Thursday, November 26, 2020

நன்னூல் கூறும் மாணவர்கள்

 இந்த பதிவை படிப்பவர்களில் சிலர் கல்லூரி/பள்ளி ஆசிரியராக இருக்களாம். நிச்சயம் அனைவரும் தொடர்ந்து நூல்களை படிக்கும் மாணவர்களே! எனவே அனைவரும் படிக்க வேண்டியது.


சுமார் 800 ஆண்டுகளுக்கு முன் தோன்றிய தமிழ் இலக்கண நூலான  நன்னூல்.இதை இயற்றியவர் பவணந்தியார். அவர் படிக்கும் மாணவர்களை மூன்று பிரிவாக வகைபடுத்தி உள்ளார்.

1. முதல் மாணாக்கர்கள் - அன்னம், பசு

2.இடை நிலை மாணாக்கர் - கிளி, நிலம்

3.கடை மாணாக்கர் - ஆடு, எருமை,பன்னாடை,உடைந்த குடம்

இது என்ன பாகுபாடு என்று புரியவில்லையா?  தொடர்ந்து படியுங்கள். முதல் இரண்டும் முதல் தர மாணவர்களின் இலக்கணம்.

அன்னம் - பாலும்,  தண்ணீரும் கலந்து இருக்கும் போது , பாலை மட்டும் குடிப்பது அன்னப்பறவை. அது போல் "மெய்பொருள் காண்பது அறிவு" என்ற வள்ளுவன்  சொல்லுக்கேற்ப தேவை இல்லாததை விட்டு விட்டு தேவையானவற்றை மட்டும் எடுத்துக் கொள்ளும்.

பசு - புல் கிடைக்கும் போது , அனைத்தையும் வேகமாக மேய்ந்து விட்டு பிறகு மெதுவாக அசை போட்டு (regurgitate) உண்ணும். அதாவது ஆசிரியரையோ, புத்தகத்தையோ கண்டால் அவரிடமிருந்து அனைத்து அறிவையும் வேகமாக பெற்றுக் கொண்டு பிறகு மெதுவாக ஆராய்ந்து , சிந்தித்து தெளிவு பெறுவர்.

அடுத்து இரண்டாம் நிலை  மாணவர்களின் இலக்கணம்

கிளி - கிளி சொன்னதையே சொல்லும்.  அது போல் இவ்வகை மாணவன் ஆசிரியர் சொன்னதை அப்படியே கேட்டு மனப்பாடம் செய்து ஒப்பிப்பார்கள்.

நிலம் - ஒரு விவசாயி எந்த அளவு பாடு படுகிறானோ அந்த அளவு விளைச்சல் கொடுக்கும். அது போல் ஆசிரியர் எந்த அளவு  கடின முயற்சி செய்து சொல்லி கொடுக்கிறாரோ அந்த அளவு  அந்த மாணவர் அறிவு பெறுவர். சுய முயற்சி இருக்காது.

அடுத்து கடை நிலை மாணாக்கர்.

ஆடு - ஆடு ஒரு செடியை முழுமையாக தின்னாது. கிடைக்கும் செடியில் எல்லாம் மேலாக வாயை வைத்து முழுமையாக உண்ணாது. அது போல் மாணவனும் focusஇல்லாமல் மேலோட்டமாக படிப்பான். ஆழ்ந்த அறிவு வளராது.

எருமை - குளத்தில் நீர் தெளிவாக இருந்தாலும், அதை கலக்கி சேரோடு சேர்த்து குடிக்கும்.

உடைந்த குடம் - எவ்வளவு நீரை உடைந்த குடத்தில் இட்டாலும், அவை வெளியே சென்றுவிடும்.  அது போல் தான் இந்த வகை மாணவர்களுக்கு என்ன சொல்லி கொடுத்தாலும் அவற்றை வெளியேற்றி விடுவர்.

பன்னாடை - வடி கட்ட உதவுவது. வடி கட்டும் போது மாசுகளை எல்லாம் வைத்து கொண்டு நல்லவற்றை விட்டு விடும். அது போல, இந்த வகை மாணவர்கள் நல்லவற்றை விட்டு விட்டு, தேவையற்றவற்றை மனதில் நிறுத்துவர்.

இதன் மூலம் பவணந்தியார் கூற வருவது, இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை மாணவர்கள்  வெற்றி பெற முதல் நிலை மாணாக்கராக முன்னேற வேண்டும்.

இதோ பாடல்

அன்ன மாவே மண்ணொடு கிளியே

இல்லிக் குடமா டெருமை நெய்யரி

அன்னர் தலையிடை கடைமா ணாக்கர்.

800 ஆண்டுகளுக்கு முன் இந்த அளவு திறனாய்வு அறிவு இருந்த பழந்தமிழரை எண்ணி வியக்காமல் இருக்க முடியவில்லை

Monday, October 19, 2020

ஐன்ஸ்டினின் சார்பியல் தத்துவமும் , ஆசீவக மதமும்

தமிழகத்தில்  சங்க காலம் தொட்டு வழங்கி வந்த தத்துவம் மற்றும் மதங்களில் ஒன்று ஆசீவகம். ஆசீவக மதம் சாங்கியம், சமணம், சார்வாகம் மற்றும் பௌத்தம் போன்று இறை மறுப்பு கொள்கையை உடையவை. ஆனால் சமணம் மற்றும் பௌத்தம் போன்று இல்லாமல் வினை மறுப்பு கொள்கை கொண்டது. அதே நேரத்தில் சார்வாகம் போல முழுமையாக இல்வாழ்க்கையை  மட்டும் நோக்கும் உலகாயுத மதமும் அன்று. இந்த மதம் ஊழ் மற்றும் தியானங்கள் அடிப்படையிலான மதம் ஆகும். இதன் கொள்கைகள் ஓரளவுக்குச் சமணத்தின் கொள்கைகளோடு ஒத்து உள்ளது.

உலகம் தோன்றியது எப்படி?, உலகை கடவுள் படைத்தாரா? முதற்பொருள் எது என்பது குறித்த ஆராய்ச்சிகள்  தத்துவ ரீதியாகவும் , அறிவியல் ரீதியாகவும் தனித் தனியே பன்னெடுங்காலமாக உலகெங்கிலும் நடைபெற்று வந்தன.  அறிவியல் ரீதியாக ஆராய்பவர்கள் முதலில் அவர்கள் காலத்தில் உறுதி செய்ய பட்ட அறிவியற் உண்மைகள் அல்லது அடிப்படை கோட்பாடுகளின் அடிப்படையில் புதிய கோட்பாடுகளை முன் வைத்து , பிறகு அவை அறிவியற் வளர்ச்சியால் பிற்காலங்களில் வெளி வரும் உண்மைகள் மற்றும் தற்கால அறிவியல் மேற்பட்டால் கிடைக்கப்பட்ட கருவிகள் மூலம் உறுதிப் படுத்த பட்டு வருகின்றன.

தத்துவ ரீதியாக விடை காண முயன்ற தமிழ் மரபினர், "மெய்ப்பொருள் காண்பது அறிவு" என்ற அடிப்படையில்  உள் நோக்கிய சிந்தனையில் ஆழ்ந்து அது பற்றிய தனது அறிவுத்தேடல்களைத் தொடர்ந்தனர். அவர்களின் கருத்தும், அவர்கள் வாழ்ந்த பிறகு பல்லாண்டு காலம் பிறகு தோன்றிய அறிவியல் அறிஞர்களின் கண்டுபிடிப்போடு சில இடங்களில் ஒத்துப் போவது ஆச்சரியமே. அதன் அடிப்படையில் பரத்தால் ஆசீவக மதத்திலிருந்த கோட்பாடுகளுக்கும் , தற்போதைய அறிவியற்  கோட்பாடுகளுக்கும் நிறைய ஒற்றுமை உள்ளது. அது குறித்து இந்த கட்டுரையில் பார்ப்போம்..

ஆசீவக மதத்தின் தத்துவ நூல்கள் அனைத்தும் அழிந்துவிட்டாலும் அது பற்றிய கருத்துகளை மணிமேகலை, நீலகேசி, சிவஞான சித்தியார் (பரபக்கம்) போன்ற பிற மதங்களைச் சார்ந்த நூல்களில் இருந்து தான் பெருமளவு அறியப்படுகிறது.

தொகுதி அண்ட கோட்பாடும் (Block Universe) , நியதிக் கொள்கையும்

ஐன்ஸ்டீனின் சார்பியல் தத்துவம் வெளிப்படுத்தும் ஒரு அறிவியற் கோட்பாடு தொகுதி அண்டக் கோட்பாடு (Block universe). நாம் நினைத்து கொண்டிருப்பது போல் நீளம், அகலம் மற்றும் உயரம் என்ற முப்பரிமாணங்கள் தனியாகவும் , காலம் என்ற பரிமாணம் தனியாகவும் இருப்பது உண்மை அல்ல என்று உறுதிப் படுத்தி உள்ளது  ஐன்ஸ்டீனின் சார்பியல் தத்துவம். முப்பரிமாணங்களை உள்ளடக்கிய வெளி மற்றும் காலம் இணைந்த நான்கு பரிமாணங்களைக் கொண்டது இந்த பேரண்டம் என்று விளக்குகிறது.

 பிளாக் யுனிவர்ஸ் கோட்பாடு படி உலகில் நிகழ்காலம், இறந்த காலம் மற்றும் எதிர்காலம் என்று இல்லை. அனைத்து நிகழ்வுகளுமே முன்னதாகவே  தீர்மானிக்கப்பட்டு நடந்தவை. ஒவ்வொரு நிகழ்வும் கார்ட்டூன் படத்திற்காக வரையப்பட்ட வரிசையான எண்ணிலடங்கா நிகழ்வுகளின் தொகுப்பு போன்றதே.  இந்தக் கொள்கையின் படி  ஒருவருடைய முடிவெடுக்கும் திறன், வாய்ப்புகள், தனிப்பட்ட செய்கையினால் நிகழ்வுகள் மாற்றம் பெறுவது இல்லை. அவை அனைத்தும் முன்னரே தீர்மானிக்கப் பட்டவை. ஒருவருடைய செயல்பாடுகள் மூலம் நடக்க இருக்கும் நிகழ்வை மாற்ற முடியாது. 



நன்றி BBC (. https://www.bbc.com/reel/video/p086tg3k/the-physics-that-suggests-we-have-no-free-will

இனி ஆசீவக தத்துவத்திற்கு வருவோம். செயல்கள் நிகழும் முன்னரே அவ்விதம் நிகழ்வதனை சக்தியையே இந்த வரையறுக்கும் ஆற்றல் ஒன்றுண்டு. அவ்வாற்றலே ஊழ் என்று அழைத்தனர். ஆசீவகக் கொள்கையில் மிக முக்கியமானது நியதிக் கொள்கை ஆகும் சங்க காலத்தில் இவற்றை ஊழ் என்றும் தெய்வம் என்றும் அழைத்தனர்.. ஆசீவகர்களின் நியதி கொள்கையை நான்கு கோட்பாடுகளாக  வரையறுப்பர். அவை

1. ஆவது ஆகும் - எப்பொருள் எங்கனம் ஆக்கம் பெறுமோ, அப்பொருள் அவ்வாறு ஆக்கம் பெறும்.

2. ஆம் ஆங்கு ஆம் - ஆகும் முறைப்படி ஆகும்

3. ஆந்துணையாம் - ஆகும் அளவு ஆகும்.

4. ஆம் பொழுது ஆம் -  எவ்வளவு முயன்றாலும் ஆகும் காலத்தில் தான் ஆகும்.

இதை நீலகேசியின் பாடலில் கீழ் வருமாறு கூறப்பட்டுள்ளது

அதுவா வதுவு மதுவாம் வகையு

மதுவாந் துணையு மதுவாம் பொழுதுஞ்

சதுவா நியதத் தனவா வுரைத்தல்

செதுவா குதலூஞ் சிலசொல் லுவன்யான்

                                                                                  -(704)

எனவே ஆசீவகக் கொள்கைபடி எல்லா நிகழ்வுகளும் நியதிக்கு உட்பட்டவை. ஆதலின் எதிர்காலத்தில் நடைபெற உள்ள நிகழ்வுகளும் முன்கூட்டியே தீர்மானிக்கப் பட்டவை. இதன் அடிப்படையில் Bock Universe கோட்பாடு  விளக்கும் கீழ்காணும் கருத்துகளை படித்து பாருங்கள். ஆசீவக கோட்பாட்டிற்கும், சார்பியல் தத்துவம் சார்ந்த Block Universe கோட்பாட்டுக்கும் இடையே உள்ள தொடர்பு விளங்கும்

The future is predetermined and therefore there can not be any thing as free will.

நாம் அடிக்கடி கூறும் கணியன் பூங்குன்றனாரின் "யாதும் ஊரே! யாவரும் கேளிர்!!" என்ற பாடல் ஆசீவக தத்துவத்தை விளக்கும் பாடலே. அந்தப் பாடலின் பிற்பகுதியை காணுங்கள்

வானம் தண்துளி தலைஇ, ஆனாது

கல்பொருது இரங்கும் மல்லற் பேர்யாற்று

நீர்வழிப் படூஉம் புணைபோல், ஆருயிர்

முறைவழிப் படூஉம் என்பது திறவோர்

காட்சியின் தெளிந்தனம் ஆகலின் மாட்சியின்

பெரியோரை வியத்தலும் இலமே;

சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே. 


அதன் பொருள்

"மின்னலுடன் வானத்திலிருந்து விழும் குளிர்ந்த நீர்த்துளிகள் மழையாகப் பெய்து, அளவிலடங்காது மலையில் உள்ள கற்களை அலைத்தொலிக்கும் மிகப்பெரிய ஆற்று நீராகச் செல்லும் வழியில் மிதந்து போகும் தெப்பம் போல், நமது (அரிய உயிர்) வாழ்க்கை, முறைப்படி அமையும் என்பதை அறிஞர்களின் அறிவுரைகளின் வழியே அறிந்தோம். ஆதலால், பெருமைக்குரிய பெரியோரைக் கண்டு ஆச்சரியப்படுவதும் இல்லை; சிறியோரை இகழ்தலும் இல்லை."

ஆற்று நீரில் அடித்து செல்லும் தெப்பம் போன்றது நமது வாழ்க்கை. தெப்பத்தின் பாதை ஆற்று நீர் கையில் உள்ளது போல், நமது வாழ்க்கை பாதை முன்பே தீர்மானிக்கப்பட்ட நியதி அடிப்படையில் ஆனது. எனவே அருஞ்செயல் செய்தார் என்று பெரியோர் என்று வியத்தலும் தேவை இல்லை. திறமை இல்லாதவர் , சிறியோர் என்று இகழ்தலும் தேவை இல்லை என்று கூறுகின்றது.

திருக்குறளில் ஊழ் என்ற அதிகாரத்தில் இருக்கும் குறள்கள் ஆசீவகம் கூறும் நியதிக் கொள்கையை விளக்குவதாகவே உள்ளன.

 காலம் என்று உண்டா?

ஐன்ஸ்டீனின் சார்பியல் தத்துவத்தை மேலும்  ஆழ்ந்து ஆராய்ந்து பார்த்தால் விஞ்ஞானிகள் நிறுவுவது இறந்த காலம் , நிகழ் காலம் மற்றும் எதிர் காலம் என்று வேறுபட்ட காலங்கள் இல்லை. காலம் என்பது முப்பரிமாண உலகில் கடந்து போகாது. எனவே காலம் என்பது இயற்பியல் அடிப்படையில் உண்மை அல்ல. அது ஒரு மாயை என்று பல்வேறு அறிவியல் அறிஞர்கள் கூறுகின்றனர்.

(Huw Price, professor of philosophy at Cambridge University, claims that the three basic properties of time come not from the physical world but from our mental states: A present moment that is special; some kind of flow or passage; and an absolute direction. …)


 நியதி கொள்கையின் அடிப்படையில் ஆராய்ந்த ஆசீவக ஞானிகள் அதே முடிவிற்கு வருகிறார்கள்.  காலம் என்று ஒன்று இல்லை என்பதை அவர்கள் தெளிவாகக் கூறுகிறார்கள். கீழ் காணும் நீலகேசி பாடல் அதை விளக்குகிறது.

கணமே யெனினும் மொருகா லமிலை

--------------------------------நீலகேசி 677


அதன் பொருள் கணம் என்ற கோட்பாடு இருந்தாலும் ஒரு காலம் என்ற கோட்பாடு இல்லை என்பதாகும். அனைத்து நிகழ்வுகளும் முன் கூட்டியே தீர்மானிக்கப் பட்டவை என்பதால் எதிர்கால நிகழ்வு,  கடந்த கால நிகழ்வு, நிகழ் காலம் என்பது கற்பனையே என்று கூறுகின்றனர். இங்கும் ஐன்ஸ்டீனின் சார்பியல் தத்துவத்தோடு ஆசீவகம் ஒத்துப் போகிறது. ஐன்ஸ்டீன் 1955ம் ஆண்டு இறப்பதற்கு சில வாரங்களுக்கு முன் கூட நிகழ்காலம், கடந்த காலம் மற்றும் எதிர் காலம் என்பது மாயையே என்று கூறியுள்ளார்.


பெருவெடிப்பு உலகத் தோற்றமும் மெய்மையின் மாறாத்தன்மை கோட்பாடும்

தற்கால அறிவியல் அடிப்படையில் ஆராய்ச்சி செய்து வரும் விஞ்ஞானிகள் இந்த பேரண்டம் தோன்றக் காரணமான பெரு வெடிப்பு இயற்கையாக நிகழ்ந்தது. ஆசீவக அடிப்படை தத்துவத்திலும் பொருளின் ஆக்கத்திற்கு காரணம் என்பது வேண்டாம் என்று ஆசீவக பிரிவினர் கருதினர். நீலகேசியில் ஆசீவக குருவான பூராணன் என்பவனை அறிமுகப் படுத்தும் போது  கீழ்வருமாறு கூறுகின்றனர்.


காரணம் வேண்டாக் கடவுட் குழாந்தன்னிற்

பேருணர் வெய்திப் பெரிதும் பெரியவன்

                                                                                         (668)

அதற்கு ஒப்பீடு இல்லாத கல்வி நிலையை உடையவனும், செயலுக்கு காரணம் உண்டு என்பதை விரும்பாத கூட்டத்திலிருந்து வந்தவன் என்பது  பொருள். "காரணம் வேண்டாக் கடவுட் குழாம்" என்று ஆசீவகர்கள் கூறுவது அவர்கள் காரணத்தால் காரியம் நிகழ்கிறது என்று ஏனைய பௌத்தர்கள், சமணர்கள் மற்றும் இந்து மதத்தினர் கூறும் கருத்தை ஏற்றுக் கொள்ளாமையினாலும்.

 

ஆசீவகர்களின் தத்துவத்தில் முக்கியமானவற்றில் ஒன்று அவிசலித நித்தியத்துவம் அல்லது மெய்மையின் மாறாத்தன்மை கோட்பாடு அதன் படி  ஆசீவகத்தில் அணுக்களையும் அவை தொடர்பான மூலப்பொருட்களையும் பற்றிக்  குறிப்பிடும் போது அவை நிரந்தரமானவை என்று கூறுகின்றனர்.( அவர்கள் தான் முதலில் அக்கொள்கை பற்றியும் கூறி உள்ளனர். அதை அடுத்துப் பார்ப்போம்).

 இதனை நீலகேசியில் கீழ் வருமாறு கூறுகின்றனர்.


"எப்பாலும் தான்கெடா இவ்வளவும் தோன்றா" (696)

"இல்லாது தோன்றா கெடாஉள் என"(698)0


அடிப்படை அணுக்கள் மாற்றம் அடைதலன்றி என்றும் நிலை பெற்றிருக்கும் என்பது பொருள் இதனை "உள்ளது கெடாது இல்லது தோன்றாது" என்றுரைக்கின்றனர்.

 ஆசீவகத்தைப் பற்றி  மணிமேகலையில் சமயக் கணக்கர்- தம் திறம் கேட்ட காதையில் பின்வருமாறு குறிப்பிடுகின்றனர்


ஆதி யில்லாப் பரமா ணுக்கள்

தீதுற் றியாவதுஞ் சிதைவது செய்யா  (126)


என்று கூறுகின்றனர்.  அதன் பொருள் தொடக்கமில்லாத , அடிப்படையான அணுக்கள், சிறிதுங் கெட்டு அழியாதவை என்பது ஆகும்.

தற்போதைய வான் இயற்பியல் விஞ்ஞானிகளின் கருத்துப்படி இன்று உலகத்தில் இருக்கும் பொருட்கள் யாவும் (மனிதன், விலங்கு, தாவரம், அண்டம் என அதிலும் இருக்கும் அடிப்படை பொருட்கள்) பெருவெடிப்பின் முதலில் காலம் தோன்றிய போது தோன்றிய பொருட்கள் தான் . இடையில்  புதிய அடிப்படை பொருட்கள் தோன்றவோ அழியவோ இல்லை என்கிறார்கள் அவை அழிவின்றி மாற்றமடைகிறது என்கிறார்கள்.

(According to most astrophysicists, all the matter found in the universe today -- including the matter in people, plants, animals, the earth, stars, and galaxies -- was created at the very first moment of time, thought to be about 13 billion years ago.

அவிசவித நித்தியத்துவம் தத்துவத்தையும் , தற்போதைய வானியல் அறிவியலையும் ஒப்பீடு செய்து பாருங்கள்.


மூலப்பொருட்கள்

உலகம் தோன்றுவதற்குத்  தேவையான மூலப்பொருட்கள் குறித்த குறிப்புகள் தொல்காப்பியத்திலேயே உள்ளன. பெரும்பான்மையான இந்தியத் தத்துவங்கள் மற்றும் தொல்காப்பியம் ,  நீர், காற்று, நெருப்பு ஆகாயம், நிலம் ஆகிய ஐந்து பொருட்களையும் மூலப்பொருட்களாகக் குறிப்பிடுகிறது. ஆனால் ஆசீவகத்தினர் மூலப்பருபொருட்களில்  நிலம், நீர், காற்று மற்றும் தீயை மட்டுமே குறிப்பிடுகின்றனர்.


“நிலநீர் தீக்காற் றென நால் வகையின”

                                                 -- (மணிமேகலை - 116)


கடந்த நூற்றாண்டின் ஆரம்பம் வரையில் வானத்தில் ஈதர் என்ற ஊடகம் இருப்பதாக அனைத்து விஞ்ஞானிகளாலும்  கருதப்பட்டது. நியூட்டன் கூட தனது ஆய்வு நூலில் இது பற்றி எழுதி உள்ளார். ஆனால் மைக்கல்சன் - மோர்லி ஆய்வு ஈதர் என்ற பருப்பொருள் இருப்பதை நிராகித்து  உள்ளது.

 

வானத்தை மூலப்பொருட்கள் வரிசையில் சேர்க்காமல் இருக்கும் ஆசீவகத்தை இந்த அறிவியற் பின்னணியில் நோக்க வேண்டும்.


அணுக்கொள்கை


இந்தியாவில் தோன்றிய தத்துவங்களில் முதன்முதலில் அணுக்கொள்கையினை அறிந்துரைத்த சிறப்பு ஆசீவகத்திற்கு உரியது. இது பற்றி  ஆசீவகம் கூறுவதைக் கீழே காணலாம்.

ஆதி யில்லாப் பரமா ணுக்கள் 

தீதுற் றியாவதுஞ் சிதைவது செய்யா

புதிதாய்ப் பிறந்தொன் றென்றிற் புகுதா

குலாமலை பிறவாக் கூடும் பலவும்

பின்னையும் பிரிந்துதந் தன்மைய வாகும்

மன்னிய வயிரமாய்ச் செறிந்துவற் பமுமாம்

வேயாய்த் துளைபடும் பொருளா முளைக்கும்

                                                (மணிமேகலை 126)


அதன் பொருள் பின்வருமாறு . தொடக்கமில்லாத அடிப்படை அணுக்கள் , சிறிதும் கெட்டு அழியாதவை. இவை புதிதாகத் தோன்றி ஒன்றனுள் ஒன்று உள் நுழைவதில்லை. ஓரணு இரண்டாகப் பிளவுறாது. இவை ஓரிடத்திலிருந்து  மற்றோர் இடத்திற்குப் பெயர்ந்து செல்லவல்ல. ஒன்றின் தொகுதியாகவோ, மலை போன்ற பிற அணுக்களுடன் சேர்ந்த தொகுதியாகவோ  சேர்க்கையுறும். சேர்ந்த அவைகளே பின்பு பிரிந்து தத்தம் தன்மையை அடையும். இவை சேர்ந்து வயிரமாகிச் செறிந்து  வலிமை பெறும். மூங்கில் போல உள்ளே துளையுள்ள பொருளாக முளைக்கும். (அணுக்களைப் பிளக்க முடியாது என்ற கொள்கை சென்ற நூற்றாண்டில்  தவறென நிரூபிக்கப் பட்டுள்ளது). டால்டனின் அணுக்கொள்கை மேற்கூறிய அணுக்கொள்கையோடு  பல இடங்களில் பொருந்தி போவதை காணலாம்.

Dalton's atomic theory - டால்டன் அணுக்கொள்கை: 1803இல் இக்கொள்கையினை ஜான் டால்டன் வெளியிட்டார். இதன் அடிப்படைக் கருத்துகளாவன:
1. அனைத்துப் பொருள்களும் அணுக்கள் எனப்படும் மிகச்சிறிய துகள்களாலானவை.
2. அணுக்களை ஆக்கவோ அழிக்கவோ முடியாது. அவற்றைப் பகுக்கவும் இயலாது. (இன்று பகுக்கப்பட்டுள் ளது)
3. ஒரு தனிமத்தின் அணுக்கள் யாவும் ஒரே மாதிரி வடிவம், அமைப்பு, பருமன் ஆகியவற்றைக் கொண்டவை.
4. வேதிவினைகள் நிகழும் பொழுது சிறிய முழு எண்ணிக்கை உள்ள அணுக்களே அவ்வினையில் ஈடுபடுகின்றன. அக்கால நிலையில் பல வேதியியல் உண்மைகளை இக்கொள்கை விளக்கியது சிறப்புக்குரியத ு. (இய)

 

இன்று அறிவியல் அறிஞர்கள் நவீன அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் கொண்டு கண்டு பிடிக்கப்பட்டு நிரூபிக்கபட்ட அறிவியல் கோட்பாடுகளை , 2500 ஆண்டுகளுக்கு முன் "மெய்ப் பொருள் காண்பது அறிவு" என்ற வள்ளுவரின் அறிவுசார் கொள்கையின் அடிப்படையில் , தங்களது உள் நோக்கிய பார்வையில் கண்டு பிடித்தவற்றோடு ஒப்பிடுகையில்  இடைக்காலத்தில் அறிவு சார் சிந்தனைகளுக்கு ஏற்பட்ட பின்னடைவு இல்லாதிருந்தால் தமிழகத்திலே பல நூற்றாண்டுகளுக்கு முன்பே  இன்றைய "நவீன தொழிற்புரட்சி" நடைபெற்றிருக்குமோ என்று எண்ணத் தோன்றுகிறது.


இக்கட்டுரை  நோக்கம்  இன்றைய அறிவியல் கண்டுபிடிப்புகளை 2500 ஆண்டுகளுக்கு முன்பே ஆசீவகத்தில் கண்டுபிடிக்க பட்டது என்று  உறுதி செய்வது அல்ல. 2500 ஆண்டுகளுக்கு முன்பான மெய்யியல் சிந்தனைகளுக்கும் , இன்றைய அறிவியற் கண்டுபிடிப்புகளுக்கும் இடையே உள்ள ஒற்றுமையை கோடிட்டு காட்ட மட்டுமே..

ஆசீவகம் மற்றும் அறிவற் கருத்துக்கள் கொண்ட ஒரு சில தரவுகளை இணைத்துள்ளேன். இந்த தலைப்பு பற்றி உங்களுக்கு உள்ள ஐயங்களை தீர்த்து கொள்ள தொடர்ந்து உங்களது தேடலை தொடர உதவியாக இருக்கும்.


இந்த கட்டுரையை படித்து ஆசீவகம் சார்ந்த கருத்துக்களில் பிழை(கருத்துப்பிழை மற்றும் சொற்பிழை) இல்லாமல் திருத்தம் செய்து கொடுத்த    முனைவர் ர.விஜயலட்சுமி அவர்களுக்கும் , அறிவியற் கருத்துக்களுக்கு விமர்சன கருத்து ( Critical Comments) கொடுத்த பேராசிரியர்.ரங்கராஜன் அவர்களுக்கும் நன்றி.



 

Reference

1. பேராசிரியர் ர.விஜயலட்சுமி - தமிழகத்தில் ஆசீவகர்கள் , உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம்

2.  முனைவர் சோ.ந.கந்தசாமி - இந்தியத் தத்துவக் களஞ்சியம் , மெய்யப்பன் பதிப்பகம்

3. https://www.bbc.com/reel/video/p086tg3k/the-physics-that-suggests-we-have-no-free-will

4. https://www.exploratorium.edu/origins/cern/ideas/bang.html

5.https://en.wikipedia.org/wiki/Michelson%E2%80%93Morley_experiment#Most_famous_%22failed%22_experiment

6. https://www.space.com/29859-the-illusion-of-time.html

7. https://www.quantamagazine.org/does-time-really-flow-new-clues-come-from-a-century-old-approach-to-math-20200407/

8. https://en.wikipedia.org/wiki/Conservation_of_mass


Monday, September 07, 2020

தமிழ் மொழியும், தத்துவமும், அறிவியலும்,கணிதமும்

 உலகம் தோன்றியது எப்படி, உலகை கடவுள் படைத்தாரா? முதற்பொருள் எது என்பது குறித்த அராய்ச்சிகள்  தத்துவ ரீதியாகவும் , அறிவியற் ரீதியாகவும் தனித் தனியே பன்னெடுகாலமாக உலகெங்கிலும் நடைபெற்று வந்தன.  அறிவியற் ரீதியாக அராய்பவர்கள் முதலில் கோட்பாடுகளை முன் வைத்து , பிறகு கணித, இயற்பியல் தத்துவங்கள் மூலம் நிரூபனம் செய்து, தற்கால அறிவியற் மேற்பாட்டால் கிடைக்கப்பட்ட கருவிகள் மூலம் உறுதி படுத்தி வருகின்றனர். 


தத்துவ ரீதியாக விடை காண முயன்ற தமிழ் மரபினர், "மெய்ப்பொருள் காண்பது அறிவு" என்ற அடிப்படையில்  உள் நோக்கிய சிந்தனையில் ஆழ்ந்து அது பற்றிய தனது அறிவுத்தேடல்களை தொடர்ந்தனர். அவர்களின் கருத்தும், அவர்கள் வாழ்ந்த பிறகு பல்லாண்டு காலம் பிறகு தோன்றிய அறிவியல் அறிஞர்களின் கண்டுபிடிப்போடு சில இடங்களில் ஒத்து போவது ஆச்சர்யமே. அந்த சொல்லாடல்களின் வேர்ச்சொல்லும், பயன்பாடுகளும் எந்த மொழியில் அடிப்படையாக இருக்கிறது என்று பார்த்தால் அந்த தத்துவங்கள் தோன்றிய இடம் எங்கு இருக்க வாய்ப்பு உள்ளது என்று என்று கண்டுபிக்க முடியும்


உலக மதங்களெல்லாம் நன்மை - தீமை, தேவர் - அசுரர், சொர்க்கம் - நரகம் என்று கடவுளை பற்றி  சிந்தித்து கொண்டு இருந்த போது , ஒன்றுமற்ற எச்சார்பும் அற்ற வெறுமை குறித்து  சிந்தித்து வந்தது தமிழரின் சித்தர் பாரம்பர்யம். ஒன்றுமற்ற வெறுமையிலிருந்து உலகம் தோன்றியது என்று கூறிய அவர்கள்,  "வெட்ட வெளி", "பாழ்" என்ற சொல்லாடல்களில் இறைத்தன்மையை "ஒன்றுமற்ற வெறுமை " (Null in Compuer science) யாக பார்த்தனர்.


ஒன்றும் இல்லாவெளிக் குள்ளேபல் லண்டத்தை

நின்றிடச் செய்தானடி குதம்பாய்

நின்றிடச் செய்தானடி.

வெட்டவெளிக்குள் வெறும்பாழாய் நின்றதை

இட்டமாய்ப் பார்ப்பாயடி குதம்பாய்

இட்டமாய்ப் பார்ப்பாயடி.

------ குதம்பை சித்தர்


இது போல் பல்வேறு சித்தர் இலக்கிய பாடல்களில் வெட்ட வெளி, பாழ் பற்றிய குறிப்பு உள்ளது.

இதை குவாண்டம் இயற்பியலும் கீழ் காணுமாறு குறிப்பிடுகிறது

https://www.npr.org/sections/13.7/2013/03/26/175352714/the-origin-of-the-universe-from-nothing-everything


// The best answer we have at this point is that the Universe emerged spontaneously from a random quantum fluctuation in some sort of primordial quantum vacuum, the scientific equivalent of "nothing."//


தமிழும் கணிதமும்

மனித கண்டுபிடிப்புகளில் மொழிக்கு அடுத்ததாக முக்கியமான ஒன்று பூஜ்ஜியம் கண்டுபிடிப்பு என்பார்கள் அறிஞர்கள். முன் தத்துவ ரீதியாக "ஒன்றுமில்லாத "  ஒன்றை பாழ் என்று பெயரிட்டு அழைத்ததை முன் கண்டோம். அதே கண்டுபிடிப்பை "0"(Zero)  என்ற எண்ணுக்கு  முதன் முதலில் சங்க இலக்கியத்திலேயே கணித எண் வரிசையில் பயன்பாட்டுக்கு  வந்ததை கீழ் காணும் பாடல் விளக்குகிறது.


'பாழ் என, கால் என, பாகு என, ஒன்று என,

இரண்டு என, மூன்று என, நான்கு என, ஐந்து என,

ஆறு என, ஏழு என, எட்டு எனத், தொண்டு என

நால்வகை ஊழி எண் நவிற்றும் சிறப்பினை'

- பரிபாடல் 3 


இங்கு எண்களை பாழ் (0), கால், அரை, ஒன்று,இரண்டு...என்று வரிசை படுத்த படுவதை காணலாம்

முன்பு சொன்னது போல் பாழ் என்பது "ஒன்றும் இல்லாதது.". தத்துவ ரீதியாக ஒன்றும் இல்லாத நிலையில் இருக்கும் மனதினை நல்வினை , தீவினை "பற்றுவது" குறித்த தத்துவம் அனைவரும் அறிந்ததே.  பாத்திரத்தில் உணவு பற்றி இருப்பதை நீக்க "பத்து பாத்திரம்" தேய்ப்பது என்று கூறுகிறோம். அதன் அடிப்படையில்


-- ஒன்று பாழை பற்றும் போது பத்து பிறக்கிறது

- இரண்டை பாழ் பற்றும் பாது  இருபது பிறக்கிறது

- மூன்றை பாழ் பற்றும் போது முப்பது பிறக்கிறது.


தமிழ் எண்களுக்கு வேர்சொல்லுடன் விளக்கும் ஆதாரம் இருப்பதாலும், சங்கப்பாடல்களிலே சொல்லாடப்பட்டுள்ள ஆதாரம் இருப்பதாலும் , இன்றைய 0, தமிழ்நாட்டில் தோன்றியிருக்க வாய்ப்புள்ளது.  தமிழ் நாட்டில் பல்லவர் ஆட்சியில் உருவான பல்லவ கிரந்த எழுத்து மூலம் தான் கம்போடிய மொழிக்கு எழுத்துரு உருவானது  . உலகின் முதல்    சுழியம் (0) எழுத்து கண்டுபிடிக்க பட்டது கம்போடிய நாட்டில் உள்ள அங்கோர்வாட்டில் உள்ள K- 127 கல்வெட்டு என்பது குறிப்பிடத்தக்கது. (AD 683)

Pallava Grantha

https://en.wikipedia.org/wiki/Pallava_script


First Zero

https://www.sciencealert.com/search-for-the-world-s-first-zero-leads-to-the-home-of-angkor-wat



Thursday, June 04, 2020

தத்துவமும் , தமிழரும்

நான் யார்? உலகம் தோன்றியது எப்படி போன்ற கேள்விகள்  நாகரீகமடைந்த மனிதனின் சிந்தனையில் தோன்றி போது, அவனுடைய பகுத்தறிவால் சிந்தித்த போது உருவானது தான் தத்துவம். அந்த தத்துவத்தை வணிக நோக்கிலும், அதிகார  நோக்கிலும் உபயோகபடுத்த, அதன் மூலத்தை மறைத்து , தத்துவத்தின் சாராம்சத்தை அழித்து , அதனை சுற்றி மக்களிடம் வணிகப்படுத்த உருவாக்கப்பட்ட அமைப்பு தான் மதங்கள். எனவேதான் உண்மையான ஆன்மீகவாதிகளான சித்தர்கள் மதங்களை எதிர்த்தனர்.

"மெய்பொருள் காண்பது அறிவு" என்னும் தாரக மந்திரத்தை அடிப்படையாக கொண்ட தமிழர்கள் பழங்காலத்தில் பல்வேறு தத்துவங்களை திறந்த மனதோடு ஆராய்ந்து, வாதிட்டு வந்ததை பல்வேறு தமிழ் இலக்கியங்களில் காண்கிறோம்.
ஒரு உதாரணம் மணிமேகலையில் வரும்

"ஒட்டிய சமயத் துறுபொருள் வாதிகள் 
பட்டி மண்டபத்துப் பாங்கறிந்தேறுமின்'

முதலில் எந்த ஒரு விடயத்தையும் பற்றி சிந்திக்கும் போது சிந்தனைக்கான கருத்து எதன் அடிப்படையில் பெறப்படுகின்றது என்று பார்க்க வேண்டும். அறிதற்குறிய பொருளை அக்துள்ள படி அறியச்செய்ய உதவுவது அளவைகள். அளவைகள் கீழ் காணும் பத்து வகைப்படும் சுமார் 1800 ஆண்டுகளுக்கு முன் தோன்றிய சாத்தனார், சமயக் கணக்கர் தம் திறம் கேட்ட காதையில்  அளவை வாதிகளின் அளவை மற்றும் அனைத்து சமய தத்துவங்களையும் விரிவாக எடுத்துக்கூறி உள்ளார்.

1.காட்சி அளவை - ஐந்து வகைப்படும். மனிதனின் 5 பொறிகளின் மூலம் கிடைப்பது.
2. கருத்தளவை - அனுமானாத்தால் கிடைப்பது. (பொது, எச்சம், முதல் என்று மூன்று வகைப்படும்)
3. உவமை அளவை - ஒப்புகூற்று
4. ஆகம அளவை -ஆகமம் போன்ற பழை நூல்களை ஏற்று கொண்டு அவற்றில் இருப்பது
5. அருந்தாபத்தி அளவை - கிட்டதிட்ட ஆகுபெயர் போன்றது
6. இயல்பளவை -
7. ஐதீக அளவை - செவி வழி செய்திகளை நம்புவது
8.அபாவ அளவை - இல்லாமையை உணர்தல்
9.மீட்சி அளவை- எதிர்மறை கூற்று ஏற்றல்
10. உள்ள நெறி அளவை -

இந்த அளவைகள் மூலம் செய்திகளை பெறும் போது 8 வகை குற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. அவை
1.கட்டுணர்வு - பொருள், பெயர், இனம், குணம் , செயல் என்ற ஐந்தும் இன்றி அறியப்படல்.
2.திரியக்கோடல் - ஒன்றை பிரிதொன்றாக மயங்கி எண்ணுதல்
3.ஐயம் - உறுதி படுத்தாத மயக்க நிலை
4.தேராது தெளிதல்
5. கண்டுணராமை
6.இல்வழக்கு
7.உணர்ந்ததை உணர்தல்
8. நினைப்பு - முக்கியமானது . பெற்றோர், குரு போன்றோர் கூறியதை அராய்ச்சி இன்றி நம்புதல்.

தமிழர்களின் தத்துவ  அறிவின் எடுத்துக்காட்டாய் இருப்பது மணிமேகலை. நாம் அந்த இலக்கியத்தை படிக்காமல் இருப்பதால் தான் இன்னும் இந்தியாவில் இருந்த 10க்கும் மேற்பட்ட  வைதீக/அவைதீக/நாத்திக தத்துவம்/ சமயங்களின் கருத்துகளை அறிந்து,  அதனிடமிருந்து பயன் பெறாமல், மதங்கள் என்னும் மாயையில் வீழ்ந்து கிடக்கிறோம்

Tuesday, May 26, 2020

Block Universe Theoryயும் ஆசீவகத்தின் நியதிக் கொள்கையும்,சங்கத்தமிழும்

பி.பி.சி யின் கீழ் காணும் காணொளியை கண்ட போது , ஆசீவகத்தின் நியதிக் கோட்பாபாட்டிற்கும் , சார்பியல் தத்துவத்தின் அடிப்படையில் உள்ள பிளாக் யுனிவர்ஸ் கோட்பாட்டிற்கும் இடையே உள்ள தொடர்பை பற்றி நினைக்க தோன்றியது. பிளாக் யுனிவர்ஸ் கோட்பாடு படி உலகில் நிகழ்காலம், இறந்த காலம் மற்றும் எதிர்காலம் என்று இல்லை. அனைத்து நிகழ்வுகளுமே முன்னதாகவே தீர்மனிக்கப்பட்டு நடந்தவை. ஒவ்வொரு நிகழ்வும் கார்ட்டூன் படத்திற்காக வரையபட்ட வரிசையான எண்ணிலடங்கா நிகழ்வுகளின் தொகுப்பு போன்றதே.
The future is predetermined and therefore there can not be any thing as free will.
அதாவது ஒருவருடைய முடிவெடுக்கும் திறன், வாய்ப்புகள், தனிப்பட்ட செய்கையினால் நிகழ்வுகள் மாற்றம் பெறுவது இல்லை.

Video Link Below




இனி ஆசிவக கொள்கைக்கு வருவோம். ஆசீவகம் என்னும் தத்துவம்/மதம் தமிழகத்தில் முதல் 10 நூற்றாண்டுகளில் மக்களால் பின்பற்றபட்டது.ஆசீவகம் என்பது வேத நெறியிலிருந்து மாறுபட்டு கர்மக்கொள்கையை ஏற்காத மதம். இதன் அடிப்படை கொள்கை "நியதிக் கொள்கை " ஆகும்.. அதன் படி
"இவ்வுலகத்தின் எந்த ஒன்றும் மரணிப்பதில்லை. விதியும் ஒவ்வொரு நிகழ்வுகளும் ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட ஒன்று. அதில் எந்த மாற்றமும் நிகழப்போவதில்லை. எனவே இங்கு வாய்ப்புக்கள் என்று எதுவும் இல்லை. ஒன்று மற்றொன்றாக மாற்றம் அடையலாம்".

நாம் அடிக்கடி கூறும் கணியன் பூங்குன்றனாரின் "யாதும் ஊரே! யாவரும் கேளீர்!!" என்ற பாடல் ஆசீவக தத்துவத்தை விளக்கும் பாடலே. அந்த் பாடலின் பிற்பகுதியை காணுங்கள்
வானம் தண்துளி தலைஇ, ஆனாது
கல்பொருது இரங்கும் மல்லற் பேர்யாற்று
நீர்வழிப் படூஉம் புணைபோல், ஆருயிர்
முறைவழிப் படூஉம் என்பது திறவோர்
காட்சியின் தெளிந்தனம் ஆகலின் மாட்சியின்
பெரியோரை வியத்தலும் இலமே;
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே.

அதன் பொருள்
"மின்னலுடன் வானத்திலிருந்து விழும் குளிர்ந்த நீர்த்துளிகள் மழையாகப் பெய்து, அளவிலடங்காது மலையில் உள்ள கற்களை அலைத்தொலிக்கும் மிகப்பெரிய ஆற்று நீராகச் செல்லும் வழியில் மிதந்து போகும் தெப்பம் போல், நமது (அரிய உயிர்) வாழ்க்கை, முறைப்படி அமையும் என்பதை அறிஞர்களின் அறிவுரைகளின் வழியே அறிந்தோம். ஆதலால், பெருமைக்குரிய பெரியோரைக் கண்டு ஆச்சரியப்படுவதும் இல்லை; சிறியோரை இகழ்தலும் இல்லை."

ஆற்று நீரில் அடித்து செல்லும் தெப்பம் போன்றது நமது வாழ்க்கை. தெப்பத்தின் பாதை ஆற்று நீர் கையில் உள்ளது போல், நமது வாழ்க்கை பாதை முன்பே தீர்மானிக்கப்பட்ட நியதி அடிப்படையில் ஆனது. எனவே அருஞ்செயல் செய்தார் என்று பெரியோர் என்று வியத்தலும் தேவை இல்லை. திறமை இல்லாதவர் , சிறியோர் என்று இகழ்தலும் தேவை இல்லை என்று கூறுகின்றது இப்பாட்டு.

மீண்டும் ஒரு முறை பி.பி.சியின் காணொளியை பாருங்கள்!. ஆசீவகம் மற்றும் நியதிக்கொள்கை பற்றி படியுங்கள்!! கணியன் பூங்குன்றனாரின் பாடலை படியுங்கள். இவற்றுக்கிடையே உள்ள ஒப்புமையை காணுங்கள்.

கிராம எல்லையில் வீற்றிருக்கும்ம் ஐயனார், ஆசீவகக் கடவுள் என்பது பேராசிரியர் நெடுஞ்செழியன் அவர்களின் கூற்று

Thursday, May 07, 2020

மனிதனையும், தாவரத்தையும் வேறுபடுத்தும் இரும்பு (Fe)

மனித உறுப்புகளில் மிக முக்கியமானது இரத்தம். இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் ஆக்சிஜனை உடல் முழுதும் கொண்டு செல்ல உதவுகிறது. தாவரத்தில் மிக முக்கியமானது பச்சையம் (Chlorophyl) . இது சூரிய ஒளியிலிருந்து உணவை தயாரிக்க உதவுகிறது. விலங்கு மற்றும் தாவரத்தில் முக்கியப் பங்காற்றும் இரு வேறு அங்கங்களுக்கிடையே உள்ள ஒற்றுமை நம்மை வியக்க வைக்கும். இந்த இரண்டின் மூலக்கூறு அமைப்புகளுமே ஒன்றே ஆகும். அவற்றில் ஒரே ஒரு வேறுபாடு தான் . பச்சையத்தின் நடுவில் உள்ள தாது (Mineral) மெக்னீசியம் (Mg). ஹீமோகுளோபினின் நடுவில் உள்ள தாது இரும்பு (Fe). ஒரு சிறு வேறுபாடு கூட செயல்பாடுகளில் எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்தும் என்பது ஆச்சர்யமாக உள்ளது. ( கொரோனோ வைரஸில் திடீர் மாற்றத்தினால் (Mutation) பல்வேறு சிறு மாற்றங்கள் ஏற்படுகிறது என்று படித்த போது ஏனோ நினைவுக்கு வந்தது)