Friday, December 28, 2012

மங்கோலிய உணவகம் - Create Your Own Dish

ஒரு காலத்தில்  ஸ்டெப்பி புல்வெளிகளில் நாடோடிகளாக வாழ்ந்த மங்கோலியர்களின் உணவு வகைகளில் வேட்டையாட பட்ட விலங்குகளின் மாமிசம் முக்கிய பங்கு வகித்தது. பெரும்பாலும் வேட்டையாடபட்ட விலங்குகளை தீயில் வாட்டி அல்லது வேகவைத்து அப்படியே உண்ணும் பழக்கம் உள்ளவர்கள் மங்கோலியர்கள். மங்கோலியர்களின் உணவு வகைகளை அனைவரும் உண்ணுமாறு மக்கள்  ரசனைகேற்ப நூதன முறையில் "Create Your Own Dish" என்ற முறையை  மேலை நாடுகளில் அறிமுகபடுத்தி தங்களுக்கென்று ஒரு தனி தன்மையை ஏற்படுத்தி விட்டனர் மங்கோலியர்கள்.

மங்கோலிய உணவகங்களில் நுழைந்தவுடன் நீங்கள் கையில் இரண்டு கிண்ணங்களை எடுத்து கொள்ள வேண்டும். ஒரு கிண்ணத்தில் உங்களுக்கு பிடித்த மாமிச உணவுகளை வேண்டிய அளவு எடுத்து கொள்ள வேண்டும். சிக்கன்,ஆடு,மாடு,பன்றி இறால் என அனைத்து வகை மாமிசங்களும் வைக்க பட்டிருக்கும் .(கிண்ணம் கொள்ளும் அளவு மட்டும்!) உங்களுக்கு பிடித்த மாமிசத்தை வேண்டிய அளவு எடுக்களாம். சைவ உணவு உண்போர் வேண்டிய அளவு நூடுள்ஸ் எடுத்து கொள்ளளாம்.

காய் கறிகளும், மாமிசங்களும்
 
அடுத்து காய்கறிகளின் பகுதி. இங்கு கேரட்,பிராகோலி,வெங்காயம், பீன்ஸ் முலை, டோபு,காளான், செலரி என பல காய்கறிகள் குவிந்திருக்கும். இன்னொரு கிண்ணத்தில் வேண்டிய காய்கறிகளை நிரப்பி கொண்டு அடுத்த முக்கிய பகுதிக்கு செல்ல வேண்டும்.மாமிச பிரியர்கள் இரண்டு கிண்ணத்திலும் மாமிசத்தை எடுத்து கொள்ளளாம். உங்கள் விருப்பம் போல் அங்கு உள்ள எந்த காய் கறி மற்றும் மாமிசத்தையும் இரண்டு கிண்ணங்களில் நிரப்பி கொள்ளளாம்.
 
அடுத்து பலவகை Sauceகள் வரிசையாக அடுக்கி வைக்கபட்டிருக்கும். இனிப்பு, உரைப்பு,புளிப்பு என அனைத்து வகை களும் இங்கு இருக்கும். உங்களின் விருப்பம் போல் வேண்டிய sauceயை வேண்டிய அளவு எடுத்து உங்கள் உணவின் சுவையை நீங்களே முடிவு செய்யலாம்.

எத்தனை வகையான Sauce! Decide பண்றது ரொம்ப கஷ்டம்!

அங்கு இருக்கும் ஒரு சில sauce வகைகள் இனிப்பு மற்றும் புளிப்பு sauce  ,அதி கார sauce  ,தேன் சார்ந்த இனிப்பு sauce ,சிப்பி sauce  ,கரி sauce  ,இஞ்சி சாறு, பூண்டு சாறு,சோயா sauce  மற்றும் பல!.  அது தவிர பார்பிக்யூ எண்ணெய், நல்லெணெய், கார எண்ணெய் என பல்வேறு எண்ணெய்களும் உள்ளன.
நமது சுவைகேற்ப தேவையான sauce மற்றும் எண்ணெய்களை வேண்டிய அளவு கிண்ணங்களில் கலந்து கொண்டு அடுத்த பகுதிக்கு செல்ல வேண்டும்.

உங்கள் இரண்டு கிண்ணங்களை அடுத்த பகுதியில் இருக்கும் சமைப்பவரிடம் கொடுத்தால் அவர் கிண்ணத்தில் உள்ள உணவு பொருட்களை ஒன்றாக கலந்து சூடான கல்லில் (நம்ப ஊர் கொத்து பரோட் டா கல் போல ) கொட்டி சுமார் 2 - 3 நிமிடங்கள் நம் கண் முன்னே சமைத்துஒரு பெரிய கிண்ணத்தில் போட்டு கொடுப்பார்.
கண் முன் சமையல்

உணவு ரெடி!

ஒருவர் நிறைவாக உண்ண கூடிய அளவுக்கு உணவு இருக்கும். அது மட்டுமன்றி ,நூடுள்ஸ்,Fried Rice,Spring rolls,  சமைத்து வைக்க பட்ட பல்வேறு மாமிச வகைகளும், சூப் வகைகளும் வேண்டிய அளவு எடுத்து கொள்ளளாம்.

இன்ன பிற

ஒரு வகையான நூடுள்ஸை நமது சுவைகேற்ப தயாரித்து உண்பது போல் ஒரு அனுபவம் கிடைக்கும். பொதுவாக உணவகங்களில் உண்டபின் உப்பு சரியில்லை, உரைப்பு சரியில்லை, புளிப்பு தூக்கல் என குறை கூறும் வழக்கம் உள்ளவர்கள் இங்கு ஒன்றும் சொல்ல முடியாது. ஏனெனில் இங்கு நீங்கள் தான் Chef!

பின் குறிப்பு - தீவிர சைவ உணவு முறையை பின் பற்றுவோருக்கு ஏற்ற உணவகம் மங்கோலிய உணவகம் இல்லை. ஏனெனில் உங்கள் கண் முன்னே மாமிச உணவு சமைத்த கல்லிலேயே உங்கள் சைவ உணவையும் சமைப்பார்கள்! மற்ற உணவகங்களின் சமையல் எப்படியோ?. ஏனென்றால் அதை நாம் பார்க்க இயலாது.இங்கு நாம் கண் முன்னே பார்க்கின்றோம்.
 

Sunday, December 16, 2012

தீயணைப்பு நிலையத்தில் ஒரு நாள்


சிறுவயதில் சிகப்பு நிறம் என்றவுடன் மனதில் நினைவிற்கு உடனே வருவது தீயணைப்பு வண்டியாகத்தான் இருக்கும். வளர்ந்தவுடன் தீயணைப்பு வீரர்களின் சாகசத்தை படித்த போதும், தொலைகாட்சிகளில் பார்த்த போதும் அவர்கள் மீது மரியாதையும் ஆச்சர்யமும் ஏற்பட்டது. எனது குழந்தையிடம் வளர்ந்தவுடன் என்னவாக ஆக நினைக்கிறாய் என்று பள்ளியில் கேட்ட போது முதலில் சொன்னது தான் ஒரு தீ அணைப்பு வீரராக ஆக வேண்டும் என்பதே!. தற்போதைய கிறிஸ்துமஸ் விழா நாட்களில் எங்கள் வீட்டுக்கு அருகில் உள்ள தீயணைப்பு நிலையத்தில் "Holiday with Santa" என்ற  நிகழ்ச்சியை நடத்தி அதன் மூலம் வரும் வருமானத்தை தொண்டு நிறுவனங்களுக்கு கொடுக்க முடிவு செய்திருந்தார்கள். தீயணைப்பு நிலையத்திற்கு செல்ல வேண்டும் என்ற என் மகளின் நீண்ட நாள் ஆசையை நிறைவேற்ற இது ஒரு நல்ல தருணமாக அமைந்தது. தீயணைப்பு நிலையத்தில் கண்ட மற்றும் கேட்ட செய்திகளை இந்த பதிவில் இட்டால் உபயோகமாக இருக்கும் என்று நினைத்ததால் இந்த பதிவிடுகிறேன்.
Santa உடன் தீயணைப்பு நிலையத்தில் ஒரு நாள்

பழைய தீயணைப்பு வண்டி


ஒவ்வொரு தீயணைப்பு நிலையத்திற்கும் ஒரு குறியீட்டு எண் இருக்கும். அந்த எண், தீயணைப்பு வீரர்களின் சாதனங்களில் இருக்கும். தீயை அணைக்கும் போது எந்த வீரர் எந்த வாகனம்/பகுதியிலிருந்து வந்தவர் என்று தூரத்திலிருந்தே அறிந்து கொள்ள இது உதவும்.

தீயணைப்பு வீரரின் உடை பிரத்யோகமாக வடிவமைக்க பட்டிருக்கும். அது தீ மற்றும் புகையிலிருந்து வீரரை காப்பாற்ற மிகவும் உதவிகரமாக இருக்கும். அவர்களின் உடை சுமார் 40 பவுண்டுகள் இருக்கும். விபத்து பற்றிய செய்தி கிடைத்தவுடன் இந்த உடையை சுமார் 30 வினாடிகளில் அணிய வேண்டும். அதற்கு ஏற்றார் போல் தங்கள் உடையை turnouts என்று சொல்ல கூடிய வகையில் திருப்பி வைத்திருப்பார்கள். அது மட்டுமின்றி இந்த உடையுடனேயே அவர்களுடைய பூட்சும் இணைந்திருக்கும். எனவே பூட்சுக்குள் காலைவிட்டு உடையை மேலே விரைவாக இழுத்து கொண்டு , குறுகிய நேரத்தில் தங்களை தாயார் படுத்தி கொள்வர்.

Boots உடன் இணைந்த உடை

தீயணைப்பு வீரரின் தலை கவசத்தில் விளக்கு பொருத்த பட்டிருக்கும். இருட்டில் விபத்தில் சிக்கியுள்ளவர்களை கண்டு பிடிக்க உதவும். சாதாரண தொப்பிகளில் சூரிய ஒளியிலிருந்து காத்து கொள்ள முன்பகுதியில் நீண்டிருப்பதை போல தீயணைப்பு வீரரின் தலை கவசத்தின் பின் பகுதி நீண்டிருக்கும். இது மேலிருந்து விழ கூடிய தீ மற்றும் பிற பொருட்கள் அவர்கள் தோள் பட்டை மற்றும் முதுகு பகுதியில் விழாதவாறு காக்கும்.

முக கவசம்

தீயணைப்பு வீரரின் முக கவசம் மேல் அணிய கூடிய அங்கியின் (hood) பெயர் Nomex hood  அது தலை கவசம் மற்றும் முகமூடியால் மறைக்க முடியாத பகுதியை தீ மற்றும் அனலிலிருந்து காக்க உதவுகிறது.

Nomex hood

தீயணைப்பு வீரர்கள் உபயோகபடுத்தும் ஆக்சிசன் சிலிண்டர் போல் தோற்றம் அளிக்கும் சிலிண்டரில் சாதாரண காற்று தான் அடைக்க பட்டிருக்கும். இதற்கு Self-Contained Breathing Apparatus   என்று பெயர். இது சிலிண்டர், அழுத்தத்தை கட்டு படுத்த கூடிய வால்வு மற்றும் முக கவசம் ஆகிய மூன்றும் சேர்ந்ததாகும். இந்த சிலிண்டரில் உள்ள வாயு சுமார் 45 நிமிடத்துக்கு மட்டும் போதுமானதாகும். கடுமையான புகை மற்றும் பிற விஷ வாயுக்களிலிருந்து பாதுகாக்க இது உதவும்.

Self-Contained Breathing Apparatus  

முக கவசத்தில் ஒலி பெருக்கி பொருத்த பட்டிருக்கும். இது அவர்கள் பேசுவதை மற்றவர்கள் கேட்க உதவும். தீ அணைப்பு வீரருக்கு ஆபத்து ஏற்பட்டு நகர முடியாத சூழ்னிலை ஏற்படும் போது  Scott Electronic Management System என்ற கருவி ஒலி எழுப்ப ஆரம்பிக்கும். அதன் மூலம் ஆபத்தில் இருக்கும் வீரரை பிறர் தேடி கண்டுபிடித்து காப்பாற்ற உதவும்.



இந்த நிகழ்ச்சியின் போது குழந்தைகளிடம் தீயணைப்பு வீரர்கள் அன்புடன் பழகி, அவர்கள் கேள்விகளுக்கு பதிலளித்து அவர்கள் உடைகள் மற்றும் கவசத்தை தொட்டு பார்க்க அனுமதித்து, அவர்களுக்கு பிடித்த திண் பண்டங்களை கொடுத்தும் நட்புடன் பழகினர்.குழந்தைகளை தீயணைப்பு வண்டியில் ஏறி சென்று பார்க்கவும் அனுமதித்தார்கள்.


வாங்க நட்புடன் பழகலாம்!

பொதுவாக தீ விபத்து நடக்கும் இடத்தில் மாட்டி கொண்டுள்ள குழந்தைகள் தீயணைப்பு வீரர்களின் உடை மற்றும் கவசங்களை கண்டு அஞ்சி ஓடவோ அவர்களிடமிருந்து மறைந்து கொள்ளவோ வாய்ப்பு அதிகம். இது போன்ற நிகழ்ச்சிகள் மூலம் குழந்தைகள்  தீயணைப்பு வீரர்களிடம் நட்புடன்,அவர்கள் கவசத்தை கண்டு அஞ்சாமல், பழக்கபடுத்தி கொள்ள உதவுகிறது. விபத்து தருணங்களில் குழந்தைகள் உடனையாக அவர்களை அடையாளம் கண்டு கொள்ள உதவியாக உள்ளது.

செய்முறை விளக்கம் .

அது மட்டுமின்றி தீ விபத்து நடக்கும் போது குழந்தை மறைந்திருப்பது போல் மறைய வைத்து எவ்வாறு குழந்தையை காப்பாற்றி வருவார்கள் என்று நடைமுறை பயிற்சி செய்து காட்டினர். 

தீ விபத்தின் போது கடை பிடிக்க வேண்டிய ஒரு முக்கிய குறிப்பையும் சொன்னார்கள்.  தீ விதத்தில் புகை எப்போதும் மேல் நோக்கி செல்வதால் தரையில் குனிந்தபடியே தவழ்ந்து தவழ்ந்து பாதுகாப்பான பகுதிக்கு  செல்ல வேண்டும்.

--

Wednesday, December 05, 2012

எழில் மிகு ஹவாய் 6 - பசுமை அழகு

ஹவாய் என்றவுடன் அனைவரின் மனதிலும் முதலில் வருவது கடல் மற்றும் நீர் விளையாட்டுகள் தான்.ஆனால் ஹவாய் தீவின் பசுமை கொஞ்சும் இயற்கை அழகை வார்த்தையால் வர்ணிக்க முடியாது.ஜுராசிக் பார்க் திரைபடத்தில் வரும் அடர்ந்த காடும் அருவிகளும் ஹவாய் தீவில் (கௌவா'யி kaua'i) தான் படமாக்க பட்டன.பெருந்தீவின் மேற்கு கடற்கரை பகுதியான கோனா கடற்கரை பகுதி வறண்ட வானிலையுடன் கடல் சார்ந்த விளையாட்டுகளுக்கு ஏற்றதாக இருக்கும். பெருந்தீவின் கிழக்கு பகுதி பெரு மழை பொழிவுடன் அடர்ந்த வெப்ப மண்டல மழை காடுகளை கொண்டதாக உள்ளது. உலகில் உள்ள 13 வகையான சீதோஷ்ண மண்டலங்களில் 11 வகையான சீதோஷ்ண மண்டலங்கள் பெருந்தீவில் உள்ளன. அதன் விளைவாக பாலைவன செடிகளையும் காணலாம். அழகிய புல்வெளிகளையும் காணலாம். தோட்ட பயிர்களையும் காணலாம். அடர்ந்த காடுகளையும் காணலாம். இவை அனைத்தையும் 4000 சதுர மைல்களுக்குள்ளே கண்டு களிக்க முடியும். பெருந்தீவு முழுவதையும் சுற்றி காண்பிக்க ஒரு நாள் பேருந்து மூலம் செல்லகூடிய டூர் வசதி உள்ளது. அந்த சுற்றுல்லாவில் சென்றால் சுமார் 30 நிமிடத்துக்கு ஒன்றாக புது புது சீதோஷ்ண நிலையை காணமுடியும். அவ்வாறு செல்லும் போது வெயில்/குளிர்/மழை அனைத்தையும் தாங்க கூடிய வெவ்வேறு வகை உடைகளை ஒன்றன் மேல் ஒன்றாக அணிந்து செல்வது நலம்!

 

பெருந்தீவின் கிழக்கு கடற்கரை பகுதியில் காரில் சென்றாலே கண்ணுக்கினிய வெப்பமண்டல காடுகளை ரசித்து கொண்டே செல்லலாம். ஹெலிகாப்டர் சுற்றுல்லா மூலம் வானிலிருந்து இயற்கை அழகை கண்டு மகிழலாம்.பெருந்தீவின் மிக பெரிய நீர்வீழ்ச்சியான அகாஅகா நீர்வீழ்ச்சியை காரில் சென்று பார்க்கலாம். நீர்வீழ்ச்சிக்கு அருகில் சென்று பார்க்க வேண்டுமானால் கடினமான டிரக்கிங் செய்து மலை/காடுகளின் வழியே நடந்து தான் பார்க்க வேண்டும். கம்பி சருக்களில் சறுக்கிய படியே zipline மூலம் அகாஅகா நீர்வீழ்ச்சியின் அழகை மற்றுமொரு கோணத்தில் காண்பது மறக்க முடியாமல் இருக்கும்.பெருந்தீவில் நீர்வீழ்ச்சிகளின் எண்ணிக்கைக்கும் அழகுக்கும் குறைச்சல் இல்லை. கிழக்கு கடற்கரை பகுதி முழுவதும் கணக்கிலடங்கா நீர்வீழ்ச்சிகள் உள்ளன. ஆனால் இவற்றில் பலவற்றை மலையேற்றம் மூலம் தான் அடைய முடியும்
 
 
அகாஅகா நீர்வீழ்ச்சி
 
வானவில் நீர்வீழ்ச்சி
 பெருந்தீவின் பசுமை அழகை முழுமையாக கண்டுகளிக்க செல்ல வேண்டிய இடம் வைப்பியோ பள்ளதாக்கு(Waipio Valley).ஹவாய் பூர்வ குடியினரின் முக்கிய அரசியல் மற்றும் கலாச்சார மையமாக திகழ்ந்தது இந்த பள்ளதாக்கு.தாஜ்மகாலை பார்த்தவுடன் எப்படி மனதிற்குள் ஒரு பிரமிப்பு ஏற்படுமோ அது போல் வைப்பியோ பள்ளதாக்கை பார்த்தவுடன் மனதுக்குள் ஒரு பிரமிப்பு ஏற்படுவது தவிர்க்க முடியாதது.நீல நிற கடற்கரை ஓரத்தில் பசுமையான புல்வெளிகளும், அதனருகில் பசுமையான மலையும் அதிலிருந்து கடல் நோக்கி வீழும் மிக பெரிய நீர் வீழ்ச்சியையும் காண கண் கோடி வேண்டும்.இந்த பள்ளதாக்கை முழுமையாக கண்டுகளிக்க வைப்பியோ பள்ளதாக்கு பார்வையாளர் பகுதிக்கு (Waipio valley lookout) காரில் பயணித்து சென்று பார்க்களாம்.இந்த பள்ளதாக்கினுள் செல்ல சாதாரண கார்களால் முடியாது. கனரக மோட்டார் வாகனங்களை கொண்டு ATV (All-terrain vehicle) சுற்றுல்லா அழைத்து செல்ல குழுக்குள் உள்ளன.இதன் மூலம் நீங்களே இந்த வாகனங்களை புல்வெளிகள், அடர்ந்த காடுகள் வழியே ஓட்டி சென்று இயற்கை அழகை கண்டு ரசிக்க முடியும். இந்த சுற்றுல்லாவிற்கு பொருள் செலவு அதிகமானாலும் இயற்கை ஆர்வலர்கள் கண்டிப்பாக தவறவிட கூடாத ஒன்று.(2 வயதிற்கும் குறைவான குழந்தைகளை அழைத்து செல்ல முடியாததால் என்னால் இந்த சுற்றுல்லாவில் செல்ல இயலவில்லை).





சோக சரித்திரம்

ஹவாய் தீவின் பசுமை அழகை என்ன தான் ரசித்தாலும் அதன் பின்னனியில் உள்ள சரித்திரத்தை பார்த்தால் வருத்தம் தான் மிஞ்சும். ஹவாய் தீவு பசுபிக் பெருங்கடலின் நடுவே பிற நிலபரப்புகளால் எளிதில் நெருங்க முடியாத அளவு தனித்து அமைந்துள்ளது. பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன் தென் கிழக்கு ஆசியாவிலிருந்து பெர்ன் செடியின் ஸ்போர் பல்லாயிரம் மைல்கள் காற்றில் பயணித்து எரிமலை லாவா படிமத்தில் விழுந்து உயிரின தோற்றத்தை ஏற்படுத்தியது. பூச்சிகளும்,விதைகளும் சிலந்திகளும் காற்றின் மூலம் ஹவாயை அடைந்தது.இடம்பெயர் பறவைகள் விதைகளையும், கடல் மூலம் உப்பு எதிர்ப்பு தன்மை கொண்ட விதை, செடி, பூச்சிகளும் இத்தீவை வந்தடைந்தன. சுமார் 32 மில்லியன் ஆண்டுகளாக பரிணாம முறைபடி புது புது வகையான உயிர்கள் தோன்றின. அதாவது சுமார் 30 வகை வெளியூர் பறவையிலிருந்து 110 வகை பறவைகள் பரிணமித்தன.280 பூக்கும் செடியிலிருந்து1100 வகை செடிகள் தோன்றின.

உலகின் பிற பகுதியிலிருந்து வந்த உயிரிணங்கள் இங்கு தனக்கு மிக சில எதிரிகளே(Predator and parasite) இருக்கும் சூழ்நிலையில் வளர்ந்தன்.அதன் விளைவாக எதிரிகளிடமிருந்து தங்களை தற்காத்து கொள்ளும் பரிணாம தகவமைப்புகள் அவைகளுக்கு தேவையில்லாமல் இருந்தது. அதன் விளைவாக புதிதாக தோன்றிய உயிரிணங்கள் அந்த தகவமைப்புகளை இழக்க தொடங்கின. உதாரணமாக பறக்கவே முடியாத பறவைகளும், வாசனையையே வெளிபடுத்தாத stink bug போன்றவைகளும் தோன்றின,


காட்டு இஞ்சி
சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் பாலினேசியன் மக்கள் இந்த தீவிற்கு வர ஆரம்பித்த பின் நிலமை மாற ஆரம்பித்தது. காடுகள் அழிக்க பட தொடங்கின. அவர்கள் கொண்டு வந்த மிருகங்களும், செடிகளும் பல்கி பெருகின. அதன் சூழியல் விளைவு மோசமாக இருந்தது. உதாரணமாக பாலினேசியன் மக்களின் பன்னிகள் பெர்ன்(fern) செடிகளையும், ஒகியா காடுகளையும் அழித்தன. பன்னிகள் கூடாரத்திலிருந்து பல்கி பெருகிய கொசுக்கள் பறவை மலேரியா மற்றும் பிற நோய்களை பறவைகளுக்கு பரப்பின. பூனை, எலி போன்றவை பறவைகள் மற்றும் முட்டையை தின்று தீர்த்தன. காட்டு இஞ்சி போன்ற செடிகள் விரைவாக பெருகி உள்ளூர் செடிகளை அழித்தன.அதன் பிறகு ஐரோப்பிய மகக்ளின் வருகைக்கு பிறகு ஏற்பட்ட இயற்கை அழிவு பற்றி எழுத தேவை இல்லை.கடந்த சில நூற்றாண்டுகளில் கரும்பு தோட்டத்தை மிக பெரிய அளவில் ஏற்படுத்த காடுகள் அழிக்க பட்டது. ஜப்பான், பிலிபைன்ஸ் போன்ற நாடுகளில் இருந்து தொழிலாளர்கள் கொண்டு வரபட்டனர். இந்த பேரழிவுகளையும் மீறி மிஞ்சிய உயிரினங்களும், அறிமுக படுத்த பட்ட செடி கொடிகளின் அழகுமே மறக்க முடியாததாக இருக்கிறது என்றால் மிகையாகாது.

ஹவாய் தாவரவியல் பூங்கா

உலகில் பல்வேறு வெப்ப மண்டல காடுகளில் வளரும் அழகிய ஆர்கிட்கள் மற்றும் மலர் செடிகளை ஹவாய் தாவரவியல் பூங்காவில் வைத்துள்ளனர். வித விதமான, பல்வேறு  வண்ண மய மலர்கள் மனதை மயக்கும் வண்ணம் உள்ளன. இந்த பூங்கா கடற்கரை ஓரம் மலையை ஒட்டி ரம்மியமான சூழ்நிலையில்  அமைந்து உள்ளது.சுமார் 125 தாவர குடும்பத்தை சேர்ந்த 2000க்கும் மேற்பட்ட செடிவகைகள் இங்கு உள்ளன.








மொத்தத்தில் ஹவாய் பெருந்தீவு இயற்கை ஆர்வலர்களின் ஆசையை முழுமையாக பூர்த்தி செய்யும் என்பதில் சந்தேகமே இல்லை.

இந்தியாவில் உள்ள மனுதர்மத்தை ஒத்த  வர்ணாசிரம முறை ஹவாய் பழங்குடியினரிடமும் இருந்தது. ஹவாய் பழங்குடியினரின் மத நம்பிக்கையை பற்றி பிரிதொரு பதிவில் காண்போம்

முந்தய பதிவு

எழில் மிகு ஹவாய் - 5 எரிமலை எப்படி வெடிக்கும்?
--