மிஷனரிகளை அனுமதிக்கவில்லை. ஆனால் வியாபாரிகள் போர்வையில் மத போதகர்கள் இங்கு வந்திருந்ததும், கி.இ.கம்பெனியில் மத நம்பிக்கை அதிகம் கொண்டிருந்த அதிகாரிகள் அவர்களை அனுமதித்ததும் உண்மை. 1813 ல் இங்கிலாந்து அரசு கட்டயமாக மிஷனரிகளை அனுமதிக்க ஆணை பிறப்பித்தது. அதன் பின் புற்றீசல் போல் வந்த மிஷனரிகளின் வருகையும், அவர்களின் செயல்பாடும் 1857ல் முதல் இந்திய சுதந்திர போர் நடை பெற ஒரு காரணியாக ஆயிற்று.ஆனால் அதற்கு பின் கிறித்தவ மிஷனரிகள் இந்தியாவின் கல்வி மற்றும் மருத்துவ வளர்ச்சிக்கு ஆற்றிய பங்கு அளவிட முடியாது என்பதும் குறிப்பிட தக்கது.

2. கி.இ.கம்பெனியின் கால கட்டத்தில் இங்கிலாந்தின் மேற்கேயும் இது போலவே வியாபரம் நடந்தது. ஆனால் அங்கு வியாபாரம் நடத்தியவர்களின் முக்கிய குறிக்கோள் மக்களை அடிமைகளாக பிடித்து விற்று லாபம் சம்பாதிப்பது. ஆனால் கி.இ.கம்பெனியோ அது போன்ற அடிமை வியாபாரத்தை இந்தியாவில் செய்ய்வில்லை(வேறு சில தீவுகளில் செய்தது உண்மை).

3. கி.இ.கம்பெனி தன் லாபத்துக்காக இங்கிலாந்து நெசவு தொழிலாளிகளின் எதிர்ப்பையும் மீறி இந்திய துணிகளை பெருமளவு ஏற்றுமதி செய்தது. இதனால் இந்திய தொழில் துறையும் ஆரம்ப காலங்களில் பெருமளவு விரிவடைந்தது

கி.இ.கம்பெனியின் செயல்பாட்டிற்கும் தற்போதைய பன்னாட்டு கம்பெனிகளின் செயல்பாட்டிற்கும் இடையே உள்ள ஒற்றுமை என்ன என்று யோசிப்பதை இந்த பதிவை படிக்கும் உங்களிடமே விட்டு விடுகிறேன்.

--

Sunday, August 15, 2010

கிழக்கிந்திய கம்பெனி 5 - கொள்ளை போன செல்வங்கள்



கிழக்கிந்திய கம்பெனி இந்தியாவை சுரண்டிய கதை 1

கிழக்கிந்திய கம்பெனி 2 - ஆரம்ப காலம்

கிழக்கிந்திய கம்பெனி 3 - தேயிலை அரசியல்

கிழக்கிந்திய கம்பெனி 4 - இந்தியாவின் நெசவு தொழில் - வளர்ச்சியும் வீழ்ச்சியும்


1700ம் ஆண்டு இங்கிலாந்தின் GDP உலக GDPல் 2.8% ஆக இருந்தது. இந்தியாவின் GDP 25% ஆக இருந்தது. ஆனால் அதுவே 1850 ம் ஆண்டு இங்கிலாந்தின் GDP 9% ஆக உயர்ந்தும் ஆகவும் இந்தியாவின் GDP 12% ஆக தேய்ந்தும் போனது. இந்த அதிசயம் எப்படி நடந்து என்று பார்ப்போம்.

1600 லிருந்து 1800 வரை ஐரோப்பாவிற்கு வரும் வெள்ளியில் மூன்றில் ஒரு பங்கு இந்தியாவிலிருந்து நெசவு,வாசனை மற்றும் பிற பொருட்களை இறக்குமதி செய்ய செலவிடபட்டது. மேலும் அந்த கால கட்டத்தில் உலக உற்பத்தி பொருட்கள் ஏற்றுமதியில் 25% இந்தியா வசம் இருத்தது. அப்போதைய வியாபாரத்தால் கி.இ.கம்பெனிக்கு நல்ல லாபம் கிடைத்தாலும் இங்கிலாந்து நாட்டிற்கு பெரும் பின்னடைவாக இருந்தது.

அப்போதுதான் கி.இ.கம்பெனிக்கு ஒரு பொன்னான வாய்ப்பு கிடைத்தது. மொகலாய பேரரசு சிறிது சிறிதாக பலமிழக்க தொடங்கியது. இந்தியாவின் பல பகுதிகளில் ஆட்சியாளர்கள் சிறிய சிறிய மாகாணங்களை ஆள தொடங்கினர். மேலும் அவர்களுக்குள் பங்காளி சண்டை பெரிய அளவில் நடை பெற்றது. இதை கி.இ.கம்பெனி நன்கு பயன் படுத்த தொடங்கியது. ராணுவ பலம் மூலம் நாடெங்கிலும் தன் கட்டுபாட்டில் உள்ள பொம்மை அரசாங்கங்களை வைக்க தொடங்கியது.அவர்களிடமிருந்து பெருமளவு கம்பெனியும், கம்பெனியில் வேலை செய்யும் அதிகாரிகளும் பணம் கறந்தனர்.உதாரணமாக பிளாசி போரின் வெற்றிக்கு பிறகு, மீர் ஜபார் என்னும் பொம்மை ஆட்சியாளரை வங்காள மற்றும் வட இந்திய ஆட்சியில் அமர்த்தி அவரிடமிருந்து சுமார் 37.7 லட்சம் பவுண்டுகளை போருக்கு செலவாக பெற்றனர்.இது தற்போதைய மதிப்பில் டிரில்லியன்களை தாண்டும்.அதன் பிறகு அவர் டச்சு காரர்களுடன் சேர்ந்து கி.இ.கம்பெனிக்கு எதிராக திரும்பியவுடன் அவரை முழுமையாக அகற்றிவிட்டு ஆட்சியை தன் கையில் எடுத்து கொண்டது.

இந்தியாவிலிருந்து பொருட்களை வாங்க இனி இங்கிலாந்திலிருத்து தங்கத்தையும் வெள்ளியையும் கொண்டுவருவதை தவிர்க்க தொடங்கியது. தனக்கு தேவையான பணத்தை அநியாய வரி மூலம் இந்தியர்களிடமிருந்தே பெற்று கொண்டு அந்த பணத்தில் இந்திய பொருட்களை வாங்கி அதை இங்கிலாந்திற்கு ஏற்றுமதி செய்ய தொடங்கியது.மேலும் இந்தியாவிலிருந்து வரியாக பெற்ற பணத்தின் ஒரு பங்கையும் இங்கிலாந்து அரசுக்கு கொடுத்து இந்தியாவின் மீதான தன் கட்டுபாட்டையும், வியாபார தனி அதிகாரத்தையும் தன்னிடமே வைத்து கொள்ள தொடங்கியது.இதன் விளைவு இந்திய செல்வங்களை கி.இ.கம்பெனி அட்டையாக உரிய தொடங்கியது.இந்திய பொருட்களுக்கு இங்கிலாந்திலிருந்து பணம் செலவு செய்யாமலேயே ஒரு பக்க வர்த்தகமாக இந்திய்-இங்கிலாந்து வர்த்தகம் மாறியது.


முகலாயர்கள் காலத்தில் ஜமீந்தார்கள் என்போர் விவசாயிகளிடம் வரி வசூலித்து அரசுக்கு கொடுக்கும் பணியாளர்களாக இருத்தார்கள். ஆனால் கி.இ.கம்பெனியோ இந்திய நிலங்களை ஜமீந்தார்களிடம் ஏலம் விட தொடங்கியது. யார் அதிக வரி தருகிறார்களோ அவர்களுக்கே நிலம் சொந்தம் என அறிவித்தது. நிலம் ஏலத்தில் விடுவதால் ஏல தொகை அதிகமானது. அதன் விளைவு கம்பெனிக்கு லாபமும்,விவசாயிகளுக்கு கடுமையான இழப்பும் ஏற்பட்டது. ஜமீந்தார்கள் கடுமையான முறைகளை பின் பற்றி விவசாயிகளிடம் பணம் வசூல் செய்தனர். அவர்களால் பணம் வசூல் செய்ய முடியவில்லை என்றால் நிலம் அவர்களிடமிருத்து பிடுங்க பட்டு மீண்டும் ஏலம் விட படும். இதன் முக்கிய விளைவு என்ன என்றால் நிலத்தின் உரியாளர்களான ஏழை விவசாயிகளிடமிருந்து நிலத்தின் உரிமை பிடுங்க பட்டு ஜமீந்தார்கள் கைக்கு போனது. உண்மையான நில உரிமையாளர்கள் குத்தகைதாரர்களாக்க பட்டனர்.இம்முறைக்கு ஜமீந்தாரி முறை என்று பெயர்.ஜமீந்தாரி முறையினால் சுமார் 2 கோடி விவசாயிகள் தங்கள் நிலத்தை இழந்தனர். இந்தியா சுதந்திரம் பெற்றும் இன்னும் முறையாக நில் சீர்திருத்தம் நடை பெறாததால் இழந்த நிலங்களை இன்னும் அவர்கள் பெற வில்லை. அதன் விளைவை தான் நாம் தற்போது மாவோயிஸ்ட் இயக்கமாக வட மற்றும் வட கிழக்கு இந்தியாவில் பார்க்கிறோம்.


தென்னிந்திய பகுதியில் கி.இ.கம்பெனி ரியோத்வாரி முறை என்னும் முறையை அமுல் படுத்தியது. இதன் படி நிலத்தின் உரிமை விவசாயிகளிடமே இருக்கும். அவர்கள் நேரிடையாக வரியை அரசிடம் கொடுக்க வேண்டும். அவர்களால் வரியை கொடுக்க முடியவில்லை என்றால் நிலம் பிறறிடம் கொடுக்கபடும். இது ஒருவகையில் ஜமீந்தாரி முறையை விட நல்ல முறையாக இருந்தாலும் சிறு விவசாயிகள் , ஒரு சில வருடங்கள் பருவ மழை பொய்ப்பின் காரணமாக வரி கட்ட முடியவில்லை என்றால் அவர்கள் நிலத்தை இழக்கும் அபாயம் இருந்தது.

அதிக வரியை கொடுக்க வேண்டி இருந்ததால் விவசாயிகள் உணவு பயிரிலிருத்து பணபயிர்களுக்கு(பருத்தி) மாற நிர்பந்திக்க பட்டனர்.மேலும் முகலாயர் ஆட்சியில் பஞ்சம் ஏற்பட்டால் மன்னர் அவ்வப்போது வரி விலக்கு அளிப்பது வழக்கம். ஆனால் கி.இ.கம்பெனியினருக்கோ லாபம் ஒன்றே குறிக்கோள். எனவே எப்படி பட்ட பஞ்சம் வந்தாலும் அவர்களுக்கு பணம் வந்து சேர வேண்டும் அதன் விளைவு வங்காலத்தில் பெரும் பஞ்சம் ஏற்பட்டு சுமார் 1 கோடி மக்கள் இறந்தனர்

முன் பதிவில் கூறியது போல் நெசவாளர்களும் துன்புறுத்தபட்டு குறைந்த லாபத்தில் அனைத்து துணிகளையும் கி.இ.கம்பெனிக்கு விற்க வற்பறுத்தபட்டார்கள். இதன் மூலம் குறைந்த விலையில் துணிகளை வாங்கி இங்கிலாந்தில் நிறைந்த விலைக்கு விற்றும் கம்பெனி நல்ல காசு பார்த்தது.

இவ்வாறாக இந்தியாவிலிருந்து கி.இ.கம்பெனியால் சுரண்டபட்ட செல்வத்தின் மதிப்பு வருடத்திற்கு 2 மில்லியனை தாண்டும் என கணக்கிடபட்டுள்ளது. இதில் முக்கியமாக கவனிக்க வேண்டிய செய்தி என்ன என்றால், இந்த பணம் தான் இங்கிலாந்தின் தொழில் புரட்சி நடப்பதற்கு தேவையான மூலதனமாக இருந்தது.தொழிற்புரட்சிக்கு தேவையான இயந்திரங்களை உருவாக்க 0.6 - 2 மில்லியன் பவுண்டுகள் தான் இங்கிலாந்திற்கு தேவை பட்டது என்பது குறிப்பிடதக்கது.

இங்கிலாந்தில் தொழிற்புரட்சி முழுமையாக வளர்ச்சி பெற்ற பின் இந்திய - இங்கிலாந்தின் வணிக போக்கு வேறு மாதிரி திரும்ப தொடங்கியது. இங்கிலாந்து தொழிற் சாலைகளுக்கு தேவையான மூல பொருட்களை(பருத்தி, இரும்பு போன்றவை) குறைந்த விலைக்கு இந்தியாவிலிருந்து இங்கிலாந்திற்கு ஏற்றுமதி செய்தது கி.இ.கம்பெனி. அந்த மூல பொருட்களை கொண்டு மதிப்பு கூடிய பொருட்களை இங்கிலாந்தில் உற்பத்தி செய்து அதை மிக அதிக விலைக்கு இந்தியாவில் இறக்குமதி செய்தது. அதன் விளைவு, இந்திய செல்வங்கள் பெருமளவு இங்கிலாந்து நோக்கி செல்ல ஆரம்பித்தது.

அடுத்த பதிவில் கி.இ.கம்பெனி இங்கிலாந்தில் செயல் பட்ட விதம் மற்றும் அதற்கும் இங்கிலாந்து அரசுக்குமான உறவு பற்றி பார்ப்போம்.

--

Monday, August 02, 2010

கிழக்கிந்திய கம்பெனி 4 - இந்தியாவின் நெசவு தொழில் - வளர்ச்சியும் வீழ்ச்சியும்



கிழக்கிந்திய கம்பெனி இந்தியாவை சுரண்டிய கதை 1

கிழக்கிந்திய கம்பெனி 2 - ஆரம்ப காலம்

கிழக்கிந்திய கம்பெனி 3 - தேயிலை அரசியல்


கிழக்கிந்திய கம்பெனியின் தோற்றம்,ஆரம்ப கால வளர்ச்சி மற்றும் தேயிலை தொடர்பு பற்றியும் முந்தைய பதிவுகளில் பார்த்தோம். அது இந்திய தொழில் துறையை எப்படி நசித்தது என்பது பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.கி.இ.கம்பெனி வியாபாரத்தை மட்டும் நடத்திய வரை அது ஒரளவுக்கு இந்தியாவிற்கு நல்லதாகத்தான் இருந்தது.அவுரங்கசீப்பின் கடைசி காலத்திலிருந்து முகலாய பேரரசு பலமிழக்க தொடங்கியது. அவரின் மறைவிற்கு பிறகு முகலாய பேரரசு இந்தியாவின் மீது இருந்த தன் கட்டுபாட்டை இழக்க தொடங்கியது. அந்த காலத்தில் நாதிர்ஷா இந்தியாவின் மீது படையெடுத்து இந்தியாவை வெற்றி கொண்டதோடு இல்லாமல் டெல்லியில் ஒரு ரத்த ஆறையே ஓட விட்டு சென்றான். இது முகலாய பேரரசை மேலும் பலவீனபடுத்தியது. இந்நிலையில் இங்கிலாந்து மற்றும் பிரான்சு கிழக்கிந்திய கம்பெனிகள் இந்தியாவின் தெற்கு பகுதி மற்றும் பிற பகுதிகளை சிறிது சிறிதாக தன் ஆதிக்கத்தில் எடுத்து வர ஆரம்பித்தார்கள்.பல்வேறு மகாணங்களை வென்று அல்லது அங்கு தனது அதரளாவர்களை பொம்மை அரசாக வைத்து தன் ஆதிக்கத்தை நிலை நாட்டினர். பிளாசி போரின் வெற்றிக்கு பிறகு பிரன்ச்சு ஆதிக்கம் சிறிது சிறிதாக குறைந்து இங்கிலாந்தின் கிழக்கிந்திய கம்பெனியின் ஆதிக்கம் விரிய தொடங்கியது.இந்த கால கட்டத்தில் இந்தியாவின் நெசவு தொழில் எவ்வாறு வளர்ச்சி அடைந்து வீழ்ச்சி அடைந்தது என்று பார்ப்போம்.

நெசவு தொழில் முதலீடு - இங்கிலாந்து,இந்தியா - இரு வேறு முறைகள்

முன் பதிவில் கூறியது போல் கி.இ.கம்பெனியின் ஆரம்ப காலத்தில் இந்தியாவிலிருந்து இங்கிலாந்து, அய்ரோப்பா மற்றும் ஆசிய நாடுகளுக்கு துணிகளை அதிக அளவு ஏற்றுமதி செய்தது. அதன் விளைவாக இந்தியாவில் நெசவு தொழிலின் வளர்ச்சி மிக வேகமாக இருந்தது.இந்த வளர்ச்சி இந்தியாவில் பிற தொழிலில் இருப்பவர்கள் பலரை நெசவு தொழில் நோக்கி கொண்டு வந்தது. இதில் முக்கியமாக கவனிக்க பட வேண்டியது நெசவு தொழில் வளர்ச்சி நவீன தொழில்நுட்பம் மூலம் வளர்ச்சி அடைய வில்லை.இதன் வளர்ச்சி இந்தியாவில் அதிக மக்களை இழுப்பதன் மூலம் வளர்ந்தது. புதியவர்கள் நெசவு தொழிலில் இறங்கும் போது முதலீடு தேவை பட்டது. நெசவு தொழிலாளர்களுக்கு டாட்னி எனப்படும் முறைப்படி கடன் கொடுக்க பட்டது.முதலீட்டாளர்கள் பணத்தை நெசவு தொழிலாளிகளிடம் முதலீடாக கொடுப்பர்.உற்பத்தி செய்யும் துணிகளை முதலீட்டாளர்களிடம் முன்பே நிர்ணயிக்கபட்ட விலையில் விற்க வேண்டும். இங்கிலாந்தில் அதே கால கட்டத்தில் புட்டிங் அவுட் முறையில் கடன் கொடுக்க பட்டது. அதன் படி வியாபாரி உற்பத்தியாளரிடம் பருத்தி போன்ற மூல தனங்களை கொடுத்து உற்பத்தி செய்ய சொல்வார்கள். உற்பத்தியாளர்கள் துணியாக நெய்த பின் அதை வந்து வாங்கி கொள்வார்கள். இந்திய வியாபாரிகளோ பருத்தி வாங்குவது, எவ்வாறு உற்பத்தி செய்பது போன்ற முடிவுகளை உற்பத்தியாளர்களிடமே விட்டு விடுவார்கள்.இங்கிலாந்தில் மேற் கூறிய படி தொடங்கிய நெசவு தொழில் நாளாக நாளாக வேறு வடிவம் எடுக்க தொடங்கியது. வியாபாரிகள் ஒவ்வொரு உற்பத்தியாளரையும் பார்த்து மூலப்பொருட்களை கொடுத்து, உற்பத்தியை கண்காணித்து, துணியை வாங்குவதை விட, அனைத்து உற்பத்தியாளரையும் ஒரே இடத்துக்கு வர செய்து அங்கு அவர்களுக்கு மூல பொருட்களை கொடுத்து அங்கேயே துணியை நெய்ய வைத்து அவர்களிடம் நெய்ய பட்ட துணிகளை வாங்க தொடங்கினர். இது பிற்காலத்தில் தொழிற்கூட முறையில் (Industrial Production) உற்பத்தியை தொடங்க முன் மாதிரியாக இருந்தது .அதே நேரத்தில் அப்போது இங்கிலாந்தில் ஏற்பட்ட பருத்தி தட்டு பாடும்,இவ்வகை தொழிற்கூட முறை துணி உற்பத்தியும் இங்கிலாந்தில் தொழில் புரட்சி ஏற்பட ஒரு காரணியாக இருந்தது எனலாம்.

கிழக்கிந்திய கம்பெனி போட்டியாளர்களை விட அதிக துணிகளை வாங்க இந்த டாட்னி முறையை உபயோக படுத்த தொடங்கியது. கி.இ.கம்பெனி டாட்னி கடன்களை கொடுத்து நெசவாளர்களை தங்கள் பக்கம் இழுத்தது .நெசவாளர்களிடம் இருத்து பல முறை துணிகளை வாங்க முடியாமல் இம்முறை பல தடவை கடை பிடிக்க படுவதும், விட்டு விடுவதாகுமாக இருந்தது.

கி.இ.கம்பெனியின் கட்டுபாட்டில் இந்திய நெசவாளர்கள்

கி.இ.கம்பெனி வியாபாரம் மட்டும் செய்து வந்த வரை இந்திய நெசவு தொழிலாளர்கள் நல்ல லாபமடைந்தனர். ஆனால் கி.இ.கம்பெனியினரிடம் அரசியல் அதிகாரம் கிடைக்க ஆரம்பித்தவுடன் நிலமை மாற தொடங்கியது.டாட்னி முறை வணிகம் மாறி, கம்பெனி படித்த இந்திய உயர் சாதியினரை குமாஸ்தாக்களாக பணியில் அமர்த்தி அவர்கள் மூலம் கடன் கொடுத்து நெசவாளர்களை கண்காணிக்க செய்து துணிகளை வாங்க ஆரம்பித்தது. நெசவாளர்களும் கி.இ.கம்பெனிக்கு மட்டும் துணிகளை நெய்து கொடுக்க கட்டாயபடுத்த பட்டனர். மறுத்தவர்கள் துன்புறுத்தபட்டார்கள். கி.இ.கம்பெனியினர் நிர்ணயித்த விலையிலேயே துணிகளை விற்க கட்டாய படுத்தபட்டார்கள்.இதன் விளைவி கி.இ.கம்பெனிக்கு இந்திய துணி ஏற்றுமதி மிக பெரிய லாபத்தை கொடுத்தது. இங்கிலாந்துக்கு ஏற்றுமதி செய்யும் துணிகளை பிற ஐரோப்பிய நாடுகளுக்கு மீண்டும் ஏற்றுமதி செய்து மிக பெரிய பணம் பார்த்தனர் கி.இ.கம்பெனி. இவ்வகை துணி வர்த்தகத்தில்,கம்பெனிக்கு முதலீட்டை விட மும்மடங்கு லாபம் கிடைத்தது.

இங்கிலாந்து நெசவாளர்கள் லாபி

இங்கிலாந்தில் இந்திய துணிகள் கடல் போல் பரவ தொடங்கியதால் இங்கிலாந்து நெசவு தொழில் பாதிக்க பட தொடங்கியது.இங்கிலாந்து நெசவு தொழிலாளர்கள் லாபி இதை தடுக்க மிக வேகமாக செயல்பட்டது. அவர்களின் வற்புறுத்தளால் 1685ம் ஆண்டு இந்திய துணிகளுக்கு 10 சதம் சுங்க வரி விதித்தது. 5 ஆண்டுகளில் அது 10 சதமாக உயர்த்தபட்டது.1719 ம் ஆண்டு இந்திய துணிகளை அணிபவர்களுக்கு 5 பவுண்டும் விற்பவர்களுக்கு 20 பவுண்டும் அபராதம் விதிக்கும் அளவுக்கு சென்றது.1813ம் ஆண்டு சுங்க வரி 85% அளவுக்கு உயர்த்த பட்டது.

இங்கிலாந்தில் ஒரு புரட்சி



அப்போது இங்கிலாந்தில் நடந்த ஒரு புரட்சி உலக பொருளாதாரம் மற்றும் வாணிபத்தின் போக்கையே மாற்ற தொடங்கியது. அந்த புரட்சி கத்தியின்றி ரத்தமின்ற நடந்தது. அது ஒரு அரசியல் புரட்சி அல்ல. அது ஒரு அறிவியல் புரட்சி அது தான் தொழிற்புரட்சி. உற்பத்திக்கு மனிதர்களை மட்டும் நம்பி கொண்டிருந்த நிலையை மாற்றி இயந்திரங்களை கொண்டு உற்பத்தியை தொடங்க ஆரம்பித்தனர். Production by mass என்ற நிலையை மாற்றி mass production என்ற சிந்தனைக்கு உலகை கொண்டு சென்றது.சாமுவேல் கிராம்டன் 1779ம் ஆண்டு கண்டு பிடித்த நெசவு இயந்திரம் தொழில் புரட்சிக்கு வித்திட்டது..

இந்திய நெசவு தொழிலின் வீழ்ச்சி

இந்திய நெசவு தொழிலின் அழிவுக்கு இங்கிலாந்து தொழிற்புரட்சி தான் காரணம் என்பது பெரும்பாலான ஆய்வாளர்களின் கருத்தாக உள்ளது. ஆனால் உண்மையில் இந்திய துணிகளின் தரத்திற்கு இணையாக இங்கிலாந்து தொழிற்சாலைகளில் நெய்ய பட்ட துணிகள் போட்டி போட முடியவில்லை.தொழிற்புரட்சி ஏற்பட்டு பல ஆண்டுகள் ஆகியும், அதாவது 1815ம் ஆண்டு இந்தியாவில் இருந்து இங்கிலாந்திற்கு ஏற்றுமதி செய்ய பட்ட நெசவு பொருட்களின் மதிப்பு 1.3 மில்லியன் பவுண்டுகளாக இருந்தது. அதே நேரம் இங்கிலாந்திலிருந்து இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்ய பட்ட நெசவு பொருட்களின் மதிப்பு 26000 பவுண்டுதான் இருந்தது. இதிலிருந்து இங்கிலாந்து தொழிற்புரட்சியால் இந்தியாவின் நெசவு தொழிலை நேர்மையான வாணிபத்தில் ஒன்றும் செய்ய முடியவில்லை என்று தெரிகிறது.

அதன் பிறகு இந்தியாவின் நெசவு தொழில் மிக வேகமாக அழிய தொடங்கியது.1832 ம் ஆண்டு முதல் இந்தியா இங்கிலாந்துக்கு ஏற்றுமதி செய்த நெசவு பொருட்களை விட, இங்கிலாந்திலிருந்து இந்தியாவிற்கு இறக்குமதி செய்த நெசவு பொருட்களின் மதிப்பு அதிகமாக தொடங்கியது.இந்தியாவின் நெசவு தொழிலின் வீழ்ச்சிக்கு பல காரணங்களை கூறலாம்.. முதலாவதாக இங்கிலாந்து தொடர்ச்சியாக இந்திய தூணிகளுக்கு விதித்த சுங்க வரையை தொடர்ச்சியாக அதிகரித்ததை கூறலாம். அடுத்ததாக நெப்போலியன் கால பிரான்ஸுக்கு எதிரான போரின் காரணமாக இங்கிலாந்தில் இருந்து மற்ற ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய பட்ட துணிகளை தடை செய்தது.இந்தியாவிலிருந்து இங்கிலாந்திற்கு ஏற்றுமதி செய்ய பட்ட துணிகளில் பாதிக்கு மேல் பிற ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய பட்டது. ஆனால் பிரான்சுக்கு எதிரான போரின் போது, இங்கிலாந்து இவ்வகை ஏற்றுமதிக்கு தடை செய்தது. இதனால் இந்திய நெசவு வணிபம் பெரிதும் பாதிக்க பட்டது. கிழக்கிந்தய கம்பெனி அரசியல் அதிகாரம் பெரும் வரை,விவசாயிகளிடமிருந்து அரசு பெற்ற வரியின் மூலம் பெருமளவு நகர் புற வசதி படைத்தவர்களின் எண்ணிக்கையும் மற்றும் ஆட்சியாளார்களின் செலவினங்களும் அதிகரித்திருந்தது, அதனால் அவர்களின் தேவையை பூர்த்தி செய்ய அதிக நெசவு தொழில் வளர்ச்சி தேவை பட்டது, ஆனால் கி,இ.கம்பெனி வரி வசூல் செய்ய அரம்பித்தவுடன் அந்த செல்வங்கள் இங்கிலாந்து நோக்கி செல்ல தொடங்கிஅதால் இந்திய நகர் புர வர்க்கத்தின் எண்ணிக்கையும் குறைந்தது, இதன் விளைவாக நெசவு பொருட்களுக்கு உள்நாட்டு தேவையும் குறைய ஆரம்பித்தது.ஆரம்ப காலங்களில் கி.இ.கம்பெனிக்கு இங்கிலாந்து அரசின் மீது அதிக தாக்கம் (influence) இருந்தது. அப்போது அதன் லாபத்திற்காக இந்திய துணிகளை இங்கிலாந்தில் விற்பதற்கு ஏற்ற சூழ்நிலையை அரசின் மீது முடிந்த வரை அழுத்தம் கொடுத்து ஏற்படுத்தி வந்தது. ஆனால பிற்காலத்தில் அதன் தாக்கம் சிறிது சிறிதாக குறைய ஆரம்பித்தது. 1813ம் ஆண்டு ஆங்கில அரசின் சட்டத்தின் மூலம் அதன் அதிகாரம் பெருமளவு குறைக்க பட்டு ஆங்கில அரசுக்காக இந்தியவை ஆளும் ஒரு ஏஜென்டு மட்டும் தான் என்ற நிலைக்கு தள்ள பட்டது. ஆங்கில அரசின் கட்டுபாட்டிற்கு இந்தியா வர ஆரம்பித்தவுடன், ஆங்கில அரசு தன் நாட்டு நெசவு தொழிலை ஊக்குவிப்பதே முதல் குறிக்கோளாக கொண்டு இந்திய நெசவு தொழிலை முழுமையாக அழிக்க தொடங்கியது. கடைசியாக இங்கிலாந்தில் ஏற்பட்ட தொழில் புரட்சியும் இந்திய சவு தொழிலின் அழிவுக்கு ஒரு காரணமாக இருந்தது எனலாம்.

அடுத்த பதிவில் கி.இ.கம்பெனியால் எவ்வாறு இந்திய செல்வங்கள் கொள்ளை போயின என்று பார்க்கலாம்.

--

Saturday, July 10, 2010

கிழக்கிந்திய கம்பெனி 3 - தேயிலை அரசியல்



கிழக்கிந்திய கம்பெனி இந்தியாவை சுரண்டிய கதை 1


கிழக்கிந்திய கம்பெனி 2 - ஆரம்ப காலம்



உலகிலேயே தண்ணீருக்கு அடுத்த படியாக அதிகம் குடிக்கபடும் பாணம் தேயிலை. தேயிலை தோன்றியது வடகிழக்கு இந்தியா,பர்மா, சீனா போன்ற பகுதியாக இருக்கலாம் என்று கருதபடுகிறது.இந்தியாவில் பல நூற்றாண்டுக்கு முன்பே தேயிலையை உபயோகபடுத்திய சான்று இருந்தாலும் சீனாவில் தான் தேயிலை அதிக அளவில் உபயோகபடுத்த பட்டு, அதிக அளவில் பயிரிட பட்டும் வந்தது.இங்கிலாந்தில் தேயிலை 17ம் நூற்றாண்டின் ஆரம்பம் வரை அறிமுகம் இல்லாமல் தான் இருந்தது. சார்லஸ் 2ம் மன்னர் 1660ல் ஆட்சிக்கு வந்தார். அவருடைய போர்ச்சுகீசிய மனைவிக்கு டீ குடிக்கும் பழக்கம் இருந்தது.இதை தொடர்ந்து 1664 ம் ஆண்டு 100 பவுண்டு தேயிலையை கிழக்கிந்திய கம்பெனி முதன் முதலாக ஜாவாவிலிருந்து இறக்குமதி செய்தது. நாட்டின் ராணி டீ குடிப்பார் என்ற உண்மையை பயன் படுத்தி சிறிது சிறிதாக ராஜ குடும்பம் மற்றும் பணக்கார இங்கிலாந்து பிரபுக்களிடம் அதை விற்க தொடங்கியது. ( இன்றும் பன்னாட்டு கம்பெனிகள் தங்கள் உற்பத்தி செய்யும் புதிய பொருட்களுக்கு விளம்பரம் மற்றும் மற்ற வழிகளில் சந்தையை உருவாக்குவது போல்?).தேயிலையின் பயன்பாடும் இங்கிலாந்தில் சிறிது சிறிதாக அதிகரிக்க ஆரம்பித்தது.1813ம் ஆண்டு இறக்குமதி செய்ய பட்ட தேயிலையின் அளவு 1.45 கோடி கிலோவை தொட்டது.அந்த கால கட்டத்தில் கி.இ.கம்பெனியின் ஒட்டு மொத்த வர்த்தக மதிப்பில் 60% தொட்டது தேயிலை வர்த்தகம்.இங்கிலாந்து அரசின் வரி வருவாயில் 10% வருவாய் தேயிலையின் மீது விதிக்க பட்ட வரி மூலம் மட்டும் கிடைத்தது என்றால் தேயிலை இறக்குமதியின் அளவை புரிந்து கொள்ளுங்களேன்!.

இங்கிலாந்து வேலு நாயக்கர்கள்

சீனா மற்றும் இந்தியாவுடனான வர்த்தகத்துக்கு கி,இ.கம்பெனிக்கு ஏக போக உரிமையை அளித்திருந்தது ஆங்கில அரசு. அதன் விளைவாக தேயிலையின் விலையை மிக அதிக அளவிற்கு நிர்ணயித்து பெரும் லாபத்தை கண்டது கம்பெனி. அதே நேரத்தில் இங்கிலாந்து அரசு நடத்திய போர்களுக்கு செலவிழிக்க தேயிலைக்கு அதிக வரி விதித்தது. அதன் விளைவாக தேயிலையின் விலை அதிகமானது.சாதாரண மக்கள் தேயிலையை வாங்குவது கடினமானது. அதே நேரத்தில் மற்ற அய்ரோப்பிய நாடுகளில் தேயிலை மிக குறைந்த விலைக்கு கிடைக்க ஆரம்பித்தது. அதன் விளைவு இங்கிலாந்தில் பல "வேலு நாயக்கர்கள்" தோன்றினர். தேயிலை கடத்தல் மிக பெரிய தொழிலாக வளர்ந்தது. தேயிலை கடத்தல் மூலம் சாதாரண மக்களுக்கு குறைந்த விலையில் டீ கிடைத்ததால், தேயிலை கடத்தல் மன்னர்கள் சாதாரண மக்களிடையே ஹீரோவானார்கள். அது மட்டுமல்ல. கி.இ.கம்பெனி ஊழியர்கள் கப்பலில் திரும்பி வரும் போது தனிபட்ட முறையில் நிறைய தேயிலை கொண்டு வந்து நன்கு பணம் பார்த்தார்கள்.

சீனாவும் அபினி போரும்

தேயிலை இறக்குமதியின் அளவு அதிகம் ஆகி கொண்டே சென்`ற போது மற்றொரு விளைவும் ஏற்பட்டது. தேயிலையை எதாவது கொடுத்து தானே வாங்க வேண்டும். இங்கிலாந்து பொருட்களை சீனர்கள் விரும்பி வாங்குவது இல்லை. சீனர்கள் தேயிலைக்கு மாற்றாக கேட்டது வெள்ளி.17ம் நூற்றாண்டின் நடு பகுதி வரை அய்ரோப்பிய நாடுகள் சுமார் 28 மில்லியன் கிலோகிராம் வெள்ளியை சீனாவிடம் கொடுத்து தேயிலையை வாங்கின. இதன் விளைவு பெருமளவு செல்வம் சீனா நோக்கி செல்ல ஆரம்பித்தது. வெள்ளிக்கு மாற்று எது என்று அய்ரோப்பியர்கள் யோசித்து கொண்டிருக்கையில் அவர்களுக்கு ஒரு அதிசய பொருள் கிடைத்தது. அது தான் ஓப்பியம். அதாவது நம்ம ஊர் அபின் தான் அது.சீனர்களுக்கு ஒப்பியத்தை விற்று அதற்கு மாற்றாக தேயிலையை வாங்க ஆரம்பித்தார்கள்.அதனால் ஓப்பியத்தின் தேவை அதிகமானது. இந்திய வங்க மாநிலத்தில் பெருமளவு ஓப்பியத்தை பயிரிட தொடங்கியது. ஒப்பியம் என்பது போதை பொருள் ஆனாலும் லாபம் ஒன்றே குறிக்கோளான கி.இ.கம்பெனிக்கு நியாய தர்மம் பற்றி யோசிக்க அவசியமில்லை.சீன மக்கள் போதைக்கு அடிமை ஆவதை தடுக்க சீன அரசு ஒப்பியம் விற்பனையை தடை செய்தது. ஆனால் கி.இ.கம்பெனி சீன வியாபாரிகளிடம் சீனாவில் கடனுக்கு தேயிலை வாங்கி, வங்காலத்தில் அதற்கு ஈடான ஓப்பியத்தை சீனா வியாபரிகளுக்கு விற்பனை செய்தது. அது கி.இ.கம்பெனியின் கப்பலில் சீனாவின் கடல் ஓரத்தில் இறக்க பட்டு அதை சினாவிற்குள் சீன வியாபரிகளால் கடத்த பட்டு கொண்டு செல்ல பட்டது.இந்த போதை பொருள் வியாபாரத்தை சீனா முழுமையாக தடை செய்ய முயன்ற போது கி.இ.கம்பெனி மற்றும் சீனாவிடையே இரு ஓப்பியம் போர்கள்(அபினி போர்கள்) நடந்தது. இதன் மூலம் கி.இ.கம்பெனிக்கு சீனாவில் நிறைய இடங்களில் வியாபாரம் செய்யும் உரிமையும் ஹாங்காங் நகரின் மீது முழு கட்டுபாடும் கிடைத்தது.

போஸ்டன் தேனீர் விருந்து

கி.இ.கம்பெனிக்கும் இந்திய அரசியலுக்கும் இடைபட்ட தொடர்பை தான் நம்மில் பெரும்பாலோர் அறிந்திருப்பர். கி.இ.கம்பனிக்கும் அமெரிக்க விடுதலை போருக்கும் மிக பெரிய நெருக்கம் உள்ளது.கி.இ.கம்பெனியின் நிதி நிலை மோசமாக இருந்ததாலும் இங்கிலாந்து அரசு போர்களை புரிய அதிக அளவு செலவிட வேண்டியதாலும் அரசு மற்றும் கி.இ.கம்பெனியின் வருமானத்தை பெருக்க புதிய யுத்தியை கையாண்டது. அதன் படி அமெரிக்கா உட்பட்ட இங்கிலாந்து காலனி நாடுகளில் தேயிலையை இங்கிலாந்தில் இருந்து மட்டும் வாங்க வேண்டும் என்று சட்டமியற்றியது. அதாவது சீனாவிலிருந்து இங்கிலாந்திற்கு தேயிலையை க்.இ.கம்பெனி மட்டும் வாங்கி விற்க முடியும். அந்த தேயிலை இங்கிலாந்தில் விற்பனை செய்ய பட்ட பின் , அதை வர்த்தகர்கள் இங்கிலாந்திலிருந்து வாங்கி அமெரிக்காவில் விற்பனை செய்வார்கள்.இங்கிலாந்தில் தேயிலைக்கு விதிக்க பட்ட வரி அதிகமாக இருந்ததாலும் டச்சு காரர்கள் அய்ரோப்பாவில் வரியின்றி தேயிலை விற்றதாலும் டச்சு காரர்கள் மற்றும் பிற அய்ரோப்பியர்களின் தேயிலை மிக மலிவாக கிடைத்தது. இதனால் அமெரிக்காவில் பெருமளவு கடத்தல் தேயிலை விற்பனை ஆனது..இங்கிலாந்திலிருந்து பல இடை தரகர்களை கடந்து அமெரிக்காவிற்கு தேயிலை செல்ல வேண்டியிருந்ததால், கடத்தல் தேயிலையை விட இந்த தேயிலையின் விலை மிக அதிகமாக இருந்தது. எனவே அங்கீகரிக்க பட்ட தேயிலை வியாபாராம் மிகவும் குறைந்தது. இதனால் கி.இ.கம்பெனியின் வருமானமும், அரசுக்கு தேயிலை வரி மூலம் வரும் வருமானமும் குறைந்தது.


இதை சரிகட்ட 1773ம் ஆண்டு கி.இ.கம்பெனிக்கு தேயிலையை அமெரிக்காவில் நேரடியாக விற்பனை செய்ய இங்கிலாந்து அரசு அனுமதி அளித்தது. மேலும் காலனி நாடுகளில்(அமெரிக்காவில்) விற்பனை செய்யும் தேயிலைக்கென்று தனி வரி விதித்தது..இதன் விளைவாக கி.இ.கம்பெனி இடை தரகர்களை நீக்கி குறைந்த விளைக்கு தேயிலையை அமெரிக்காவில் விற்க தொடங்கினர். இது அமெரிக்காவில் தேயிலையை கடத்தல் தொழிலில் ஈடுபட்டவர்களுக்கு பேரிடியாக இருந்து. அமெரிக்கர்களுக்கோ காலனி நாட்டின் மீது இங்கிலாந்து தனி வரியை விதித்ததை ஏற்று கொள்ள முடியவில்லை. மேலும் கி.இ.கம்பெனி பிற பொருட்களின் விற்பனைக்கும் பிற்காலத்தில் தனியுரிமை பெற்றுவிடுமோ என்ற அச்சமும் இருந்தது. அந்த நேரத்தில் இங்கிலாந்திலிருந்து அமெரிக்காவிற்கு தேயிலை ஏற்றி வந்த கப்பல் போஸ்டன் துறைமுகத்தில் நின்றது..கி.இ.கம்பெனியின் தேயிலையை எதிர்த்த அமெரிக்கர்கள் போஸ்டன் துறைமுகத்தில் நின்ற கப்பலில் இருந்த தேயிலையை தூக்கி வீசி கடலில் எரிந்தார்கள். இது அமெரிக்க சுதந்திர போருக்கு முன்னோடியாக இருந்தது எனலாம்.இதன் மூலம் கி.இ.கம்பெனி அமெரிக்கா சுதந்திர போருக்கு காரணியாகவும் இருந்தது.

போஸ்டன் தேனீர் விருந்து காந்தி அடிகள் இந்தியாவில் உப்பு சத்தியாகிரகத்தை தொடங்க முன்னோடியாக இருந்தது.அன்று அமெரிக்கர்கள் தேயிலை மூலம் சுதந்திர போராட்டத்தை நடத்தினார்கள். காந்தி அதையே உப்பு மூலம் இந்தியாவில் தொடர்ந்தார். இன்று அதே பாஸ்டன் தேனீர் விருந்து ஒபாமாவின் அரசாங்க செலவு மற்றும் அரசாங்க அதிகார விரிவு படுத்தலை எதிர்த்து திரும்ப ஆரம்பிக்க பட்டுள்ளது


இந்தியாவில் தேயிலை




சீன தேயிலையை இங்கிலாந்தில் விற்க ஏக போக உரிமை இருந்த வரை கி.இ.கம்பனி தேயிலை வர்த்தகத்தில் மட்டும் ஈடுபட்டு வந்தது. அதாவது சீனாவிலிருந்து வாங்கி இங்கிலாந்தில் விற்றது. தன் ஆதிக்கத்தில் இருக்கும் இந்தியாவில் தேயிலையை பயிரிட்டு அதிக உற்பத்தி செய்ய வேண்டும் என்று தோன்றவில்லை. கி.இ.கம்பெனியின் ஊழியரான புரூஸ் முதன் முதலில் 1831ம் ஆண்டு அசாமில் தேயிலை உற்பத்தி செய்யலாம் என்றும் அசாம் தேயிலை சுவையும் நன்றாக இருக்கும் என்று கண்டறிந்தார்.அதன் பிறகு சிறிது சிறிதாக இந்தியாவில் தேயிலை பயிரிடும் பகுதி அதிகமானது.1888ம் ஆண்டு இந்திய தேயிலை இறக்குமதியின் மதிப்பு சீனாவிலிருந்து இறக்குமதியாகும் தேயிலையின் மதிப்பை விட அதிகமானது

கி.இ.கம்பெனியின் தேயிலை அரசியலும் இன்றைய பன்னாட்டு கம்பெனிகளும்

கி.இ.கம்பெனியின் மேற் கூறிய செயல்பாட்டுக்கும் தற்போதைய பன்னாட்டு கம்பெனிகளின் செயல்பாட்டிற்கும் பல ஒற்றுமைகள் உள்ளன. அவற்றில் சிலவற்றை பற்றி பார்ப்போம்

1.எந்த ஒரு தொழிலிலும் ஒரு சில கம்பெனியின் கைக்கு மட்டும் முழு உரிமை வந்துவிட்டால் அது நுகர்வோர்களை பெருமளவில் பாதிக்க படுவதை பார்த்தோம். முன்பு கி.இ.கம்பெனி அரசின் கட்டுபாட்டின் மூலம் தனியுரிமை பெற்றது. தற்போது ஒவ்வொரு துறையிலும் ஒரு சில கம்பெனிகள் நிதி நிறுவனக்கள் மற்றும் தனியார் முதலீட்டாளர்கள் மூலம் தனது துறையில் உள்ள சிறு கம்பெனிகளை வாங்கியும், பெரிய கம்பெனிகளுடன் Merger and Acqusition மூலம் ஒன்றினைந்தும் oligopoly ஆக மாறுவதை காண்கிறோம். இதன் விளைவு முக்கியமாக மருந்து மற்றும் வேதியல் பொருட்கள் துறையில் தற்போது காண ஆரம்பிக் கிறோம்

2.கி.இ.கம்பெனி தேயிலை இறக்குமதியில் ஏகபோக உரிமை பெற்றவுடன் அதற்கு போட்டி இல்லாததால் இந்தியா போன்ற தன் ஆதிக்கத்தில் இருந்த பகுதிகளில் தேயிலை உற்பத்தியை பெருக்கி , அதிக தேயிலையை உற்பத்தி செய்து தேயிலை குறைந்த விலையில் அனைவருக்கும் கிடைத்து தன்னுடைய லாபத்தையும் அதிகரிக்க முயலாமை பற்றி பார்த்தோம்.

தற்போது பன்னாட்டு கம்பெனிகள் காப்புரிமை என்ற பெயரில் ஒரு சில கண்டுபிடிப்புகளுக்கு தனியுரிமை பெற்று அதன் மூலம் பெரிய அளவில் லாபம் அடைகின்றனர். உதாரணமாக பன்னாட்டு மருந்து கம்பெனிகள் (கண்டு பிடிப்பின் பெரும்பான்மையான பகுதி மேல் நாட்டு அரசு பணத்தில் பல்கலை கழகத்தில் நடைபற்றதாக இருந்தாலும்) ஒரு சில மருந்துகளுக்கு காப்புரிமை பெற்று அதை கொள்ளை லாபத்திற்கு விற்று பணம் சம்பாதிக்கின்றனர். அதில் வரும் லாபத்தை கூட புதிய கண்டுபிடிப்புகளுக்கு செலவிடுவதில்லை. பழைய மருந்துகளிளேயே சிறிய மாறுதல் செய்து விளம்பரம் செய்து வருவாயை பெருக்குகின்றனர்.

3.கி.இ.கம்பெனி சீனாவில் போதை மருந்தை விற்று லாபம் அடைந்ததை பார்த்தோம்.

இன்றைய பன்னாட்டு கம்பெனிகளும் பங்கு சந்தையில் தன் மதிப்பை நிலை நிறுத்த எது வேண்டுமானாலும் செய்ய தயாராக உள்ளனர். உணவு பொருட்கள் மற்றும் மருந்து பொருட்களில் கலப்படம், பழுதுள்ள கார்களை தெரிந்தே விற்பனை செய்வது என பல அடுக்கி கொண்டே செல்லலாம்.

வரலாற்றில் காலமும், கம்பெனிகளின் பெயர்களும் தான் மாறி வருகிறது. நிகழ்வுகள் என்னவோ மீண்டும் மீண்டும் அதே தான் நடக்கிறது!

இந்தியாவிலிருந்து எவ்வாறு செல்வங்கள் சூறையாட பட்டது என்பது பற்றியும், இந்திய தொழில் துறையை எவ்வாறு கி.இ.கம்பெனி நசித்தது என்பது பற்றியும் அடுத்த பதிவில் காண்போம்

--

Sunday, July 04, 2010

கிழக்கிந்திய கம்பெனி 2 - ஆரம்ப காலம்



கிழக்கிந்திய கம்பெனி இந்தியாவை சுரண்டிய கதை 1





முதல் பகுதியில் ஆசியாவுக்கான வர்த்தக வழிகளை பற்றியும் கிழக்கிந்திய கம்பெனி(கி.இ.க) ஆரம்பிக்க பட்ட வரலாறு பற்றியும் பார்த்தோம். கி.இ.க இந்தியாவில் இருந்த கால கட்டத்தை இரு பிரிவாக பிரிக்கலாம்.முதல் கால கட்டம் அது இந்தியாவிடம் வர்த்தகம் மட்டும் செய்த காலம். இரண்டாம் கால கட்டம் அது இந்தியாவை சிறிது சிறிதாக அரசியல் ரீதியாக தன் கட்டுபாட்டில் எடுத்து வைத்து கொண்ட காலம்.

இவற்றில் முதல் கால கட்டத்தில் இந்தியாவிற்கு நிறைய நன்மை கிடைத்தது எனலாம்.கி.இ.க ஆரம்பிக்க பட்ட போது அது 30,000 ஸ்டெர்லிங் பவுண்டு மதிப்புள்ள தங்கம் மற்றும் வெள்ளியை இங்கிலாந்தில் இருந்து ஏற்றுமதி செய்து அதற்கு ஈடான வாசனை பொருட்கள், துணி மற்றும் பிற பொருட்களை இறக்குமதி செய்ய அனுமதி அளிக்கபட்டது.அனுமதிக்க பட்ட தங்கம் மற்றும் வெள்ளியின் ஏற்றுமதி மதிப்பு சிறிது சிறிதாக வருடந்தோரும் அதிகரிக்கபட்டது. உதாரணமாக 1629ம் ஆண்டு அது 160,000 பவுண்டாக(125,000 -வெள்ளி, 40,000 - தங்கம்) அதிகரிக்க பட்டு இருந்தது.அதாவது செல்வமாக கருதபடும் தங்கம், வெள்ளி இந்தியாவிற்கு இறக்குமதி செய்ய பட்டு இந்தியாவிலிருந்து வாசனை பொருட்கள் மற்றும் உற்பத்தி பொருட்கள் இங்கிலாந்திற்கும் அதன் பிறகு அங்கிருந்து பிற மேலை நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டது. அதனால் தொழில் வளர்ச்சி மற்றும் செல்வ வளம் இந்தியாவில் பெருகியது. ஆனால் அப்போது இருந்த முகலாய அரசாங்கமோ அந்த செல்வங்களை மாட மாளிகைகள் கட்டவும் பிற ஆடம்பர செலவுகளுக்கும் செலவிட்டது. பிற்காலத்தில் கிழக்கிந்திய கம்பெனியால் கிடைத்த செல்வ பெருக்கை முதலாளித்துவ இங்கிலாந்தோ தொழிற்புரட்சி ஏற்படுத்த முதலீடாக மாற்றியது.

கி.இ.க ஆசியாவிலிருந்து பொருட்களை வாங்க பெருமளவு தங்கம் வெள்ளி செலவிட்டதால் இங்கிலாந்தின் செல்வம் வெளியேற தொடங்கியது.இதை தவிர்க்க இங்கிலாந்தில் உற்பத்தி ஆன துணிவகைகளையும் இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்து அதன் மூலம் வருமானம் ஈட்ட பணிக்க பட்டது. இங்கிலாந்து துணிவகைகள் கடுங்குளிரில் அணிபவையாக இருப்பதால் ஆசியாவில் உள்ள வெப்ப பிரதேசங்களில் உடுத்தி கொள்ள உகந்ததாக இல்லை. எனவே இங்கிலாந்து துணிகள் ஆசிய மக்களுக்கு மிதியடிகளாகவும் ஜன்னல் விரிப்புகளாக மட்டும் பயன் பட்டன. அது மட்டுமின்றி இந்திய மற்றும் சீன துணிகளின் தரத்திற்கும் அது இல்லை.நம்மில் பெரும்பாலானோர் வாசனை பொருட்கள் உற்பத்தியில் இந்தியா தான் எப்போதும் முதலிடம் பெற்றிருந்தது என்று நினைத்து கொண்டு இருப்போம். ஆனால் அது உண்மையில்லை. கிழக்கு இந்திய தீவுகள் என்று அழைக்கபடும் ஜாவா, சுமத்திரா, இந்தோனேசியா போன்ற நாடுகள் வாசனை பொருட்கள் உற்பத்தியிலும், வாணிபத்திலும் முதலிடத்தில் இருந்தது(அதனால் தான் என்னவோ ராஜேந்திர சோழன் இந்நாடுகள் மீது போர் தொடுத்து தன் ஆதிக்கத்தில் வைத்திருந்தான் போலும்!). எனவே கி.இ.க- பொதுவாக வாசனை பொருட்களை ஜாவா சுமத்திரா போன்ற நாடுகளில் பெருமளவு கொள்முதல் செய்தது. அந்நாட்டினர் இங்கிலாந்து துணிகளை வாங்க விரும்பவில்லை. எனவே வெள்ளியை கொடுத்தே வணிபம் செய்ய வேண்டி இருந்தது. அப்போது இந்திய துணிகளுக்கு அந்நாட்டு மக்களிடம் வரவேற்பு இருப்பதை கண்ட கி.இ.க, உடனே இந்தியாவில் துணி தொழிற்சாலை நிறுவி, அந்த துணிகளை கீழை நாடுகளில் வாசனை பொருட்களுக்கு மாற்றாக விற்க தொடங்கியது. இதன் மூலம் கி.இ.க கம்பெனிக்கும் வருமானம் கிடைத்தது. இங்கிலாந்தின் வெள்ளியும் சேமிக்க பட்டது, இந்திய துணிகளுக்கு பெருமளவில் புதிய சந்தை கிடைத்ததால் இந்திய தொழில் துறையும் வளர்ந்தது.

இந்திய துணிகளை கிழக்காசிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதோடு இருந்து விடாமல், அதை இங்கிலாந்திலும் விற்க ஆரம்பிக்க பட்டது. இங்கிலாந்தில் இந்திய துணிகளுக்கு பெருமளவு கிராக்கி ஏற்பட்டது.இந்திய துணிகளின் இறக்குமதியும் கிழக்கிந்திய கம்பெனியின் செல்வ செழிப்பும் பல மடங்கு பெருகியது. அது இங்கிலாந்து துணி தொழில் துறையையே அழித்து விடும் அளவு வளர்ந்ததால் ஒரு கட்டத்தில் இந்திய துணிகளை அணிவதையே இங்கிலாந்து அரசு தடை செய்யும் அளவிற்கு சென்றது.1770 ஆண்டு கம்பெனியின் வணிப மதிப்பில் 60% இடத்தை துணி வர்த்தகமே பிடித்து கொண்டது. இந்திய துணி தொழிற்துறை பெருமளவு வளர இது உதவியது.

அந்த காலத்தில் வாசனை பொருட்களை அதிக அளவு உற்பத்தி செய்த ஜாவா,சுமத்திரா போன்ற கிழை நாடுகள் பிற ஐரோப்பியர்களின் ஆதிக்கத்தில் இருந்ததால், தமிழ் நாடு மற்றும் கேரளா பகுதியில் வாசனை பொருட்கள் உற்பத்தியை பெருமளவு பெருக்க அதிக முயற்சி எடுத்து வாசனை பொருட்கள் வாணிபத்தையும் இந்தியாவில் பெருக்கியது.

1664ம் ஆண்டு முதன் முதாலாக கி.இ.க சீன டீயை இங்கிலாந்தில் அறிமுக படுத்தியது. அதன் பிறகு இங்கிலாந்தில் டீயின் தேவை அதிகமாக இருந்ததால் , டீயை சீனாவிலிருந்து பெருமளவு இறக்குமதி செய்தது. பிறகு சீனாவை மட்டும் நம்பி இருக்காமல் இந்தியாவிலும் பெருமளவு டீயை பயிரிட தொடங்கி தோட்டக்கலை வளர்ச்சிக்கும் உதவியது.

மேற்கூறிய வியாபார பொருட்களை இங்கிலாந்துக்கு மட்டும் ஏற்றுமதி செய்யவில்லை. இங்கிலாந்துக்கு ஏற்றுமதி செய்ய பட்ட பொருட்கள் அங்கிருந்து பிற அய்ரோப்பிய நாடுகள் மற்றும் அய்ரோப்பிய நாடுகளின் காலனி நாடுகளாக இருந்த அமெரிக்க,ஆப்ரிக்க நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யபட்டது. இந்திய பொருட்களின் சந்தை உலகலவில் பெரிதாக விஸ்தரிக்கபட்டது.

கிழக்கிந்திய கம்பெனியின் வரவால் இந்திய வியாபாரிகள் முக்கியமாக குஜராத்திய வியாபாரிகள் மற்றும் பிற ஆசிய நாடுகளின் வியாபாரிகள் மற்றும் துருக்கி போன்ற நாடுகளின் வியாரிகளின் வியாபாரம் பெருமளவு பாதிக்க பட்டது எனலாம்.

கிழக்கிந்திய கம்பெனி என்றவுடன் அது இந்தியாவை அடிமை படுத்தி, வர்த்தக ரீதியாக சுரண்டியது பற்றி தான் அனைவரின் நினைவிற்கும் வரும். ஆனால் கிழக்கிந்திய கம்பெனியால் வர்த்தக ரீதியாக மேற் கூறிய நன்மைகளும் இந்தியாவிற்கு கிடைத்தது.

அடுத்த பதிவில் கிழக்கிந்திய கம்பெனியின் தேயிலை தொடர்பையும் அது உலக அரசியலில் ஏற்படுத்திய மாற்றத்தையும் பார்ப்போம்


--

Tuesday, June 22, 2010

கிழக்கிந்திய கம்பெனி இந்தியாவை சுரண்டிய கதை 1






கிழக்கிந்திய கம்பெனி இந்தியாவின் செல்வத்தை சுரண்டியது என்று பள்ளியிலும் பத்திரிக்கைகளிளும் படித்து இருக்கிறோம். ஆனால் அது எவ்வாறு பொருளாதார மற்றும் தொழில் ரீதியாக இந்தியாவை சுரண்டியது என்ற விவரம் நம்மில் பலருக்கு தெளிவாக தெரியாது.வரலாற்றை தெளிவாக தெரிந்து வைத்து கொள்வது பிழைகளை திரும்பி செய்வதை தவிர்க்குமல்லாவா?

கடல் வழி வாணிபம் என்பது பல காலமாக பணம் கொழிக்கும் தொழிலாக இருந்தது.அரசாங்கங்களும் தங்கள் நாட்டு வணிபர்களின் தடையற்ற வியாபாரத்திற்காக பல வழிகளிலும் உதவி வந்தனர்.தற்போது இருப்பது போல் மின்னனு பொருட்கள், கார்கள் போன்றவை அந்த காலத்தில் இல்லை. எனவே அந்த கால வணிபம் என்பது வாசனை பொருட்கள் சார்ந்த உணவு பொருட்கள், துணிகள், ஆடம்பர பொருட்கள் சார்ந்ததாகவே இருந்து.பல நுற்றாண்டுகளாக ஜாவா, இந்தோனிசியா, இந்தியா போன்ற நாடுகளில் உற்பத்தியாகும் வாசனை பொருட்களுக்கும் சீனா மற்றும் இந்திய துணி வகைக்களுக்கும் உலக சந்தையில் பெரும் மதிப்பு இருந்தது.இந்த வாசனை பொருட்கள் வியாபாரத்தில் தங்களது நாட்டை சேர்ந்த வணிபர்களின் உதவிக்காக போரை நடத்துவது பல காலமாக நடைமுறையில் இருந்துள்ளது.பல நூறு ஆண்டுகளுக்கு முன் ராஜேந்திர சோழன் ஆட்சி காலத்தில் ஜவா,சுமத்திரா போன்ற நாடுகளின் மேல் நடத்தபட்ட போர், உலக வரலாற்றில் வியாபாரத்திற்காக நடத்தபட்ட போர்களில் ஒன்று.

இந்தியா,சீனா, இந்தோனிசியா போன்ற நாடுகளில் இருந்து வியாபார பொருட்களை அய்ரோப்பாவிற்கு கொண்டு செல்ல இரு வழிகள் இருந்தது. ஒன்று பட்டு பாதை(Silk Route) எனப்படும் சீனா,மத்திய ஆசியா வழியாக செல்லும் நில வழி பாதை. மற்றொன்று அரேபியா வரை கடல் வழியும் அங்கிருந்து அய்ரோப்பாவிற்கு தொடர்ந்து செல்லும் நில வழி பாதை.இந்த இரு பாதைகளில் வியாபாரம் நடந்தாலும் எகிப்து மற்றும் அரேபியர்களை தாண்டி செல்ல வேண்டி இருந்ததால் அவர்களது ஆதிக்கம் அதிகம் இருந்தது.



எகிப்து மற்றும் அராபியர்களின் கட்டுபாட்டில் இருந்த வாசனை பொருட்கள் வாணிபம், இந்தியாவிற்கு கடல் வழி கண்டு பிடிக்க பட்ட பின் அய்ரோப்பியர்களின் கட்டுபாட்டிற்கு வர தொடங்கியது.நிலம் மற்றும் கடல் மூலம் வாணிபம் நடந்த வரை, ஆசியாவில் இருந்த பல நாடுகளில் இருந்த வணிபர்கள் இடைதரகர்களாக இருந்து லாபத்தின் பெரும் பகுதியை அனுபவித்து வந்தனர். முழுமையான கடல் வழி வாணிபம் தொடங்க பட்ட பின் ஒட்டு மொத்த லாபமும் அய்ரோப்பிய வாணிபர்களின் கைக்கு போக தொடங்கியது.

கடல் வழி கண்டு பிடிக்க பட்ட பின், ஆசியாவிற்கிடையேயான வாசனை பொருட்கள் வாணிபம் முதலில் போர்ச்சுகீசியர்கள் மற்றும் ஸ்பெயின் நாட்டினர் வசம் இருந்தது. ஸ்பெயின் நாட்டினர் இங்கிலாந்திற்கு எதிராக கடல் வழி போரை தொடுத்து 1588ம் ஆண்டு தோல்வி அடைந்தனர். இந்த சமயத்தில் டச்சுகாரர்களால் டச்சு கிழக்கிந்திய கம்பெனியும் ஆங்கிலேயர்களால் கிழக்கிந்திய கம்பெனியும் ஆரம்பிக்க பட்டது. இவை இரண்டும் தான் முதன் முதலில் தொடங்க பட்ட பன்னாட்டு கம்பெனிகள் எனலாம்.1600ம் ஆண்டு டிசம்பர் 31ம் நாள் கிழக்கிந்திய கம்பெனி தொடங்க பட்டது. அது ஆரம்பிக்க பட்ட போது அதன் பெயர் Governor and Company of Merchants of London Trading into the East Indies.ஆரம்ப காலங்களில் ஒவ்வொரு கப்பலின் கடல் பிரயாணமும் தனி தனி வியாபாரம் போல் எடுத்து கொள்ள பட்டு அதற்கென்று தனி முதலீட்டாளர்கள் இருந்தனர்.பின்னர் 1657ம் ஆண்டு தற்போதைய பெரிய கம்பெனிகள் போல் பங்குகளை தனியாருக்கு வினியோகித்து கூட்டு பங்கு வணிக முறையில் செயல்பட்டு வந்தது.

பல கம்பினிகள் ஆரம்பிக்க பட்டால் போட்டி ஏற்பட்டு விலை குறைந்து லாபம் கிடைக்காது என்பதால் டச்சு மற்றும் ஆங்கிலேய அரசுகள் அந்த இரு கம்பெனிகளுக்கும் வாசனை பொருள் வாணிபத்திற்கு தனியுரிமை கொடுத்தது.1615 ம் ஆண்டு முகலாய மன்னர் ஜகாங்கீருடன் ஏற்பட்ட ஒப்பந்தத்தை அடுத்து சூரத் நகரில் கிழக்கிந்திய கம்பெனி தன் தொழிற்சாலை மற்றும் தளத்தை அமைத்து கொள்ள அனுமதி அளிக்கபட்டது.அதன் பிறகு பல நகரங்களில் கிழக்கிந்திய கம்பெனி தன் தொழிற்சாலையை தொடங்கியது(சென்னையில் 1639 ம் வருடம்). 1647 ம் ஆண்டு கிழக்கிந்திய கம்பெனி 23 நகரங்களில் தன் தொழிற்சாலைகளை தொடங்கி இருந்தது.வியாபரத்தில் ஈடுபட்ட கிழக்கிந்திய கம்பெனிக்கு நாடுகளின் மீது போர் தொடுக்கவும்,ஆட்சி அமைக்கவும், தனி படையை வைத்து கொள்ளவும் 1670ம் ஆண்டு இங்கிலாந்து மன்னர் அனுமதி அளித்தார். கிழக்கிந்திய கம்பெனி ஒரு சாதாரன கம்பெனியாக இருந்தாலும், இந்த முடிவின் விளைவாக பிற்காலத்தில் 20% உலக மக்கள் தொகையை ஆளவும், இங்கிலாந்தை விட அதிக அளவு வருமானத்தை ஈட்டவும் , சுமார் 250000 பேர் கொண்ட படையை வைத்து நடத்தவும் வழி வகுத்தது.

இனி வரும் பதிவுகளில் கிழக்கிந்திய கம்பெனி வியாபார ரீதியாக எவ்வாறு இந்தியைவை சுரண்டியது என்றும் இந்திய தொழிற் வளர்ச்சியை எவ்வாறு சீரழித்தது என்றும் அதன் விளைவாக இங்கிலாந்து அடைந்த லாபங்களை பற்றியும் காண்போம்

--

Tuesday, June 15, 2010

சபிக்கப்படும் வரங்கள் - மெக்காலே கல்வித் திட்டம்


இந்தியாவின் கல்வி முறை மேற்கத்திய கல்விக்கு இணையாக வளராததற்கு முக்கிய காரணமாக பொது ஜன ஊடகம் மூலம் ஒட்டு மொத்தமாக பரப்பப்படும் காரணி மெக்காலே கல்வித் திட்டமாகத் தான் இருக்கும். மெக்காலே வழி கல்வி கற்றவர்களை மெக்காலைட்டுகள் என்றும், சொந்த நாட்டின் கலாச்சாரத்தை மதிக்காதவர்கள் என்றும் சொல்லாடலாக வலம் வருகிறது. மெக்காலே கல்வித் திட்டம் என்றால் என்ன என்றும் அது பரிந்துரைக்கப்பட்ட காலத்தின் பின்னனியைப் பற்றியும் அறிமுகம் இல்லாத பெரும்பாலோர் அது உண்மை என்றே நம்பி வருகின்றனர். மெக்காலே கல்வித் திட்டம் பரிந்துரைக்கப்பட்ட ஆண்டு 1835ம் ஆண்டு. முதலில் அந்த காலத்தில் கல்வி முறை எப்படி இருந்தது என்று பார்ப்போம்.

இரண்டாயிரம் ஆண்டுகளாக இந்திய மண்ணில் வர்ணாஸ்ரம முறை வலுவாக காலை ஊன்றி இருந்தது. இதன் விளைவாக கல்வி என்பது மதத்தின் பெயரால் பெரும்பான்மையான மக்களுக்கு மறுக்கபட்டு வந்தது. புத்த மதம் இந்தியாவில் ஆட்சி செய்தபோது தற்போதைய பல்கலைகழகங்களைப் போன்றே நாலந்தா போன்ற இடங்களில் பல்கலைக்கழகங்கள் சாதி பாகுபாடு இன்றி அனைவருக்கும் கல்வி அளித்தது (அந்தக் காலத்தில் கல்வி என்பது மத போதனை தான் என்பது வேறு செய்தி). ஆனால் அதன் பிறகு இந்து மதம் தழைத்தோங்கிய பின் சமஸ்கிருத வழி குருகுல கல்வி வளர்ந்து அது உயர் சாதியினருக்கும் மட்டும் சென்றடைந்தது. அதுமட்டுமன்றி இந்தியாவில் இருந்த பல்வேறு சிறு மற்றும் குறுநில மன்னர்களைச் சுற்றி உயர் சாதியினரை மட்டும் உள்ளடக்கிய பெரிய அதிகார வர்க்கம் உருவானது. அந்த அதிகார வர்க்கம், கல்வி சாமனியரை சென்றடைவதைத் தடுத்து, அவர்கள் மட்டும் பயனடைய உதவி செய்தது.

அது மட்டுமன்றி சமஸ்கிருத மொழி கடவுள் பேசும் தேவ மொழி என்ற செய்தி பரப்பப்பட்டு அதைப் படிக்கும் உரிமை ஒரு சில உயர் சாதியினருக்கே உரியது என்பதும் பெரும்பான்மையான உழைக்கும் மக்கள் அதைப் படிக்க முயல்வது பாவம் என்பதும் நீதி ஆனது. அப்போதைய கல்விக் கூடங்களில் கற்றுக் கொடுக்கப்படும் பாடங்களும் சமஸ்கிருத மொழியில் வேதம் ஓதுவது எப்படி என்பது பற்றிய பாடங்களும் பிற மத ரீதியான பாடங்களும் தான். இது ஒரு புறம் இருக்க மறுபுறம் இஸ்லாமிய மன்னர்கள் தொடங்கிய கல்விக் கூடங்களில் குரான் மற்றும் இசுலாமிய மதரீதியான பாடங்கள் தான் இருக்கும். ஒரு புறம் இந்து மன்னர்களின் பள்ளிகளில் சமஸ்கிருதத்தை அடிப்படையான இந்து சமய பாடமுறைகளும், மறுபுறம் இசுலாமியப் பள்ளிகளில் அராபிய மற்றும் பெர்சிய மொழிகளில் இசுலாமிய மத பாட முறைகளும் தான் இருந்தது.

இந்தச் சூழ்நிலையில் கிழக்கிந்தியக் கம்பெனி இந்தியாவில் சிறிது சிறிதாக காலூன்ற ஆரம்பித்தது. பிரிட்டன் பாராளுமன்றம், கிழக்கு இந்தியக் கம்பெனி கட்டாயமாக இலட்சம் ரூபாயை இந்தியர் கல்விக்காக செலவிட வேண்டும் என்று உத்திரவிட்டது. அந்த லட்சம் ரூபாயை எவ்வாறு செலவிடுவது என்று கிழக்கிந்தியக் கம்பெனி சிந்தித்தபோது அப்போதைய கல்வியாளர்களால் இறுதி செய்யபட்டது இரண்டு முறைகள். ஒன்று இந்தியாவில் அப்போது நடைமுறையில் இருந்த "தாய் மொழி" வடிவில் கற்று கொடுக்கப்பட்டு வந்த கல்விமுறை. மற்றொன்று ஆங்கில் முறையில் மேற்கத்திய வழிக் கல்வி. அந்த இரண்டில் மெக்காலே தேர்ந்து எடுத்தது மேற்கத்திய முறை அடிப்படையான ஆங்கில வழிக் கல்வி. அது தான் இன்றைய தேசியவாதிகளாலும், இந்து மத அடிப்படைவாதிகளாலும் சாடப்பட்டு வருகிறது.

தாய்மொழிக் கல்வி என்றவுடன் ஏதோ இந்தியாவில் இருந்த அனைத்து மக்களும் தங்களது தாய் மொழியில் கற்க வாய்ப்பு கிடைத்து அதை மெக்காலே தடுத்து விட்டதாக நினைத்து விட வேண்டாம். அந்தக் கால தாய்மொழிக் கல்வி என்று குறிப்பிடப்படுவது சமஸ்கிருதம், அரேபிய மற்றும் பெர்சிய மொழி வழிக் கல்விதான். இது அவரது குறிப்புகளில் தெளிவாக இருக்கிறது. அன்று மெக்காலே பாரம்பரிய கல்வி முறையை தேர்ந்து எடுத்து இருந்தால், அதன் விளைவாக இந்தி ஆதிக்கம் இந்தியா முழுதும் படர்ந்து மற்றைய பிராந்திய மொழிகளின் அடிப்படையிலான கல்வியை முழுமையாக அழித்திருக்க வாய்ப்புள்ளது. அது மட்டுமன்றி மத ரீதியான காரணங்களைச் சொல்லி 1000 ஆண்டுகளாக நடந்து வந்ததைப் போல் கல்வி செல்வத்தையும் அதன் மூலம் வரும் வளர்ச்சி மற்றும் பொருள் செல்வத்தையும் ஒரு சில ஆதிக்க சாதியினருக்கு மட்டும் தனியுடமை ஆக்கி, தங்களின் வளர்ச்சிக்கு ஒரு போட்டியே இல்லாத சூழ்நிலையை உருவாக்கிக் கொள்ளவும் வாய்ப்பு உள்ளது. இவையெல்லாம் உண்மை என்றாலும் மேற்கத்தைய கல்விக்கு ஆதரவாக மெக்காலே சொன்ன காரணங்கள் இவை இல்லை. அவரது கல்வித் திட்டத்திற்கு ஆதரவாக அவர் கூறிய காரணங்களைப் பார்ப்போம். .

“மெக்காலேயின் கருத்துப்படி ஆங்கிலத்தில் தான் கலை, அறிவியல், வரலாறு என அனைத்துத் துறைகளிளும் அதிக அளவு புத்தகம் உள்ளது. சமஸ்கிருதத்தில் உள்ள புத்தகங்களில் உள்ள கருத்துகள் ஒரு பீரோவின் பாதி அளவில் உள்ள ஆங்கிலப் புத்தகங்களில் உள்ளதை விட குறைவாகவே இருந்தது என்பது தான். அது மட்டுமன்றி கம்பெனியினரின் பணத்தை அறிவியல் சார்ந்த கல்விக்காக செலவிடுவதை விடுத்து மத போதனைகளை மட்டும் கற்றுத் தரும் இந்திய பாரம்பரிய ரீதியான கல்விக்கு செலவிடுவது என்பது வீண். இந்தியர்களின் அறிவுத் திறனை வளர்க்கும் விதமாக புதிதாக அறிமுகப்படுத்தும் கல்வி முறை இருக்க வேண்டும். இந்தியர்களின் அறிவுத் திறனை வளர்க்க உதவுவது ஏராளமான கலை பொக்கிஷங்களை உள்ளடக்கிய ஆங்கில மொழி வழியில் இருப்பது தான் நன்று. எனவே இந்தியர்கள் ஆங்கிலத்தைப் படித்தால் அவர்களுக்கும் உலகில் உள்ள அனைத்து கலை பொக்கிஷங்களையும் படிக்கும் வாய்ப்பு கிடைக்கும். அது அவர்களது அறிவின் வளர்ச்சிக்கு உதவும். அந்த சமயத்தில் கூட இந்திய அதிகார வர்க்கத்தினர் ஆங்கிலத்தில் நன்கு பேசும் புலமை பெற்று ஆங்கிலப் புத்தகங்களை படிக்கின்றனர். எனவே ஆங்கில மொழிக் கல்வியை அனைவருக்கும் அளித்தால் அது அனைத்து மக்களின் வளர்ச்சிக்கும் உதவும்.

ஆங்கிலேயர்களின் ஆதிக்கம் ஆப்ரிக்கா, ஆஸ்திரேலியா என பல நாடுகளில் விரிவடைகிறது. இனி வரும் காலங்களில் ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்தில் உள்ள நாடுகளிடையே ஏற்படும் வர்த்தகத்தின் அளவு மிக அதிகமாக இருக்கும். எனவே ஆங்கில வழிக் கல்வி பிற்காலத்தில் இந்தியர்களுக்கு இந்த வர்த்தகத்துக்கும் உதவியாக இருக்கும். 15ம் நூற்றாண்டில் கிரேக்க மற்றும் லத்தீன் மொழிகளில் இருந்த அளவு கலை செல்வம் ஆங்கிலத்தில் இல்லை. ஆனால் அப்போது இங்கிலாந்தில் இருந்தவர்கள் ஆங்கிலத்தில் தான் படிப்போம் என்று கூறி பிற மொழிகளில் இருந்த கருத்துகளைப் புறக்கணிக்கவில்லை. மாறாக சில காலத்துக்குப் பின் அவற்றை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார்கள். அனைத்து புத்தகங்களையும் சமஸ்கிருதத்திலும் அரேபிய மொழியிலும் குறைந்த காலத்தில் மொழி பெயர்ப்பது என்பது கடினம். அதுமட்டுமின்றி இந்தியர்களும் ஆங்கில வழி கற்று உலக நடப்புகள் மற்றும் அறிவியலைக் கற்றால், இந்தியர்களும் மேற்கத்திய சிந்தனை மற்றும் மேற்கத்திய நீதி நெறிமுறைகளை அறிந்து அதை பின்பற்றப் வாய்ப்பாகவும் இருக்கும்.”

இனி அவர் மீது தொடுக்கப்படும் தாக்குதல் பற்றி பார்ப்போம். மெக்காலேவின் கல்வியின் நோக்கமே இந்தியர்களை மொழிபெயர்ப்பாளர்களாக உருவாக்கி சிந்தனை ரீதியான அடிமைகளாக உருவாக்க முயன்றார் என்பது தான். அதற்கு அவர்கள் காட்டும் மேற்கோள்

"We must at present do our best to form a class who may be interpreters between us and the millions whom we govern; a class of persons, Indian in blood and colour, but English in taste"

ஆனால் இந்த மேற்கோள் பாதியை மட்டும் கொண்டது. அந்த மேற்கோளின் மீதி பாதியை பெரும்பான்மையானோர் மறைத்து விடுவர். அதன் முழு செய்தியையும் படித்துப் பாருங்கள். அவர் கூறியதற்கான காரணம் உங்களுக்கு புரியும்.

"In one point I fully agree with the gentlemen to whose general views I am opposed. I feel with them, that it is impossible for us, with our limited means, to attempt to educate the body of the people. We must at present do our best to form a class who may be interpreters between us and the millions whom we govern; a class of persons, Indian in blood and colour, but English in taste, in opinions, in morals, and in intellect. To that class we may leave it to refine the vernacular dialects of the country, to enrich those dialects with terms of science borrowed from the Western nomenclature, and to render them by degrees fit vehicles for conveying knowledge to the great mass of the population. "

அதாவது கல்விக்காக ஒதுக்கப்பட்டுள்ள பணத்தில் அனைத்து இந்தியருக்கும் கல்வி அளிப்பதும், ஆங்கிலத்தில் உள்ள புத்தகங்கள் அனைத்தையும் பிராந்திய மொழிகளில் மொழி பெயர்ப்பதும் கடினம். அது மட்டுமன்றி ஆங்கிலேயர்களுக்கு அவர்களது மொழியைப் புரிந்து கொண்டு அதை அவர்கள் ஆளும் மக்களிடம் அவர்களது மொழியில் பேச ஆட்கள் உடனடியாக தேவைபட்டது. எனவே முதலில் ஆங்கிலத்தை இந்தியாவில் உள்ள ஒரு சிலரிடம் கற்று கொடுப்போம். அவர்கள் ஆங்கிலத்தில் உள்ள புத்தகங்கள் எல்லாவற்றையும் படித்து தங்களது மொழியில் மொழி பெயர்த்து அனைவருக்கும் கொண்டு செல்லட்டும் என்பதேயாகும்.

தற்போது வலையுலகத்தில் வேகமாகப் பரவி வரும் செய்தி மெக்காலே இங்கிலாந்து பார்லிமெண்டில் பேசியதாக வரும் செய்தி. அதில் கூறபட்டுள்ள செய்தி

"I have travelled across the length and breadth of India and I have not seen one person who is a beggar, who is a thief. Such wealth I have seen in this country, such high moral values, people of such calibre, that I do not think we would ever conquer this country, unless we break the very backbone of this nation, which is her spiritual and cultural heritage, and, therefore, I propose that we replace her old and ancient education system, her culture, for if the Indians think that all that is foreign and English is good and greater than their own, they will lose their self-esteem, their native self-culture and they will become what we want them, a truly dominated nation. "

அதாவது இந்தியாவில் ஏழைகளே இல்லையாம். பாலாறும் தேனாறும் ஓடியதாம். வருணாஸ்ரம வழி கல்வி முறையால் தான் இந்தியா இவ்வாறு வளமாக இருந்ததாம். என்வே அந்தக் கல்வி முறையை அழித்து ஆங்கிலக் கல்வி முறையை நடைமுறைப்படுத்தினால் மட்டுமே இந்தியாவை அடிமைப்படுத்த முடியுமாம். இந்தச் செய்தியை படிக்கும் யாவருக்கும் அது உண்மையான செய்தியா என்பது புரிந்து இருக்கும். 1835ம் ஆண்டு மெக்காலே இங்கிலாந்து பார்லிமெண்ட்டில் மேற்கூறியவற்றை கூறியதாக சொல்கிறார்கள். ஆனால் மெக்காலே பற்றிய எந்த வரலாற்று குறிப்புகளிலும் இது பற்றி இல்லை. அது மட்டுமன்றி 1835ம் ஆண்டு மெக்காலே இந்தியாவில் தான் இருந்தார். எனவே பிரிட்டன் பார்லிமெண்ட்டில் அவர் இவ்வாறு பேசியிருப்பது சாத்தியமில்லை.

மெக்காலே ஆங்கிலக் கல்வி முறையை அறிமுகப்படுத்தாமல் பாரம்பரிய கல்வியை சிபாரிசு செய்திருந்தால் ஆங்கிலேயர்களுக்கு அன்றைய இந்திய ஆளும் அதிகார வர்க்கத்தினரின் நன்மதிப்பைப் பெற்றிருக்க முடியும். அது மட்டுமன்றி, சமஸ்கிருத மற்றும் அரேபிய வழி இரு மொழிக் கல்வியை தனித்தனியே கொடுப்பதின் மூலம் இந்து முஸ்லீம் பிரிவினையை நன்கு வளர்த்து ஆங்கில ஏகாதிபத்தியத்திற்கான எதிர்ப்பையும் திசை திருப்பி இருக்கலாம். மேலும் சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் போன்ற மேற்கத்தைய சிந்தனைகளை இந்தியாவில் வளர விடாமல் வருணாஸ்ரமம் சார்ந்த குறுகிய மனப்பான்மையிலேயே இந்தியர்களை வளர விட்டிருக்கலாம். அன்று அவர் கொடுத்த ஆங்கிலக் கல்வி முறை தான் பிற்காலத்தில் பல்லாயிரம் இந்தியத் தலைவர்கள் சிந்தனாவாதியாக உருவாகி, இந்திய சுதந்திர இயக்கத்தை வளர்க்க உதவியது என்பதும் மறுக்க இயலாது.

மெக்காலே கல்வித் திட்டத்தின் பயனாகக் கிடைத்த ஆங்கில அறிவின் மூலம் இன்று ஏராளமான இந்தியர்கள் உலகின் பல நாடுகளிளும் வேலை வாய்ப்பைப் பெற உதவி செய்து வருகிறது. இந்தியாவில் ஆங்கில அடிப்படையிலான கல்வியை அறிமுகப்படுத்தி சமஸ்கிருத/இந்தி வழிக் கல்வியை தடுத்ததன் விளைவாக பிராந்திய மொழி தொடக்கக் கல்வியை எளிதாக அறிமுகப்படுத்தவும் காரணியாக இருந்தது என்பதும் மறுக்க முடியாத உண்மை. மெக்காலே சமஸ்கிருத வழிக் கல்வியை அறிமுகப்படுத்தி இருந்தால், இந்திய தேசியவாதத்தைக் காரணம் காட்டி, மற்ற பிராந்திய மொழி கல்வி வளர்ச்சிக்கு முழுமையாக சமாதி கட்டி இருப்பார்கள். ஆங்கிலம் என்பது வெளிநாட்டினரின் மொழியாக இருந்ததால், பிராந்திய மொழி வழி தொடக்கக் கல்வியை ஆங்கிலத்துக்கு இணையாக அறிமுகப்படுத்திய போது எதிர்ப்பு இல்லாமல் இருந்தது.

தற்போது பாக்கிஸ்தானிய மதராசாக்களிலும், ஆப்கானிஸ்தானிலும் கற்று கொடுக்கப்படும் கல்வி அன்றைய இந்தியாவில் பின்பற்றப்பட்டு வந்த கல்வி முறையாகத் தான் உள்ளது. இன்றைய இந்து தேசியவாதிகளும் முன்னனி ஊடகங்களும் பாராட்டிப் பேசும் இந்திய பாரம்பரியக் கல்விமுறையை மெக்காலே அறிமுகப்படுத்திய மேற்கத்தைய கல்விமுறைக்கு பதில் நடைமுறைப்படுத்தி இருந்தால், இந்தியாவும் அறிவு சார் சமுதாயமாக வளராமல், ஆப்கானில் இருப்பதுபோல் மத அடிப்படைவாத சமுதாயமாக வளர்ந்து இருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

மெக்காலே கல்வித் திட்டம் பற்றி முழுமையாகத் தெரிந்து கொள்ள இங்கு சென்று தெரிந்து கொள்ளுங்கள்.

http://www.english.ucsb.edu/faculty/rraley/research/english/macaulay.html


--